Saturday, November 21, 2015

கண்ணன் கதைகள் (60) - கைசிக ஏகாதசி / நம்பாடுவான்

Image courtesy: Devathirajan swami


கரண்ட மாடு பொய்கையுள் கடும்பனைப் பெரும் பழம்
புரண்டு வீழ வாளை பாய் குறுங்குடி நெடுந்தகாய்
திரண்டு தோளி ரணியன் சினங்கொளாக மொன்றையும்
இரண்டு கூறு செய்துகந்த சிங்க 
மென்ப துன்னையே
                                                                                       -திருமழிசையாழ்வார்!

திருக்குறுங்குடியின் அருகே உள்ள மகேந்திரகிரி மலையடிவாரத்தில் வசித்து வந்த ஹரிஜன வகுப்பை சேர்ந்தவர் நம்பாடுவான் என்னும் பாணன். வடிவழகிய நம்பியின் மேல் மிகவும் பக்தி கொண்டவர். அக்காலத்தில் அவருக்கு கோயிலுக்கு செல்ல அனுமதியில்லாமல் இருந்தது. கோயிலின் வாசலிலிருந்து பகவானை பார்க்க முடியாது. ஆயினும், வருத்தப்படாமல் தினமும் அதிகாலையில் நீராடிவிட்டு, கைசிகம் என்ற பண்ணில் (பைரவி ராகம்) திருக்குறுங்குடி நம்பியின் புகழை இசைத்து, திருப்பள்ளியெழுப்பும் சேவையை செய்து வந்தார். அவ்விதம் ஒரு நாள், கார்த்திகை மாதம் சுக்ல பட்ச ஏகாதசியன்று கோவிலுக்கு சென்றபொழுது, ஒரு பிரம்ம ராக்ஷஸன் அவரைத் தடுத்து, “ நீ எனக்கு உணவாக வேண்டும்” என்றது. நம்பாடுவானோ,"விரதம் முடித்துவிட்டு பெருமாளை வழிபட்டபின் உனக்கு உணவாகிறேன்" என்று சொல்ல, பிரம்ம ராக்ஷஸன் அதை நம்பவில்லை. அதற்கு நம்பாடுவான்,"பெருமாளின் உண்மையான பக்தன் பொய் சொல்லமாட்டான்'' என்று கூறி பதினெட்டு விதமான சத்தியங்களைச் செய்கிறான். 16 சத்தியங்களைச் செய்தும் ராக்ஷஸன் நம்பாடுவானை விடவில்லை. 17-வதாக நம்பாடுவான்," எவன் ஸர்வவ்யாபியான வாசுதேவனை ஆராதனை பண்ணாமல் இதர தேவதைகளை உபாஸிக்கிறானோ அவனது பாவத்தை அடைவேன்" என்று சொன்னதும் தனது பிடியை விட்டது. பிறகு நம்பாடுவான், 18--வதாக ,"எல்லா உயிரினங்களையும், ஜனங்களையும் காப்பவனும், இயக்குபவனும் , தேவர்கள், முனிவர்கள் முதலியோரால் ஆராதிக்கப்படுபவனுமான அந்த ஸ்ரீமன் நாராயணனையும் மற்ற தெய்வங்களையும் சமமாக பாவிப்பதால் வரும் பாவத்தை நான் அடையாக கடவேன்" என்று சொன்னான். இந்த வார்த்தையைக் கேட்டதும், பிரம்ம ராக்ஷஸ்," சரி சரி சீக்கிரம் உனது விரதத்தை முடித்துவிட்டு வா" என்று அவனை அனுப்பியது.

நம்பாடுவான் கோவிலுக்கு ஓடிச் சென்று, " பெருமானே! இனி உம்மைப் பாடவே முடியாதோ? நான் உம்மைப் பார்க்கவே முடியாதோ ?" என்று எண்ணிக் கொண்டு, கைசிகப் பண்ணை உருக்கமாகப் பாடினார். அப்போது பெருமாள், த்வஜஸ்தம்பத்தை விலகி இருக்கச் சொல்லி நம்பாடுவானுக்கு தரிசனம் தந்தார். திருக்குறுங்குடியில் மற்ற ஸ்தலங்களைப் போலல்லாமல் த்வஜஸ்தம்பம் சற்று விலகி இருப்பதை இப்போதும் காணலாம்.

பிறகு, தான் சத்தியம் செய்தபடி பிரம்ம ராக்ஷஸை நோக்கிச் சென்றபோது, திருக்குறுங்குடி எம்பெருமான் , ஒரு கிழப்பிராம்மணன் வேடத்தில் நம்பாடுவானுக்கு எதிரே தோன்றி, "இங்கே ஒரு பிரம்ம ராக்ஷஸ் இருக்கிறது. அதன் பசிக்கு இரையாகாமல் வேறு வழி செல்" என்று கூறினார். ஆனால், நம்பாடுவான் அதை மறுத்து, அந்த ராக்ஷஸனுக்கு உணவாவதற்காகவே செல்கிறேன் என்று கூறினான். இதைக்கேட்ட பிராம்மணன்,"ஆபத்துக் காலத்திலும், பெண்களுக்குத் திருமணம் செய்ய வேண்டிய சந்தர்ப்பத்திலும், பெண்களுடன் ஏகாந்தமாய் இருக்கும்போதும் பொய் சொல்வதும், சத்தியம் செய்வதும், பாபமாகாது" என்று கூற, நம்பாடுவான்,"நான் செய்து கொடுத்த சத்தியத்தை ஒரு போதும் மீறமாட்டேன்" என்று கூறி, வாக்களித்தபடி பிரம்ம ராக்ஷஸனிடம் சென்று என்னை உண்டு உன் பசியைப் போக்கிக் கொள் என்று கூறினான். நம்பாடுவானைப் பார்த்த பிரம்ம ராக்ஷஸ், "இப்போது எனக்குப் பசியே இல்லை. நான் என் மனதை மாற்றிக்கொண்டுவிட்டேன். நீ விரதத்தால் பெற்ற பலனை எனக்குக் கொடு என்று கேட்க, நம்பாடுவான் மறுத்தான். இன்றைய தினம் உனக்குக் கிடைத்த விரதப் பலனில் பாதியையாவது எனக்குக் கொடுத்தால் நான் சாபவிமோசனம் பெற்று சுய உருவைப் பெறுவேன்'' என்றது. நம்பாடுவான், "உனக்கு ஏன் இந்த பிரம்ம ராட்சச உருவம் வந்தது? என்று கேட்க, பிரம்ம ராக்ஷஸன் தனது கதையைக் கூறினான். "நான் முற்பிறவியில் யோகசர்மா என்ற அந்தணன். யாகத்தை இழிவாகக் கருதிய நான், ஒரு யக்ஞத்தைத் தவறாகச் செய்து கொடுத்தேன். யாகத்தின் நடுவில் இறந்தேன். அதனால் , இவ்வாறு அலைகிறேன்” என்றது. மேலும், உனது தரிசனத்தால் எனக்கு முன் ஜன்ம ஞாபகம் உண்டானது என்றும் கூறியது.

நம்பாடுவான், கைசிகப் பண்ணினால் பகவானைப் பாடிய தன் புண்ணிய பலனில் பாதியை கைசிக துவாதசியன்று பிரம்மராட்சஸனுக்கு தத்தம் செய்துகொடுக்க, அந்த பிரம்ம ராட்சதனின் சாபம் நீங்கியது. நம்பாடுவானும் பலகாலம் பெருமாளை போற்றிப் பாடி மோக்ஷத்தை அடைந்தான்.

இந்த வரலாற்றை வராகமூர்த்தியே தன் மடியிலிருந்த பிராட்டிக்கு உரைத்ததாக புராணம் கூறுகிறது. இன்றும், இந்தப் புராணம் திருக்குறுங்குடியில் நாடக ரூபமாக கைசிக ஏகாதசியன்று இரவு நடக்கின்றது. இதில் நம்பாடுவான், பிரம்ம ராட்சசன், நம்பிக் கிழவன் ஆகிய மூன்று பாத்திரங்களில் நடிப்பவர்கள் 10 நாட்கள் விரதம் அனுஷ்டிக்கிறார்கள். ஒவ்வொரு கார்த்திகை மாதம் சுக்லபக்ஷ ஏகாதசி அன்று எல்லா வைஷ்ணவ கோயில்களிலும் கைசிக புராணம் இன்றும் வாசிக்கப்படுகிறது.

இந்த வரலாற்றை கைசிக ஏகாதசி தினமான இன்று (22-11-2015 ) படித்தாலும் கேட்டாலும் முன்னோர் சாபமும், துன்பங்களும் அகலும். பெருமாள் அருளும் புண்ணியமும் கிடைக்கும். நாமும் இந்த வரலாற்றைப் படித்து, திருக்குறுங்குடி நம்பியின் அனுக்ரஹத்தைப் பெறுவோமாக!

நம்பாடுவானுக்காக நகர்ந்த த்வஜஸ்தம்பம் : 

நம்பாடுவான் பிரம்மராக்ஷஸுக்கு சத்தியம் செய்து கொடுத்தபோது 18 வகை பாவங்களைக் குறிப்பிடுகிறான். அவற்றை வராக புராணத்திலே காணலாம். அவையாவன:

1. சத்தியம் தவறுதல்

2. பிறன் மனைவியிடம் இணைதல்.

3. தன்னுடன் உணவருந்துபவர்களிடம் ஏற்றத் தாழ்வுகளைக் காட்டி, தனக்கு சிறந்ததையும், உடன் உண்பவருக்கு அற்பமானதையும் அளித்தல்.

4. பிறருக்கு தானம் செய்த பொருளை திரும்பப்பெறுதல்.

5. அழகுள்ள பெண்ணை இளமையில் மணந்து, அனுபவித்து, வயதான காலத்தில் குற்றம் கூறி அவளைக் கைவிடுதல்.

6. அமாவாசையன்று மனைவியிடம் சுகம் அனுபவித்தல்.

7. உணவு கொடுத்து பசியாற்றியவனை நிந்தித்தல்.

8. ஒருவனுக்கு தன் பெண்ணை திருமணம் செய்து தருவதாக வாக்களித்து விட்டு, அவ்வாறு செய்யாமல் ஏமாற்றுதல்.

9. சஷ்டி, அஷ்டமி, அமாவாசை, சதுர்த்தி நாட்களில் ஸ்நானம் செய்யாமல் உண்ணுதல்.

10. தானம் தருவதாக வாக்களித்து, பின் தானம் செய்யாதிருத்தல்.

11. நண்பன் மனைவிமீது இச்சை கொள்ளுதல்.

12. குரு பத்தினி, மன்னன் மனைவி மீது காமம் கொள்ளுதல்.

13. இரண்டு மனைவியரை மணந்து, ஒருத்தியிடம் ஆசையும் இன்னொருத்தியை அலட்சியமாகத் தள்ளி வைத்தல்.

14. கற்புக்கரசியான தன் பத்தினியை யௌவனத்திலேயே புறக்கணித்தல்.

15. தாகத்துடன் வரும் பசுவைத் தண்ணீர் குடிக்க விடாமல் தடுத்தல்.

16. பிரம்மஹத்தி செய்தவன், பஞ்ச மகாபாவங்கள் செய்பவன் பெறும் பாபம்.

17. வாசுதேவனைவிட்டு இதர தெய்வங்களை ,தேவதைகளை உபாசனை செய்தல்.

18. ஸ்ரீமன் நாராயணனோடு மற்ற தெய்வங்களையும் மற்ற தேவதைகளையும் சமமாக நினைத்தல்.

மேற்கண்ட பாவங்களைச் செய்தவனுக்கு கிட்டும் பாவமும், தண்டனையும் , செய்த சத்தியத்தை மீறினால் என்னை வந்துசேரட்டும் என்கிறான் நம்பாடுவான்.

Monday, February 9, 2015

கண்ணன் கதைகள் (59) - குருவாயூரப்பனும் குந்துமணியும்

கண்ணன் கதைகள் (59) - குருவாயூரப்பனும் குந்துமணியும்,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,
குண்டுமணி சிவப்பு, கறுப்பு நிறங்களில் சிறிய உருண்டை வடிவில் இருக்கும். கேரளாவில் அநேகமாக அனைவரது இல்லங்களிலும் இந்த மரம் இருக்கும். மஞ்சாடி என்ற மரத்தில் இருந்து வரும் விதை என்பதால் இதை கேரளாவில் "மஞ்சாடிக்குரு" என்று சொல்வார்கள். நாங்கள் கோவையில் இருந்தபொழுது, சின்ன வயதில், பக்கத்தில் இருக்கும் பூங்காவிற்கு தினம் சென்று அங்கு இருக்கும் குண்டுமணிகளைப் பொறுக்கி வீட்டிற்கு எடுத்து வருவோம். பிறகு அதை நன்கு கழுவி "பல்லாங்குழி" விளையாட உபயோகப்படுத்துவோம். சென்ற வருடம் கூட கேரளாவில் ஒரு நண்பர் வீட்டிற்குச் சென்றிருந்தபொழுது நிறைய குண்டுமணிகளைப் பொறுக்கி வந்தோம். "

குருவாயூர் கோயிலில் ஒரு பெரிய உருளியில் குண்டுமணியை நிரப்பி வைத்திருப்பார்கள். இரண்டு கைகளாலும் அதை அளைந்து கொண்டு நோய்கள் குணமாகவும், குழந்தை வரம் வேண்டியும் மனதார பிரார்த்தனை செய்யவேண்டும். பிறகு மீண்டும் அதிலேயே போட்டு விட வேண்டும்.

நாங்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையன்றும் வேண்டிக்கொண்டு வீட்டிலேயே ஒரு சின்னப் பெட்டியில், 7 மிளகு, கொஞ்சம் கடுகு, 7 குந்துமணி, ஒண்ணேகால் ரூபாய் எடுத்து வைத்து, குருவாயூர் செல்லும்போது அதை அங்கு சமர்ப்பிப்பது வழக்கம்.

அது சரி. குருவாயூர் கோயிலில் இதற்கு அப்படி என்ன விசேஷம்? இதன் பின்னால் ஒரு சுவையான கதை உண்டு.

முன்னொரு காலத்தில் ஒரு வயதான பெண்மணி இருந்தாள். அவளுக்கு ஸ்ரீகுருவாயூரப்பன் மிகவும் இஷ்டமான தெய்வம். அவளுடைய ஊர் குருவாயூருக்கு மிகத் தொலைவில் இருந்தது. அவளை அழைத்துச் செல்வார் யாருமில்லை. பணவசதி கிடையாது. ஆனால் குழந்தைக் கண்ணனைக் காண வேண்டும் என்றும், அவனுக்கு ஏதாவது கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவளுக்குக் கொள்ளை ஆசை.

அவள் வீட்டில் மஞ்சாடி மரம் (குந்துமணி மரம்) இருந்தது. அதிலிருந்து நிறைய குண்டுமணிகள் கீழே விழும். அவற்றைச் சேகரித்து, நன்கு அலம்பி, துடைத்து ஒரு பை நிறைய சேர்த்து வைத்திருந்தாள்.

ஒரு நாள் கண்ணனைக் காண வேண்டும் என்ற ஆவல் மிகுதியால் பயணம் புறப்பட்டாள். வசதி படைத்தவள் அல்லவே ! அதனால் நடந்தே செல்லத்தீர்மானித்தாள். தொலை தூரம். வயது வேறு ஆகிவிட்டது. நடுநடுவே இளைப்பாறிக் கொள்வாள். ஸ்ரமமாக இருப்பினும் "கண்ணனைக்காணவும் அவனுக்கு குண்டுமணிகளைக் கொடுக்கவும் வேண்டுமே" என்று தொடர்ந்து பயணம் செய்தாள்.

ஒரு மண்டலம் பயணம் செய்து குருவாயூரை அடைந்தாள். கோவிலையும்அடைந்தாள். அவள் சென்ற நாள் அந்த மாதத்தின் முதல் நாள். அவள் கோவிலைஅடைந்த சமயம், கோவிலில் மிகவும் பரபரப்பாக இருந்தது. ஏதோ விசேஷம் என்று அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் அன்றும் அந்த ஊர் அரசன், அவன் பக்தியை வெளிப்படுத்த, கோயிலுக்கு ஒரு யானையை சமர்ப்பிப்பது வழக்கம். அதனால்தான் அந்த பரபரப்பு. சேவகர்கள், அரசன் வருவதால் வழியை விலக்கிக் கொண்டிருந்தனர்.

இந்த வயதான பெண்மணி, தன்னுடைய பையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள். சேவகர்களின் அஜாக்கிரதையால் அவள் கீழே தள்ளப்பட்டாள். பை கீழே விழுந்து அதிலிருந்த குண்டுமணிகள் சிதறி விழுந்தன. கிழவியின் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகப் பெருகியது. ஒரு சொட்டுக் கண்ணீர் தரையில் விழுந்தது.

அதே சமயம், கோயிலுக்கு சமர்ப்பிக்கக் கொண்டு வந்த யானை மதம் பிடித்து ஓட ஆரம்பித்தது. அனைவரும் " என்ன ஆயிற்று?" என்று பதறினர். கோவில்பொருட்களை யானை நாசம் செய்ய ஆரம்பித்தது. யானையை அடக்க முடியவில்லை. கலங்கிய மன்னனும் மற்றவர்களும் குருவாயூரப்பனிடமே ப்ரஸ்னம் கேட்டனர்.

அப்பொழுது கர்ப்பக்ருஹத்திலிருந்து " நீங்கள் என் பக்தையை அவமானப்படுத்திவிட்டீர்கள். என் பக்தை அன்பாகக் கொண்டு வந்த குண்டுமணிகள் எனக்குவேண்டும்" என்று அசரீரி கேட்டது. கீழே சிதறிக் கிடந்த குண்டுமணிகளை, அனைவரும் பொறுக்கி எடுத்தனர். அதை அந்த வயோதிகப் பெண்மணியிடம் கொடுத்து அவளிடம் மன்னிப்பும் கேட்டனர். அவளை கல மரியாதைகளுடன் சன்னிதிக்கு அழைத்துச் சென்றனர். அவள் ஆசையுடன் அதை அப்பனிடம் சமர்ப்பித்ததும், யானையின் மதம் அடங்கியது. அவள் பக்தியின் நினைவாக இன்றும் குருவாயூர் கோயிலில் உருளியில் குண்டுமணிகள் வைக்கப்பட்டுள்ளது .

பகவான் வஸ்துக்களின் உயர்வு தாழ்வைப் பார்ப்பதில்லை. உள்ளத்தில் தூய்மையான அன்புடன் தரப்படும் பக்தியின் மேன்மையைத்தான் பார்க்கிறான்.

Sunday, February 8, 2015

கண்ணன் கதைகள் (58) - குருவாயூரப்பனும் கொன்னப்பூவும்

கண்ணன் கதைகள் (58) - குருவாயூரப்பனும் கொன்னப்பூவும்தமிழ் வருடப்பிறப்பு / விஷு / கொன்னப்பூ, கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,
கண்ணன் கதைகள் (58) - குருவாயூரப்பனும் கொன்னப்பூவும்தமிழ் வருடப்பிறப்பு / விஷு / கொன்னப்பூ, கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,
சிறு வயதில், எனது பக்கத்து வீட்டில் இருந்தவர்கள், விஷு கொண்டாடியது நினைவுக்கு வருகிறது. முதல் நாள் இரவே, பூஜைக்கு உரிய வெற்றிலை, பாக்கு, வெள்ளரி, காசு, கண்ணாடி, உருளி, நாராயணீயம். கொன்னப்பூ, அரிசி முதலியவற்றை எடுத்து வைப்பார்கள். என்னையும் "கைநீட்டம்" பெற வரச்சொல்லுவார்கள். நான் காலையில் "கைநீட்டம்" பெற சந்தோஷமாகப்போவேன். குருவாயூரப்பன் மீது எனக்கு 'மாளாக்காதல்' உண்டாக எனது பாட்டியும், அவரது தோழியான ஒரு மாமியும் சொன்ன கதைகளே முக்கிய காரணம்.  'லாலு' என்று நான் அன்புடன் அழைக்கும் அந்த மாமி,  சிறு வயதில் எனக்குச் சொன்ன கதை இப்போது ஞாபகம் வருகிறது. கதைக்குச் செல்வோமா?

கேரளத்தில் ஒரு சிறு பாலகன் இருந்தான். அவன் தினமும் குருவாயூரப்பனை தரிசனம் செய்யக் கோவிலுக்குப் போவான். அவனுக்கு ஸ்ரீ குருவாயூரப்பனை நேரிலே பார்க்க மிகவும் ஆசை. ஒரு நாள், கண்ணனை எப்படியும் பார்த்தே தீருவது என்று முடிவு செய்து, கண்ணனிடம் பிரார்த்தித்தான். கண்ணனோ வரவில்லை. கண்ணா வா என்றான் . நான் உன்னை நேரிலே பார்க்க வேண்டும் என்றான். நீ வராவிட்டால் நான் இங்கேயே இருப்பேன் என்று கூறி கோவிலிலேயே உட்கார்ந்து விட்டான். நடையும் அடைத்தாயிற்று.

கண்ணன் வரவில்லை. அழுதான். அரற்றினான். குழந்தையல்லவா? அவன் அழுவது கண்ணனுக்கு பொறுக்கவில்லை. வந்தான். எப்படி? மயில் பீலி, பட்டு, பீதாம்பரம் உடுத்திக்கொண்டு, குழலூதிக்கொண்டுவந்தான். குழந்தையுடன் விளையாடினான். சிறுவனுக்கு ஒரே சந்தோஷம். கண்ணனோ தன்னுடைய அரைஞாணை அவனுக்கு அளித்தான்.

சிறுவன் சந்தோஷமாக வீட்டுக்குச்சென்று அம்மாவிடம் நான் கண்ணனுடன் விளையாடினேன் என்றான். அம்மாவோ நம்பவில்லை. இங்கே பார் "கண்ணன் தன்னுடைய கிண்கிணியை எனக்கு கொடுத்தான் பார்" என்றான்.
கோவிலிலும் அரைஞாணைக் காணாததால் அனைவரும் சிறுவன் அதைத் திருடியதாக நினைத்தார்கள். அம்மா திட்டினாள். அதைப்பிடுங்கி வீசினாள். அது பக்கத்தில் இருந்த கொன்றை மரத்தின்மேல் சிக்கிக்கொண்டது. உடனே, அந்த மரம் முழுவதும் தங்க நிறத்தில் கிண்கிணியைப்போன்ற பூக்கள் பூத்துக்குலுங்கின. அப்பொழுது, "உன் மகனுடன் நான் விளையாடியது நிஜம்" என்று அசரீரி வாக்கு கேட்டது. அது முதல் "கொன்னப்பூ" பூஜைக்கு மிகவும் உகந்ததாகப் போற்றப்பட்டது. இப்பொழுது மேலே உள்ள படத்தில் குருவாயூரப்பனின் அரைஞாணும் கொன்னப்பூவின் மொக்குகளும் ஒரே மாதிரி இருப்பது போல் தெரிகிறதா?

Saturday, February 7, 2015

கண்ணன் கதைகள் (57) - ருக்மிணி கல்யாணம்

கண்ணன் கதைகள் (57) - ருக்மிணி கல்யாணம், கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்

கிருஷ்ணர் துவாரகையை அடைந்தார். விஸ்வகர்மாவால் உருவாக்கப்பட்டதும், தேவர்கள் அளித்த ஐஸ்வர்யங்களை உடையதும், கடலின் நடுவே உள்ளதுமான அந்தப் புதிய துவாரகா நகரமானது, அவருடைய தேக காந்தியால் மிகவும் அழகாகவும், சிறப்பாகவும் விளங்கியது. பிரமனின் ஆக்ஞைப்படி, ரேவத நாட்டு அரசன், தன் பெண்ணான ரேவதியை, பலராமனுக்கு மணம் செய்து கொடுத்தான். கிருஷ்ணர், யாதவர்களோடு சேர்ந்து அந்தத் திருமணத்தில் உற்சாகத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

விதர்ப்ப நாட்டு அரசனின் பெண்ணான ருக்மிணி, கிருஷ்ணரின் மீது அன்பு கொண்டாள். அவளுடைய அண்ணன் ருக்மி. சேதி நாட்டு அரசன் சிசுபாலன் அவனுடைய நெருங்கிய நண்பன். தீய எண்ணம் கொண்ட சிசுபாலனுக்கு, ருக்மிணியை மணம் செய்து கொடுக்க ருக்மி முடிவு செய்தான்.

ருக்மிணி கிருஷ்ணரிடம் வெகுநாட்களாகக் காதல் கொண்டிருந்தாள். தன் விருப்பம் நிறைவேறாமல் போய்விடுமோ என்று அஞ்சினாள். தனக்கு ஏற்பட்ட துன்பத்தை கிருஷ்ணரிடம் தெரிவிக்குமாறு ஒரு அந்தணரை அவரிடம் தூது அனுப்பினாள். அந்த அந்தணர், விரைவாக துவாரகா நகரை அடைந்தார். கிருஷ்ணர் அந்த அந்தணரை வரவேற்று உபசரித்தார். அந்தணரும் மிகுந்த சந்தோஷமடைந்தார். அவர், “கிருஷ்ணா! குண்டின தேசத்து இளவரசியான ருக்மிணி தங்களிடத்தில் காதல் கொண்டுள்ளாள். நான் அவளுடைய தூதுவனாக, அவள் அனுப்பிய சேதியோடு இங்கு வந்திருக்கிறேன்” என்று கூறினார். பிறகு,“உலகிற்கெல்லாம் நாயகனே! உம்முடைய குணங்களால் கவரப்பட்டு உம்மையே கணவனாக வரித்துவிட்டேன். தற்போது, சிசுபாலன் என்னை அடைந்து விடுவானோ என்று அஞ்சுகிறேன். கருணைக்கடலே! என்னைக் காக்க வேண்டும்” என்று ருக்மிணி கூறிய சேதியை அந்தணர் கிருஷ்ணரிடம் தெரிவித்தார். “வேறு கதியில்லாத என்னைக் கைவிட்டீரானால் நான் உடனே என் ஜீவனை விட்டுவிடுவேன்” என்று ருக்மிணி கூறியதை அந்தணர் சொன்னதும், கிருஷ்ணருடைய மனத்திலும் மிக்க சஞ்சலம் உண்டானது. கிருஷ்ணர் அந்த அந்தணரிடம், “அவளுடைய வேதனையைக் காட்டிலும் என் மனதில் அதிகமான மன்மத வேதனை ஏற்பட்டுள்ளது. நான் சீக்கிரமாக வந்து, அரசர்களின் முன்னிலையில், கருவிழிகளையுடைய என் பிரியையான ருக்மிணியைக் கரம் பிடிக்கிறேன்” என்று கூறினார்.

பின்னர் கிருஷ்ணர் ரதத்தில் ஏறிக்கொண்டு, அந்தணருடன் சீக்கிரமாகக் குண்டின தேசத்தை அடைந்தார். பலராமன் சேனைகளுடன் பின் தொடர்ந்து வந்தார். அரசனான பீஷ்மகன் அவர்களை வரவேற்று உபசரித்தான். கிருஷ்ணர் வந்த செய்தியைக் கூறிய அந்தணருக்கு, ருக்மிணி மிகுந்த அன்புடன் நமஸ்காரம் செய்தாள். உலகிலேயே அழகான கிருஷ்ணருடைய திருமேனியைக் கண்டும், ருக்மி எடுத்த முடிவைக் கேட்டும், குண்டின தேசத்து மக்கள் துயரமடைந்தார்கள். இரவும் கழிந்தது.

மறுநாள் காலை, ருக்மிணி மங்களகரமான ஆடை ஆபரணங்களுடன், காவலர்கள் சூழ, பார்வதிதேவியை வணங்கக் கோவிலுக்குக் கிளம்பினாள். அவள் மனத்தை கிருஷ்ணரிடத்திலேயே அர்ப்பணித்திருந்தாள். உயர்குலப் பெண்களுடன் பார்வதி தேவியின் ஆலயத்திற்குள் சென்று, நன்கு வழிபாடு செய்து, அவள் பாதங்களில் நமஸ்கரித்தாள். கிருஷ்ணனையே கணவனாக அளிக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வேண்டினாள். ருக்மிணியைக் காண வேண்டும் என்ற ஆவலில் பல நாட்டு அரசர்கள் கோவில் வாசலில் கூடியிருந்தார்கள். கிருஷ்ணரும் ருக்மிணியைக் கிரஹிக்க எண்ணம்கொண்டு காத்திருந்தார். அப்போது ருக்மிணி, மிகுந்த அழகுடன் எல்லா திசைகளையும் ஆனந்தமுறச் செய்துகொண்டு, ஆலயத்திலிருந்து வெளியே வந்தாள். அவள் அழகானது உலகையே மயங்கச் செய்வதாய் இருந்தது. அவளது தேககாந்தியால் எல்லா அரசர்களும் மயங்கினர். அவளது கடைக்கண் பார்வையால் கிருஷ்ணரும் மோஹித்தார். சந்திரன் போன்ற முகத்தை உடைய ருக்மிணியை நெருங்கினார். “நிலவைப் போன்ற முகமுடையவளே! எங்கே போகிறாய்?” என்று கேட்டு, நொடிப்பொழுதில் அவள் அருகே சென்று, அவளது நுனிக்கை விரல்களைப் பிடித்து, அவளைக் கைகளினால் அன்புடன் பற்றி, அவளை கிரஹித்தார். மனோவேகத்தில் செல்லும் தன்னுடைய ரதத்தில் ஏற்றிக்கொண்டார். ருக்மிணியின் மனோரதமும் நிறைவேறியது.

உடனே, அனைத்து திசைகளில் இருந்தும் எதிரிகளின் கூச்சல் அதிகமானது. இந்த இடைச்சிறுவன் எங்கிருந்து வந்தான்? என்று கூடியிருந்த அரசர்கள் கோபமடைந்து போர்புரியத் தொடங்கினார்கள். யாதவர்கள் அவர்களை ஜயித்தார்கள். நாய்க்கூட்டங்களைப் பார்த்த சிங்கம் போல், அந்த அரசர்களைக் கண்ட கிருஷ்ணர் சிறிதும் அசையவில்லை. ருக்மி எதிர்த்துப் போர்புரிய வந்தான். அவனைக் கட்டி இழுத்து, அவன் தலையை மொட்டை அடித்து, மீசையைக் கத்தரித்து அவன் கர்வத்தை அடக்கினார். பலராமனின் வேண்டிக் கொண்டதன்பேரில் அவனை விடுவித்துக் கொல்லாமல் விட்டார்.

பிறகு, மஹாலக்ஷ்மியான ருக்மிணியுடன் துவாரகைக்குச் சென்றார். அனைவரும் அவர்களை வரவேற்றார்கள். துவாரகையில் முறைப்படி கிருஷ்ணருக்கும் ருக்மிணிக்கும் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. துவாரகை நகரம் முழுவதும் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டு, மங்கள வாத்தியங்களின் ஒலிகளால் ஸ்வர்க்கம் போன்று விளங்கியது. நகரத்து மக்கள் அனைவரும் கிருஷ்ணரையும், ருக்மிணியையும் காண ஓடோடி வந்தார்கள். உத்தமமான அவர்களுடைய சேர்க்கையைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள். கிருஷ்ணருடைய சேர்க்கையால் ருக்மிணி மிகுந்த நாணத்தை அடைந்தாள். புதிய காதல் அனுபவத்தால் மிகுந்த சந்தோஷமடைந்தாள். அவள் முகம் மந்தஹாஸப் புன்னகையுடன் விளங்கியது. கிருஷ்ணர் தனிமையில் ருக்மிணிக்குப் பலவகையில் ஆனந்தமளித்தார். இரவும் பகலும் விளையாட்டுப் பேச்சுக்களால் மகிழச் செய்தார். முன்பை விடப் பலவிதமாய் அரவணைத்து, அவளை சந்தோஷமடையச் செய்தார் . மக்களும் சுபிட்சமாக, பேரானந்தத்துடன் வாழ்ந்து வந்தார்கள்.

Friday, February 6, 2015

கண்ணன் கதைகள் (56) - கோபிகைகளுக்கு உத்தவர் சேதி சொல்லுதல்

கண்ணன் கதைகள் (56) - கோபிகைகளுக்கு உத்தவர் சேதி சொல்லுதல்,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்

பிறகு கிருஷ்ணர் பலராமனுடன், ஸாந்தீபனி முனிவரிடம் அறுபத்து நான்கு நாட்களிலேயே பல வித்தைகளையும், கல்விகளையும் கற்றார். குருதக்ஷிணையாக, இறந்த அவரது மகனை யமலோகத்திலிருந்து மீட்டு, அவரிடம் கொடுத்தார். பின்னர் மதுரா நகரத்தை அடைந்தார்.

பிருந்தாவனத்தில் கோபிகைகள், கிருஷ்ணரை நினைத்து மிகவும் துயரம் அடைந்தார்கள். அதனை அறிந்த கிருஷ்ணர், அவர்கள் மீது கருணை கொண்டு, தனது நண்பரும், சிறந்த பக்தருமான உத்தவரை அவர்களிடம் சேதி சொல்ல அனுப்பினார். எவ்வுலகிலும் காண முடியாத கோபிகைகளின் அன்பையும், பக்தியையும் உத்தவருக்குக் காண்பிக்க நினைத்து, அவரை அங்கு அனுப்பினார். உடனே உத்தவர் புறப்பட்டு, கோகுலத்திற்கு மாலையில் சென்றார். கிருஷ்ணனைப் பற்றிய செய்திகளைக் கூறி நந்தகோபரையும், யசோதையையும் சந்தோஷமடையச் செய்தார். நந்தனுடைய வீட்டின் அருகில் தேர் நிற்பதைப் பார்த்த கோகுலத்துப் பெண்கள், உத்தவர் வந்திருப்பதை அறிந்து, எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு நந்தனின் வீட்டை அடைந்தனர். கண்ணனுடைய பல்வேறு செயல்களையும் விளையாட்டுக்களையும் மீண்டும் நினைத்துப் பேச முடியாமல் ஆனார்கள். தடுமாற்றத்துடன் தயங்கிக் கொண்டு உத்தவரிடம் பேச முயன்றார்கள். "உத்தவரே! இரக்கமற்ற அந்தக் கண்ணன், தன் பெற்றோரைப் பார்ப்பதற்காக உங்களை அனுப்பினானா? நகரத்துப் பெண்களால் கவரப்பட்ட அவன் எங்கிருக்கிறான்? நாதனே! காக்க வேண்டும். உமது முத்தங்களையும், தழுவல்களையும், பேச்சுக்களையும், அழகிய விளையாட்டுக்களையும் யாரால் மறக்க முடியும்?" என்று அரற்றினார்கள். இவ்வாறு பலவிதமாய்ப் புலம்பிய கோபிகைகளிடம், உத்தவர் தத்துவங்கள் பொதிந்த கண்ணனின் சேதியைக் கூறி, சமாதானம் செய்தார். அதனைக் கேட்ட கோபியர்கள் மகிழ்ந்தனர். உத்தவர், அவர்களோடு கிருஷ்ணனின் செய்கைகளையும், விளையாட்டுக்களையும் பற்றிப் பேசிக்கொண்டு சில தினங்களை அங்கே கழித்தார். கோகுலத்தில், எப்பொழுதும், எல்லாரும் கிருஷ்ணனைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். வீட்டு வேலைகள் செய்யும்போது கூட, அவருடைய லீலைகளையே பாடிக் கொண்டிருந்தார்கள். தூக்கத்திலும் கிருஷ்ணனைப் பற்றியே பேசினார்கள். அவர்களது செய்கைகள் யாவும் கிருஷ்ணனை அனுசரித்தே இருந்தன. அனைத்து செயல்களும் கிருஷ்ணமயமாக இருந்தது. இதைக் கண்ட உத்தவர் மிகுந்த ஆச்சர்யம் அடைந்தார்.

உத்தவர் ராதையிடம், “ராதையே! உன் கிருஷ்ணன் பூக்களைக் கண்டால், இது என் ராதைக்கு மிகவும் பிரியமானது என்பார். நான் பேசினால் ராதையும் இவ்வாறுதான் பேசுவாள் என்றும், நான் பேசாவிட்டால், கோபம் கொண்ட ராதையைப் போல் என் பேசாமல் இருக்கிறாய்? என்றும் என்னைக் கேட்பார்” என்று கூறி, தாமரைக்கண்களுடைய ராதையை ஆனந்தமடையச் செய்தார். “ நான் சீக்கிரமே திரும்பி வருவேன். மிகுந்த கார்யங்களினால் வரமுடியவில்லை. பிரிவைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். என்னைப் பற்றிய நினைவுகள் எப்போதும் உங்களுக்கு இருப்பதால் வெகு விரைவில் உங்களுக்கு பிரும்மானந்த சுகம் கிட்டப் போகிறது. அப்போது உங்களுக்கு பிரிவும், சேர்க்கையும் சமமான ஆனந்தத்தை அளிக்கும்” என்று கிருஷ்ணன் கூறியதை, உத்தவர் கோபிகைகளிடம் கூறி சமாதானப் படுத்தினார். இவ்விதமான அன்பையும், பக்தியையும் எந்த உலகிலும் கண்டதில்லை, கேட்டதில்லை. தவம் செய்வதாலோ, வேதங்களைக் கற்பதாலோ என்ன பயன்? கோபிகைகளை நமஸ்கரித்துத் தொழுதாலே போதும் என்று எவ்வுலகிலும் காண முடியாத கோபிகைகளின் அன்பையும், பக்தியையும் மெய்மறந்து, ஆனந்தத்துடன் கூறிக்கொண்டு உத்தவர் கோகுலத்திலிருந்து மதுரா திரும்பினார்

மதுராவில், ஸைரந்திரி கிருஷ்ணரைப் பற்றியே நினைத்துக்கொண்டு, ஒவ்வொரு நாளும் அவருடைய வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். தன் இல்லத்தையும், தன்னையும் நன்கு அலங்கரித்துக் கொண்டு காத்திருந்தாள். கிருஷ்ணன் உத்தவருடன் அவளது இல்லத்திற்குச் சென்றார். அவளது நீண்டநாள் எண்ணம் நிறைவேறியது. அதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்த அவள், கிருஷ்ணனைப் பலவிதமாகப் பூஜித்தாள். கிருஷ்ணன் அவளிடம் வேண்டிய வரம் கேள் என்று கூற, அவளும், பல இரவுகள் கண்ணனோடு கழிக்கும் விஷய சுகத்தையே வரமாக வேண்டினாள். பிறகு, சில இரவுகள் அவளுடன் தங்கி அவளுக்கு ஆனந்தத்தை அளித்து அவளுக்கு உபஶ்லோகன் என்ற புத்திரனையும் அளித்தார். அந்த உபஶ்லோகன், நாரத முனிவரிடம் இருந்து பாஞ்சராத்ர ஆகமத்தை உபதேசம் பெற்று அதில் பிரசித்தனாக விளங்கினான். பின்னர், கிருஷ்ணர் பலராமருடனும், உத்தவரோடும் அக்ரூரரின் வீட்டை அடைந்தார். அவருடைய வரவால் மிகவும் மகிழ்ந்த அக்ரூரர், அவர்கள் அனைவரையும் நன்கு வரவேற்று உபசரித்து, பூஜித்துத் துதித்தார். அவரை நகரத்திற்கு அனுப்பி, குந்தியின் புத்திரர்களான பாண்டவர்கள் காட்டிலிருந்து நகருக்குத் திரும்பி வந்ததைப் பற்றியும், திருதராஷ்ட்ரனின் கெட்ட செயல்களைப் பற்றியும் அறிந்தார்கள்.

ஜராஸந்தன் என்பவன், தன் நண்பனும், மாப்பிள்ளையுமான கம்ஸனின் வதம் பற்றிக் கேள்விப்பட்டு, மிகுந்த கோபம் கொண்டு, மதுராநகரத்தை அழித்தான். சிறிய படையையுடைய கிருஷ்ணர், தேவலோகத்திலிருந்து பலராமனுக்குக் கிடைத்த தேர் முதலியவற்றால், அவனது இருபத்திமூன்று அக்ஷௌஹிணிப் படைகளை முறியடித்தார். பலராமன் ஜராஸந்தனைக் கட்டி வைத்தார். அவனோடு யுத்தம் செய்ய ஆசைகொண்ட கிருஷ்ணன் அவனை விடுவித்தார். ஏனெனில், அனைத்து அரசர்களையும் வென்று, அவர்களது சேனைகளையும் அடைந்த ஜராஸந்தனைப் போன்ற வீரன் அப்போது யாரும் இல்லை. தோல்வியடைந்த ஜராஸந்தன், மற்ற அரசர்களின் உதவியுடன் பதினாறு முறை கண்ணனோடு யுத்தம் செய்தான். அவனது முன்னூற்று தொண்ணூற்று ஒன்று அக்ஷௌஹிணிப் படைகளையும் கிருஷ்ணர் அடித்துக் கொன்றார். அவனுடன் பதினெட்டாவது முறை யுத்தம் ஆரம்பிக்கும்முன், மூன்று கோடி யவனர்களுடன் ஒரு யவனன் படையெடுத்து வருவதை அறிந்த கண்ணன், உடனே, விஸ்வகர்மாவைக் கடலின் நடுவில் ஒரு நகரை உருவாக்கச் சொல்லி, அதில் மக்கள் அனைவரையும் குடியேறச் செய்தார். பிறகு, தாமரை மாலையணிந்து, நகரத்திலிருந்து வெளியே வந்தார். யவனர்களின் தலைவன் பின்தொடர்ந்து வந்தான். உடனே கிருஷ்ணர் ஒரு மலைக்குகையில் மறைந்தார். தொடர்ந்து வந்த யவனன், கிருஷ்ணன் என்று நினைத்து, குகையில் தூங்கிக் கொண்டிருந்த முசுகுந்தன் என்ற அரசனைக் காலால் உதைத்தான். விழித்த முசுகுந்தன், அந்த யவனனை, தன் பார்வையால் சாம்பலாக்கினான். அப்போது கிருஷ்ணன், குகையில், பக்தனான முசுகுந்தனுக்கு காட்சி கொடுத்தார். "எனக்கு அரச வாழ்வில் விருப்பம் இல்லை. தங்கள் அனுக்ரஹம் ஒன்றே வேண்டுகிறேன்" என்று முசுகுந்தன் துதித்ததைக் கேட்ட கிருஷ்ணன் மகிழ்ந்து, எல்லா துக்கங்களையும் போக்கும் பக்தியையும், அதன்பின் முக்தியையும் அவனுக்கு வரமாக அளித்தார். வேட்டையாடி உயிரினங்களைக் கொன்ற தோஷம் நீங்க அவனைத் தவம் செய்யச் சொன்னார்.

பிறகு கிருஷ்ணர் மதுராநகரம் சென்றார். யவனன் அழைத்து வந்த சேனைகளை அழித்தார். வழியில், ஜராஸந்தன் தடுத்தான். அவனுக்குக் கடைசியான வெற்றியைக் கொடுத்து, ஓடி ஒளிந்து கொள்வதுபோல் பாவனை செய்து, கடலின் நடுவே உள்ள துவாரகா நகரை அடைந்தார்.

Thursday, February 5, 2015

கண்ணன் கதைகள் (55) - கம்ஸ மோக்ஷம் / கம்ஸ வதம்

கண்ணன் கதைகள் (55) - கம்ஸ மோக்ஷம் / கம்ஸ வதம்,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்

கண்ணனின் அவதார நோக்கம் நிறைவேறும் அந்த நாளும் வந்தது. மறுநாள் அதிகாலையில், கம்ஸனின் ஆணைப்படி, மல்யுத்தத்திற்கான போட்டிகள் முரசொலி செய்து அறிவிக்கப்பட்டது. அதனைக் காண, பல அரசர்கள் வந்தனர். நந்தகோபரும் உப்பரிகைக்குச் சென்றார். கம்ஸனும் உப்பரிகைக்குச் சென்றான். கிருஷ்ணனும் பலராமனும் அழகிய ஆடை அலங்காரங்களுடன் மல்யுத்த களத்தை அடைந்தார்கள். அங்கு 'குவாலயாபீடம்' என்ற யானை அவர்களை வழிமறித்து நின்றது. வழிவிட்டுச் செல் என்று அந்த யானையைப் பணித்தார் கிருஷ்ணன். அப்போது யானைப் பாகனான 'அம்பஷ்டன்', கிருஷ்ணனைத் தாக்க யானையை ஏவினான். அந்த யானை, விரைந்து கிருஷ்ணனைப் பிடித்தது. அதனிடமிருந்து லாவகமாகத் தன்னை விடுவித்துக்கொண்ட கிருஷ்ணன், அதன் மத்தகத்தில் அடித்தார். பின்னர் அதன் காலடியில் மறைந்து, பிறகு சிரித்துக்கொண்டு வெளியே வந்தார். யானைக்கு அருகில் இருந்தாலும், அதன் பிடியில் அகப்படாமல் நழுவி, வெகுதூரம் ஓடி, விளையாட்டாய் விழுவது போல் கீழே விழுந்தார். அந்த யானையும் கிருஷ்ணனைத் தாக்க எதிரே வந்தது. உடனே கிருஷ்ணன், அதன் தந்தங்களை வேருடன் பிடுங்கி எறிந்தார். யானையைக் கீழே தள்ளி, அந்த தந்தங்களால் யானையைக் குத்திக் கொன்றார். தந்தத்தின் அடிப்பகுதியிலுள்ள உயர்ந்த முத்துக்களை எடுத்து, ஸ்ரீதாமனிடம் கொடுத்து, "இவற்றை அழகிய முத்து மாலையாகச் செய்து ராதையிடம் கொடு" என்று கூறினார். பிறகு, யானையின் இரு தந்தங்களையும், கிருஷ்ணனும் பலராமனும் தங்களுடைய தோளில் சுமந்துகொண்டு, மல்யுத்த களத்திற்குச் சென்றார்கள். அவர்களைக் கண்ட மக்கள், அவர்களுடைய தேககாந்தியால் அபகரிக்கப்பட்டு, ஆச்சர்யம்! என்றும், நந்தகோபன் மஹாபாக்கியசாலி என்றும், சிலர் யசோதை பாக்கியசாலி என்றும், வேறு சிலர், இல்லை இந்த நகரத்து மக்களாகிய நாம்தான் பாக்கியம் செய்தவர்கள், என்றும் உவகையுடன் கூவினார்கள். அந்நகர மக்கள் கண்ணனைப் பரப்ரம்மமாக அறியவில்லை. ஆயினும், முதன்முதலாய் அவரைப் பார்த்த அவர்கள், உடனேயே பாபம் நீங்கியவர்களாய் ஆனார்கள். கிருஷ்ணனுடைய செய்கைகளைப் பற்றிப் போற்றிப் பாடினார்கள்.

கம்ஸனுடைய ஆணையின்படி, மல்யுத்தத்தில் சிறந்த சாணூரன் என்ற மல்லன் கிருஷ்ணனையும், முஷ்டி யுத்தத்தில் சிறந்த முஷ்டிகன் என்பவன் பலராமனையும் சவாலுக்கு அழைத்தார்கள். பலவிதமான தாக்குதல்களுடன் யுத்தம் தொடங்கியது. "இது என்ன போட்டி? ஒரு புறம் அழகான சிறுவர்கள். மல்லர்களோ கடினமானவர்கள். இந்த யுத்தத்தை நாம் பார்க்க வேண்டாம், போய்விடுவோம்" என்று மக்கள் பேசிக் கொண்டார்கள். அப்போது கிருஷ்ணன், சாணூரனைத் தூக்கிச் சுற்றி உயிரிழக்கச் செய்தார். உயிரிழந்த அவனை பூமியிலே ஓங்கி அடித்தார். பலராமனும் முஷ்டிகனை அடித்துக் கொன்றார். மீதமிருந்த மல்லர்கள் அங்கிருந்து ஓடினர். திகைத்த கம்ஸன், முரசுகளையும், வாத்தியங்களையும் முழங்க விடாமல் தடுத்தான். உக்ரசேனன், நந்தகோபன், வசுதேவன் ஆகியோரைக் கொல்லும்படியும், கண்ணனையும் பலராமனையும் வெகுதூரத்திற்கப்பால் விரட்டும்படியும் காவலர்களுக்கு உத்தரவிட்டான். இதைக் கேட்டுக் கோபமடைந்த கண்ணன், உப்பரிகையில் வீற்றிருந்த கம்ஸனை நோக்கி சிங்கம்போலப் பாய்ந்து சென்றார். கம்ஸன் வாளெடுத்துச் சுழற்றினான். அவனை அசையவிடாமல் வலுவாகப் பிடித்து, அவனுடைய கேசங்களைப் பிடித்து இழுத்து, சிம்மாசனத்திலிருந்து தலைக்குப்புற கீழே சாய்த்துத் தள்ளினார். பூமியில் தள்ளி, அவன் மார்பு மேல் அமர்ந்து, அவனுடைய அங்கங்களை அடித்து நொறுக்கினார். கம்ஸனுடைய கிரீடம் சிதறுண்டு தரையில் உருண்டது. மயங்கி விழுந்த கம்ஸன் மாண்டு போனான். தேவர்கள் பூமாரி பொழிந்தனர். கம்ஸன் எப்போதும் கிருஷ்ணனையே மனதில் நினைத்திருந்தபடியால் மோக்ஷத்தை அடைந்தான்.

பிறகு கிருஷ்ணன், பெற்றோரான வசுதேவரையும், தேவகியையும் சிறையிலிருந்து மீட்டு, அவர்களை நமஸ்கரித்தார். கம்ஸனின் தந்தையான உக்ரசேனனை அந்த நாட்டிற்கு அரசனாக ஆக்கினார். யாதவ குலத்தினர் மிகவும் மகிழ்ந்தார்கள். தேவர்களின் குருவான பிருகஸ்பதியிடமிருந்து வித்தைகளைக் கற்ற உத்தவரை நண்பராக ஏற்றுக் கொண்டார். மிக்க மகிழ்ச்சியுடன் மதுரா நகரில் வசித்து வந்தார். 

Wednesday, February 4, 2015

கண்ணன் கதைகள் (54) - மதுரா நகரப்ரவேசம்

கண்ணன் கதைகள் (54) - மதுரா நகரப்ரவேசம்,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

கிருஷ்ணன் நண்பகலில் மதுராநகரம் அடைந்தார். அருகிலுள்ள தோட்டத்தில் உணவுண்டு, நண்பர்களுடன் நகரைச் சுற்றிப் பார்க்க முடிவு செய்தார். அந்த நகரிலுள்ளவர்கள் .கண்ணனைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்ததால் அவரை நேரில் காண ஆவல் கொண்டனர். கிருஷ்ணன் இப்போது ராஜவீதியை அடைந்தார். அவரைக் காண வந்த பெண்கள், எப்பொழுதும் கண்ணனையே மனதால் நினைத்துக் கொண்டிருந்ததால் அவரை நேரில் காண ஓடி வந்து கொண்டிருந்தார்கள். அப்பெண்கள் கள்ளமில்லாத தூய்மை உள்ளம் படைத்தவர்களாய் இருந்தார்கள். தனது கடைக்கண் பார்வையால், கிருஷ்ணன் அப்பெண்களை ஆனந்திக்கச் செய்தார். மக்களும் மகிழ்ச்சியுடன் கிருஷ்ணனைக் காணக் கூடினார்கள். அப்போது எதிரே வந்த கம்ஸனுடைய வண்ணானிடம் உடைகள் வேண்டும் எனக் கிருஷ்ணன் கேட்க, அவன், "ராஜாவின் உடைகளை உனக்கு எவன் கொடுப்பான்? தள்ளிப்போ" என்று கேலியாகக் கூறினான். உடனே கிருஷ்ணன் அவன் தலையைக் கிள்ளி எறிந்தார். அவனும் நற்கதியை அடைந்தான்.

அப்போது, ஒரு துணி நெய்பவன் கண்ணனுக்குப் பொருத்தமான ராஜஉடைகளைக் கொண்டு வந்து கொடுத்தான். அவற்றை அணிந்தார். மாலை கட்டும் 'சுதாமா' என்பவன், கண்ணனுக்கு மலர் மாலைகளை அணிவித்துப் போற்றித் துதித்தான். அவனுக்கு அவன் விரும்பிய பக்தியையும், அளவற்ற செல்வத்தையும் வரமாகஅளித்தார். இவ்வாறு செல்லும்போது, வழியில், அழகான கண்களை உடையவளும், முதுகில் கூன் உடையவளுமான 'திரிவிக்ரா' என்ற ஒரு பெண்ணைக் கண்டார். அவள் கிருஷ்ணருக்கு சிறந்த சந்தனத்தையும், வாசனைத் திரவியங்களையும் பூசினாள். மனமகிழ்ந்த கண்ணன், அவளிடம் அன்பு கொண்டு, தனது கால் விரலால் அவள் காலை அழுத்திக் கொண்டு, அவளைக் கையினால் மெதுவாகப் பிடித்து அவள் கூனை நிமிர்த்தினார். அவள் உலகிலேயே அழகானவளாக ஆனாள். பரிசுத்தமான, பாபமற்ற அந்நகர மக்கள், கண்ணன் வரும் வழி நெடுக நின்றுகொண்டு, பூமாலை, தாம்பூலம் முதலிய தமது சக்திக்குத் தகுந்த ஏதாவது ஒரு பொருளை கண்ணனுக்குக் கொடுத்தார்கள். கண்ணன் கோட்டைவாயிலில் நுழைந்தார். மக்களின் ஆரவாரத்தினால் கிருஷ்ணனுடைய வருகையை அறிந்த தேவகி, மிகுந்த குதூகலம் அடைந்தாள். அவளது ஸ்தனங்களிலிருந்து பால் சுரந்தது.

கிருஷ்ணன் மதுரா நகருக்குள் பிரவேசித்தபோது காவலர்களும், மக்களும் அவருடைய அழகைக் கண்டு மயங்கி வழி விட்டார்கள். தனுர்யாகம் நடந்து கொண்டிருக்கும் இடத்தை அடைந்தார். அங்கே அந்த வில்லானது, மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டு ஒரு அறைக்குள் வைக்கப்பட்டிருந்தது. அந்த வில் வைத்திருந்த அறைக்குள் பிரவேசித்த கண்ணன், நொடிப்பொழுதில் அந்த வில்லை எடுத்து நாணேற்றி முறித்தார்.

வில் முறிந்த பெரிய ஒலியைக் கேட்டு தேவர்கள் மெய்சிலிர்த்தனர். அந்த ஓசையானது கம்ஸ வதத்திற்கு முன் வாசிக்கப்படும் மங்கள வாத்தியம் போல் இருந்தது. அந்த ஓசையைக் கேட்ட கம்ஸனுக்கும் நடுக்கம் ஏற்பட்டது. முறிந்த வில்லினால் அடிபட்ட காவலர்களின் கூக்குரல் கம்ஸனுடைய பயத்தை அதிகரித்தது. சிஷ்டர்களைப் பரிபாலனம் செய்யவும், துஷ்டர்களை நிக்ரஹம் செய்யவும் அவதரித்த கிருஷ்ணன், நகரத்தின் அழகைப் பார்த்துக் கொண்டே மாலையில், பூந்தோட்டத்தில் உள்ள தனது கூடாரத்தை அடைந்தார். அன்று இரவு, தனது நெருங்கிய நண்பரான ஸ்ரீதாமாவிடம், ராதையின் பிரிவால் ஏற்பட்ட துயரத்தைக் கூறிக் கொண்டு, பல கதைகளைப் பேசிக் கொண்டு அங்கு தங்கினார். அவதார நோக்கம் நிறைவேறும் அந்த நாளும் வந்தது.

Tuesday, February 3, 2015

கண்ணன் கதைகள் (53) - அக்ரூரர் தூது, மதுரா நகரப் பயணம்

கண்ணன் கதைகள் (53) - அக்ரூரர் தூது, மதுரா நகரப் பயணம்,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்

கம்ஸன் அனுப்பிய அத்தனை அசுரர்களையும் கண்ணன் கொன்றுவிட்டான். கம்ஸன் மிகவும் பயந்தான். நாரதர் மூலம் கண்ணன் கோகுலத்தில் வசிப்பதை அறிந்த கம்ஸன், கண்ணனையும், பலராமனையும் கொல்லத் திட்டம் தீட்டினான். தனுர் யக்ஞம் என்ற வில் பூஜையில் கலந்து கொள்ள கிருஷ்ணனை அழைத்து வருமாறு பண்பில் சிறந்த அக்ரூரரை அனுப்பினான்.

அக்ரூரர் கிருஷ்ணனிடத்தில் பரம பக்தி கொண்டவர். கம்ஸனிடம் இருந்த பயத்தால் கிருஷ்ணனைத் தரிசிக்காமல் இருந்து வந்தார். கம்ஸனே கிருஷ்ணனை அழைத்து வரக் கட்டளையிட்டதும் மிகவும் மகிழ்ந்தார். ரதத்தில் ஏறி, கோகுலம் நோக்கிப் புறப்பட்டார். கிருஷ்ணனையே நினைத்து, அந்த நினைவுகளை அனுபவித்து, அவரை சந்திப்பதில் எந்த இடையூறும் ஏற்படக்கூடாது என்று வேண்டிக்கொண்டே சென்றார். "பரமனை நான் தரிசிப்பேனா? தொட்டுத் தழுவுவேனா? அவர் என்னுடன் பேசுவாரா? அவரை எங்கு காண்பேன்?" என்று எண்ணியவாறே கிருஷ்ணனை நினைத்துக் கொண்டே வழியைக் கடந்தார். கண்ணனின் பாதம் பட்டதால் புனிதமானதும், சிவனும், பிரமனும், தேவர்களும் வணங்கத் தகுந்ததுமான பிருந்தாவனத்திற்குள் நுழைந்தார். எல்லையில்லா ஆனந்தத்தில் மூழ்கி, உணர்ச்சி மிகுந்த நிலைமைகளை அடைந்தார். கண்ணன் விளையாடிய இடங்களைப் பார்த்து வணங்கினார். கண்ணனின் பாதம் பட்ட புழுதியில் புரண்டார். அவர், கோபிகைகளின் வீடுகளைப் பார்த்துக் கொண்டும், அவர்கள் பாடும் தங்கள் புகழைக் கேட்டுக் கொண்டும், ஆனந்த வெள்ளத்தில் மூழ்கி, மாலையில் நந்தகோபரின் வீட்டு வாசலை அடைந்தார். பசுவிடமிருந்து பால் கறப்பதைப் பார்த்துக்கொண்டிருக்கும் கிருஷ்ணனையும் பலராமனையும் கண்டார். தான் உள்ளே அனுபவித்த ப்ரும்மானந்தத்தை வெளியில் பார்ப்பதுபோல் உணர்ந்தார். 

பீதாம்பரம், நீலாம்பரம் இவற்றை அணிந்து மிக அழகுடன் விளங்கும் கிருஷ்ணனையும், பலராமனையும் கண்டார். சில ஆபரணங்களை மட்டுமே அணிந்து, புன்சிரிப்பு தவழும் முகத்துடன் இருக்கும் இருவரையும் கண்டார். அவர்களைக் கண்டவுடன், வெகு தூரத்திலேயே ரதத்தை நிறுத்திவிட்டு இறங்கி, தரையில் விழுந்து வணங்கினார். கிருஷ்ணன் அவரை எழுப்பித் தழுவிக் கொண்டான் . நலன்களைப் பற்றி விசாரித்து, கையைப் பிடித்துக் கொண்டு பலராமனுடன் வீட்டிற்குள் அழைத்துச் சென்றான். யதுகுலத்தில் பிறந்த அக்ரூரரை, நந்தகோபரும், கிருஷ்ணனும், பலராமனும் நன்கு உபசரித்தார்கள். கம்ஸனுடைய அழைப்பைப் பற்றி அக்ரூரர் தெரிவித்தார். அதைக் கேட்ட கிருஷ்ணன், கோபர்களிடம் அதை அறிவித்தார். இரவு முழுவதும் அக்ரூரருடன் பல கதைகளைப் பேசிக்கொண்டு கழித்தார். கிருஷ்ணனைக் காணாததால், இன்று கிருஷ்ணன் சந்திரை, சந்திரபாகை, ராதை அல்லது மித்திரவிந்தையின் வீட்டில் தங்கியிருக்கிறான் என்று கோபிகைகள் மற்ற கோபிகைகளை சந்தேகித்தார்கள்.

அக்ரூரருடன் கிருஷ்ணன் மதுரா நகரம் செல்லப் போவதை அறிந்த கோபியர்கள் மிகவும் துயரமடைந்தனர். அவர்கள் அனைவரும் ஒன்று கூடி, கவலையுடன் புலம்பினார்கள். அவனைத் தவிர வேறு கதியற்ற நம்மை எப்படி விட்டுப் போகிறான்? இதுதான் தெய்வம் நமக்கு விதித்ததோ? என்று வருந்தி, அழுது புலம்பினார்கள். கிருஷ்ணன், கோபியர்களின் துயரைத் தீர்க்க, அங்கு ஒரு தோழனை அனுப்பினார். கிருஷ்ணன் அந்த இரவின் முடிவில் நந்தனுடனும், நண்பர்களுடனும் கலந்து பேசி, மதுரா நகரம் செல்லத் தீர்மானித்து பலராமனை கூட்டிக் கொண்டு அக்ரூரருடன் மதுரா புறப்படும் ஏற்பாடுகள் தொடங்கின. “நான் விரைவிலேயே தங்களிடம் திரும்பி வருவேன். என்னோடு உல்லாசமாய் இருக்கும் தருணமும் விரைவிலேயே ஏற்படும். ஆனந்தமயமான அம்ருத வெள்ளத்தில் மூழ்கடிப்பேன்” என்று கோபியர்களை சமாதானம் செய்தார். அவர்களும் மிகுந்த வருத்தத்துடன், வெகுதூரம் போகும்வரையில் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கடைக்கண்ணால் அவர்களைப் பார்த்துக்கொண்டே பலராமனுடனும், அக்ரூரனுடனும் தேரில் ஏறிப் புறப்பட்டார். கோபர்களின் எண்ணற்ற தேர்களும் பின்தொடர்ந்தன. கானகத்திலுள்ள மிருகங்கள் வருந்தின. மரங்கள் வாடின. 
அனைவரும் யமுனைக் கரையை அடைந்தார்கள். 

அக்ரூரர், நித்ய அனுஷ்டானம் செய்வதற்காக யமுனையில் மூழ்கினார். பரப்ரம்மமான கிருஷ்ணனை நீரினுள்ளேயும், வெளியே எழுந்ததும் தேரிலும் இருக்கக் கண்டார். இரண்டு இடங்களிலும் கண்ணனது தரிசனம் ஏற்படுகிறதே, என்ன ஆச்சர்யம்! என்று மெய்சிலிர்த்தார். மீண்டும் நீரில் மூழ்கினார். அங்கு அவரைப் பாம்பணையின்மேல் பள்ளி கொண்டிருப்பவராகவும், கரங்களில் சங்கு, சக்ரம், கதை, தாமரை ஏந்தியிருப்பவராகவும் கண்டார். தேவர்களும், சித்தர்களும் சூழ்ந்திருக்கக் கண்டார். அளவற்ற ப்ரும்மானந்த வெள்ளத்தில் திளைத்தார். பிரமனாகவும், சிவனாகவும், விஷ்ணுவாகவும் கண்டு ஸ்தோத்திரம் செய்தார். வைகுண்ட ஸ்வரூப காட்சியும் மறைந்தது. அனுபவித்த ஆனந்தத்தினால் மயிர்க்கூச்சலடைந்து தேரின் அருகே வந்தார். அவரிடம் கிருஷ்ணன், “ இந்த யமுனையின் ஜலம் மிகவும் குளிர்ச்சியாக இருக்கிறதா? உனக்கு ரோமாஞ்சம் உண்டாகியிருக்கிறதே” என்று அறியாதவர்போல் கேட்க, அக்ரூரரோ வைகுண்ட ஸ்வரூபத்தைக் கண்டதால் ஏற்பட்ட ஆனந்தத்தில் பேசமுடியாமல், பதில் கூறாமல் இருந்தார்.

Monday, February 2, 2015

கண்ணன் கதைகள் (52) - சங்கசூட, அரிஷ்டாசுர, கேசீ, வ்யோமாசுர வதம்

கண்ணன் கதைகள் (52) - சங்கசூட, அரிஷ்டாசுர, கேசீ, வ்யோமாசுர வதம்,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

கோபியர்களுடன் ராஸக்ரீடை முடிந்தது. ஒரு நாள், கோபர்கள் அனைவரும் அம்பிகா வனத்தில் உள்ள சிவனைத் தொழுவதற்காகச் சென்றார்கள். சரஸ்வதி நதியில் நீராடிவிட்டு, அம்பிகையையும், சிவனையும் விரதமிருந்து தொழுதார்கள். தொழுது முடித்ததும் நதிக்கரையிலேயே கோபர்கள் கண்ணயர்ந்தார்கள். அப்போது ஒரு பெரிய மலைப்பாம்பு நந்தகோபனை விழுங்கியது. கொள்ளிக்கட்டைகளால் அடித்தும் அந்தப் பாம்பு பிடியை விடவில்லை. கோபர்கள் கதறினார்கள். அந்த சத்தத்தைக் கேட்டு அங்கே வந்த கிருஷ்ணன், அப்பாம்பின் அருகே சென்று அதைக் காலால் உதைத்தான். உடனே அப்பாம்பு, வித்யாதர உருவம் எடுத்தது. அந்த வித்யாதரன்," சுதர்சன சக்கரத்தைக் கையில் ஏந்தியவரே! என் பெயர் சுதர்சனன். நான் வித்யாதரனாய் இருந்தபொழுது, முனிவர்களைப் பழித்தேன். அவர்கள் என்னை மலைப்பாம்பாக ஆகும்படி சபித்தனர். தங்கள் பாதம் பட்டு சுய உருவத்தை அடைந்தேன்" என்று கூறி, நமஸ்கரித்து வானுலகம் அடைந்தான். கோபர்களும் மகிழ்ந்து வீடு சென்றனர்.

கண்ணன் கதைகள் (52) - சங்கசூட, அரிஷ்டாசுர, கேசீ, வ்யோமாசுர வதம்,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

ஒரு சமயம், கிருஷ்ணன் பலராமனோடும், கோபியர்களோடும் பிருந்தாவனத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். கண்ணனுடைய குழலோசையில் கோபியர்கள் லயித்திருந்தனர். அப்போது அவ்வழியே சென்ற குபேரனுடைய வேலையாளான சங்கசூடன் என்பவன் கோபிகைகளின் அழகில் மயங்கி அவர்களைக் கவர்ந்து சென்றான். கிருஷ்ணனும், பலராமனும் அவனைப் பின்தொடர்ந்தார்கள். அதைக் கண்ட அவன், கோபிகைகளை விட்டுவிட்டுத் தப்பி ஓடினான். பலராமன் பயத்திலிருந்த கோபிகைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள, கிருஷ்ணன் சங்கசூடனைத் தொடர்ந்து சென்று, அவனுடைய தலையில் அடித்து அவனை வதம் செய்து, அவனுடைய தலையில் அணிந்திருந்த ரத்தின சூடாமணியை எடுத்து பலராமனிடம் கொடுத்தார்.


கண்ணன் கதைகள் (52) - சங்கசூட, அரிஷ்டாசுர, கேசீ, வ்யோமாசுர வதம்,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

கிருஷ்ணன், பகலில் நண்பர்களுடன் காட்டில் விளையாடி, மனதைக் கவரும் திருமேனியுடன் குழலூதிக் கொண்டிருந்தான். அப்போது, கம்ஸனின் வேலையாளான அரிஷ்டன் என்ற அசுரன், காளைமாடு உருவம் எடுத்துக்கொண்டு, பயங்கரமாய் சத்தமிட்டுக்கொண்டு அங்கே வந்தான். அனைவரையும் நடுங்கச் செய்துகொண்டு, பெரிய உருவத்துடன் பசுக்கூட்டங்களை விரட்டினான். பிறகு, நீண்ட கொம்புகளால் மரங்களை முட்டித் தள்ளினான். சிறுவர்கள் பயந்து அலறினார்கள். பிறகு கிருஷ்ணனின் எதிரே வந்தான். உடனே கிருஷ்ணன் அந்த அரிஷ்டாசுரனின் கொம்பைப் பற்றிப் பிடித்து, ஒரு கொம்பைப் பிடுங்கி, சுழற்றி வீசி எறிந்து கொன்றார். தேவர்கள் மகிழ்ந்தனர். இடைச்சிறுவர்கள் கிருஷ்ணனைத் துதித்துப் போற்றினர். இடையர்கள் சிரித்துக்கொண்டு, “காளைகளே! வ்ருஷபாசுரனைக் கொன்ற கிருஷ்ணன் இங்கே இருக்கிறான், நீங்கள் வெகுதூரம் ஓடி ஒளிந்து கொள்ளுங்கள்” என்று கூறினர். பிறகு, இடையர்கள் வீடு திரும்பினார்கள். 



கண்ணன் கதைகள் (52) - சங்கசூட, அரிஷ்டாசுர, கேசீ, வ்யோமாசுர வதம், கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

கேசீ என்பவன் கம்ஸனுடைய உறவினன். எந்த முயற்சியிலும் அவன் தோல்வியடைந்ததில்லை. அந்த அசுரன் குதிரை வடிவில் பிருந்தாவனத்தை வந்தடைந்தான். அந்த அசுரன் குதிரை வடிவம் எடுத்து வந்தாலும், அவனது குரல் அனைவரையும் நடுங்கச் செய்வதாய் இருந்தது. ஆயர்பாடியில் உள்ள அனைவரையும் துன்புறுத்தினான். பிறகு கிருஷ்ணனிடம் வந்தான். கிருஷ்ணனுடைய மார்பில் குதிரை எட்டி உதைத்தது. அந்த அசுரனுடைய கால்களின் உதையிலிருந்து விலகி, கிருஷ்ணன் அவனை வெகுதூரத்தில் வீசி எறிந்தார். அதனால் அவன் மயக்கம் அடைந்தாலும், மயக்கம் தெளிந்தவுடன் மீண்டும் அதிகக் கோபத்துடன் கண்ணனிடம் ஓடி வந்தான். அந்தக் குதிரையைக் கொல்லத் தீர்மானம் செய்த கிருஷ்ணன், தன்னுடைய கைகளை அவன் முகத்தில் வைத்து அழுத்தினார். அதனால், அந்த குதிரை வடிவெடுத்த அசுரன் மூச்சுத் திணறி உயிரிழந்தான். கேசீ என்ற குதிரையைக் கொன்றதால், தேவர்கள் மகிழ்ந்து கிருஷ்ணனைக் ‘கேசவன்’ என்று பெயரிட்டுப் போற்றித் துதித்தனர். அங்கு வந்த நாரதர், அசுரனான கேசீ வதம் செய்யப்பட்டதும் கிருஷ்ணனைத் துதித்து நமஸ்கரித்தார். பின்னர், கம்ஸனின் முயற்சிகளை கண்ணனிடம் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.


கண்ணன் கதைகள் (52) - சங்கசூட, அரிஷ்டாசுர, கேசீ, வ்யோமாசுர வதம்,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

ஒரு நாள் இடையர்களுடன் கண்ணன் ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, தேவர்களைத் துன்புறுத்துபவனும், அளவற்ற மந்திர சக்திகள் கொண்டவனும், மயனுடைய பிள்ளையுமான வ்யோமன் என்ற அசுரன், அங்கு வந்தான். திருடர்களும், காப்பாற்றுகிறவர்களும் என்ற விளையாட்டில் வ்யோமாசுரன் திருடனாய்க் கலந்து விளையாடினான். இடைச்சிறுவர்களையும், பசுக்களையும், திருடி குகையில் அடைத்து வைத்து, குகையின் வாயிலைப் பெரிய கல்லால் அடைத்து மூடினான். இதையறிந்த கிருஷ்ணர் அவனைப் பிடித்தார். வ்யோமாசுரன் மலையைப் போன்று தனது உருவத்தைப் பெரிதாக்கிக் கொண்டான். ஆனால் கிருஷ்ணன் அவனைத் தரையில் தள்ளி நொறுக்கிக் கொன்றார். கிருஷ்ணர், இவ்வாறு அதிசயக்கத்தக்க, நிகரற்ற பல விளையாட்டுக்களால் ஆயர்பாடி மக்களை ஆனந்தக் கடலில் ஆழ்த்தினார்.

Sunday, February 1, 2015

கண்ணன் கதைகள் (51) - ராஸக்ரீடை

 கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள், கண்ணன் கதைகள் (51) - ராஸக்ரீடை

கோபியர்கள் மிகுந்த ஆனந்தமாக யமுனைக்கரையில் கண்ணனுடன் விளையாடினார்கள். தலையில் மயில் பீலியுடனும், காதுகளில் மீன் குண்டலங்களும், கழுத்தில் முத்து மாலைகளும், வனமாலையும் அசைய, பீதாம்பரமும், ஒட்டியாணமும், ரத்தினங்கள் இழைக்கப்பட்ட கொலுசுகளும் அணிந்து, வாசனைப் பொடிகள் முதலியவற்றால் மணம் வீசும் சரீரத்துடன், அலங்கரிக்கப்பட்ட கிருஷ்ணன் அனைவரின் மனம் மயங்கும்படியான அழகுடன் விளங்கினான். அப்போதே, மார்புக்கச்சைகளை இறுக்கிக் கட்டிக்கொண்டு, தங்களை அணிகலன்களால் அலங்கரித்துக்கொண்டு கோபியர்கள் அவனைச் சுற்றி வட்டமாய் நின்றார்கள். கிருஷ்ணனும் அப்பெண்களுக்கிடையில், (இரு கோபிகைகளுக்கிடையில் ஒரு கிருஷ்ணன், இரு கிருஷ்ணனுக்கு இடையில் ஒரு கோபிகை) நின்று கொண்டு, நர்த்தனம் செய்துகொண்டு, தனது யை ஆரம்பித்தான்.

நாரதர் கிருஷ்ணனுடைய ராஸக்ரீடையின் அழகைக் கூறக் கேட்ட தேவர்கள், தேவ மங்கையருடன் வேகமாய் வந்து ஆகாயத்தில் சூழ்ந்து நின்றனர். கண்ணனின் புல்லாங்குழலிலிருந்து இனிய ஓசை உண்டானது. அழகிய ஸ்வரங்களுடன், சிறப்பான ராகங்களுடன், மனோகரமான ஆலாபனங்களுடன் இனிமையான இசை உண்டானது. இசைக்கு ஏற்றவாறு அவனுடைய கால்கள் தாளமிட்டன. கைவளைகள் ஒலியெழுப்பின. இடுப்பிலுள்ள ஆடைகள் அசைய, தாமரை போன்ற கைகளைத் தோளில் வைத்துக் கொண்டிருக்கும் இந்த ராஸக்ரீடையின் காட்சி மிக்க மனோகரமாய் இருந்தது. இனிமையான இசையை மேல் ஸ்தாயியில் பாடிக்கொண்டு, பின்னணிக் கொத்து என்ற நடனம் ஆரம்பித்தது. நடனத்தின் அசைவின்போது, அனைவரும் அணிந்திருந்த ஆபரணங்கள் இடம் மாறி நகர்ந்து மிக அழகாய் இருந்தது. தேவர்கள் பூமாரி பொழிந்து, மனம் மயங்கினர். தேவமங்கையரும் மனம் மயங்கினர். வியர்த்துக் களைத்த அழகான கோபிகை ஒருத்தி, சோர்வுடன் நடனம் செய்ய முடியாமல், கிருஷ்ணனுடைய தோளைப் பிடித்துக் கொண்டு தொங்கினாள். முன் நெற்றிக்குழல்கள் கலைந்த ஒரு கோபிகை மயிர்க்கூச்சலுடன், சந்தன மணம் வீசும் அவனுடைய கைகளை முத்தமிட்டாள். அதிர்ஷ்டசாலியான ஒரு கோபிகை, குண்டலங்கள் ஆடும் தன்னுடைய கன்னத்தை, அவனுடைய கன்னங்களுடன் இணைத்து, அவன் வாயிலிருந்து தாம்பூலத்தைப் பெற்று, அதை உறிந்து சுவைத்தாள். அப்பெண்கள், நர்த்தனத்தின் போது, பல வித சுகமான நிலைகளை அடைந்தார்கள். பாட்டு நின்றது. வாத்தியங்களும் ஓய்ந்தன. பிரும்மானந்த ரஸத்தில் மூழ்கிய கோபிகைகள் மட்டும் ஆடிக்கொண்டிருந்தனர். அவர்கள், மேலாடை கலைந்ததையோ, ரவிக்கை அவிழ்வதையோ, கச்சத்தின் முடிச்சு அவிழ்வதையோ அறியவில்லை. வானில் நட்சத்திரக் கூட்டமும் நின்று விட்டன. கிருஷ்ணன், அகில உலகங்களையும் பிரும்மானந்த ரஸத்தில் மூழ்கச் செய்து, தனது ராஸலீலையை முடித்தான். நடனமாடியதால் உண்டான வியர்வைத் துளிகளுடன் கோபிகைகள் மனம் மயங்கி நின்றிருந்தனர். அங்கு, எத்தனை கோபிகைகள் இருந்தார்களோ அத்தனை கிருஷ்ணனாக வந்து அவர்களைக் களிக்கச் செய்தான்.

மிகவும் அழகான சரீரமுள்ளவர்களும், சோர்வை அடைந்தவர்களுமான அப்பெண்களோடு விளையாடினான். அக்காட்டில், மந்தமாருதம் வீசும் போது வந்த பூக்களின் வாசனையால் அப்பெண்கள் மயங்கி நின்றார்கள். யோகிகள் மட்டுமே அடையக்கூடிய பரமானந்த வெள்ளத்தில் அப்பெண்கள் மூழ்கினார்கள். இந்த கோபிகைகள் மிகுந்த பேறு பெற்றவர்கள், இவர்களால் நாம் ராஸக்ரீடையைக் காணும் பாக்கியம் பெற்றவர்கள் ஆனோம் என்று ப்ரம்மா, பரமசிவன், தேவர்கள் யாவரும் அதிசயித்தார்கள்.

Saturday, January 31, 2015

கண்ணன் கதைகள் (50) - கோபியர்களின் மதிமயக்கம்

கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள், கண்ணன் கதைகள் (50) - கோபியர்களின் மதிமயக்கம்

கோபிகைகள் கண்ணனையே கணவனாக அடைய வேண்டும் என்று காத்யாயனீ பூஜை செய்தார்கள். அந்தப் பூஜையின் முடிவில், முன்பே கோபியரிடம் கூறியபடி, நிலவொளியில், யமுனைக்கரையில் கண்ணன் குழலூதிக் கொண்டு நின்றான். அவன் புல்லாங்குழலில் இருந்து கிளம்பிய ஏழு ஸ்வரங்களால் உண்டான நாதம், உலகம் முழுவதையும் மயங்கச் செய்தது. அதைக் கேட்ட கோபியர்களும் சொல்லமுடியாத மதிமயக்கம் கொண்டனர்.வீட்டு வேலையில் ஈடுபட்டுக் கொண்டும், குழந்தைகளை கவனித்துக் கொண்டும், கணவனுக்குப் பணிவிடை செய்து கொண்டும் இருந்த கோபியர்கள், கண்ணனின் குழலோசையைக் கேட்டதும், மனம் மயங்கி, எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடி வந்தார்கள்.

சில கோபியர்கள் பாதி நகைகளைப் போட்டுக் கொண்டும், பாதி அலங்கரித்துக் கொண்டும் ஓடி வந்தார்கள். ஒரு பெண் தன் கழுத்தில் ஒட்டியாணத்தையும், இடுப்பில் ஹாரத்தையும் மாற்றி அணிந்துகொண்டு வந்தாள். மற்றொரு பெண், அதிக அன்பினால், ரவிக்கை அணிய மறந்து, மற்றவர்களுக்குத் தெரியாமல் ஓடி வந்தாள். அவள் ஓடி வந்தது, கண்ணனுக்கு அன்பாகிற பாரத்தை அபிஷேகம் செய்ய இரு குடங்களை எடுத்து வந்தது போலத் தோன்றியது. கணவர்களாலும் வீட்டிலுள்ளவர்களாலும் தடுக்கப்பட்ட சில பெண்கள், கண்ணனை மனதால் தியானம் செய்தார்கள். அவர்கள் உடலைவிட்டு ஆனந்த வடிவமான பரப்ரம்மத்தை அடைந்து மிகவும் புண்ணியம் செய்தவர்கள் ஆனார்கள்.அந்தப் பெண்கள் எவரும் கண்ணனைப் பரமாத்மா என நினைத்து வரவில்லை. காதலனாகவே நினைத்து வந்தனர். ஆயினும் நொடியில் துறவிகள் அடையக்கூடிய முக்தியை அடைந்தனர். கருணையான பார்வையாலும், புன்சிரிப்பினாலும் அழகாய் குழலூதிக் கொண்டு நிற்கும் கண்ணனை, கோபியர்கள் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். அவன் அருகே வந்த அந்த கோபியர்கள் மயங்கி நின்றார்கள்.

அவர்களின் எண்ணத்தை அறிந்திருந்தும், வானத்தில் கூடியிருக்கும் முனிவர்களும், உலக மக்களும் கேட்பதற்காக, குடும்பப் பெண்களின் தர்மத்தைப் பற்றி அப்பெண்களுக்கு கண்ணன் எடுத்துக் கூறினான். முன்பு கூறியதற்கு நேர்மாறான அவனுடைய வார்த்தைகளைக் கேட்ட கோபியர் மிகுந்த சோகம் அடைந்தனர். கண்ணா! எங்களைப் புறக்கணிக்காதீர்கள் என்று புலம்பினார்கள்.அவர்கள் புலம்பிக்கொண்டு அழுவதைப் பார்த்த கண்ணன், கருணை கொண்டு, யமுனைக் கரையின் மணல் குன்றுகளில் அவர்களுடன் விளையாடினான்.நிலவொளி வீசும் யமுனைக்கரையில், மணல் குன்றுகளில், கோபிகைகள் மேலாடையினால் ஆசனம் அமைத்து, கண்ணனை அமரச் செய்தார்கள். கண்ணன், அவர்களுடைய கைகளைப் பிடித்தும், முத்தமிட்டும், கட்டி அணைத்தும், இனிமையாகப் பேசியும், அந்த கோபிகைகளின் மனதை மயக்கி அவர்களை மகிழ்வித்தான். அழ்காகப் புன்னகைத்துக்கொண்டே அந்தப் பெண்களின் ஆடைகளை மறுபடி கவர்ந்தான். கண்ணனின் முகம் சிறு வியர்வைத் துளிகளால் நிறைந்து மூவுலகிலும் அழகு வாய்ந்ததாக இருந்தது. கோபியர்கள் கண்ணனைத் தழுவிக் கொண்டு அளவற்ற ஆனந்தம் அடைந்தார்கள். அளவற்ற ஆனந்தம் அடைந்ததால், மிகுந்த கர்வம் கொண்டார்கள்.உலகிலேயே அழகனான கண்ணன், என்னிடத்தில் மட்டும் அன்பு கொண்டிருக்கிறான் என்று ஒவ்வொரு கோபியரும் நினைத்தார்கள். அதனால் மிகுந்த கர்வம் கொண்டவர்களாக ஆனார்கள். அதையறிந்த கோவிந்தன், அந்த நொடியிலேயே மறைந்து போனான். ராதையென்ற கோபிகை மட்டும் கர்வமில்லாமல், அன்பு மிகுந்து இருந்தாள். .கண்ணன் அவளை அழைத்துக்கொண்டு வெகுதூரம் சென்று, அவளுடன் விளையாடினான்.

கண்ணன் மறைந்ததால், கோபியர் மிகுந்த துயரம் அடைந்தனர். அனைவரும் ஒன்றுகூடி கானகம் முழுவதும் தேடினார்கள். அவன் கிடைக்காததால் மிகுந்த வருத்தம் அடைந்தனர். மாமரமே, சம்பகமரமே, மல்லிகைக் கொடியே, எங்கள் கண்ணனைக் கண்டீர்களா? என்று மரங்களையும், கொடிகளையும் கேட்டு, கவலையுடன் புலம்பினார்கள்.கோபிகை ஒருத்தி, கற்பனையில் கண்ணனைக் கண்டு, மற்ற கோபியரிடம், கண்ணனை என் எதிரில் பார்த்தேன் என்று கூறினாள். அதைக் கேட்ட மற்றவர்களுடைய துன்பம் அதிகரித்தது. அவர்கள் எல்லாரும் கண்ணனையே நினைத்து, அவனுடைய செய்கைகளைப் பற்றியே பேசி வந்தார்கள்.

அப்போது ராதை கர்வம் கொண்டதால் அவளையும் விட்டு மாயமாய் ம
றைந்தான் கண்ணன். அனைவரும், ராதையுடன் கூட, இருட்டும்வரை கானகத்தில் தேடினார்கள். மனம் கலங்கி மீண்டும் யமுனைக் கரைக்கு வந்து புலம்பினார்கள். அவர்களது துன்பத்தைக் கண்டு கருணை கொண்டு, கோபியரின் முன், மன்மதனையும் மயங்கச் செய்யும் அழகுடன், மூவுலகங்களையும் மயக்கும் புன்சிரிப்புடன்மீண்டும் கண்ணன் தோன்றினான். அவனை நேரில் கண்ட கோபியர்கள் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார்கள். தங்கள் மகிழ்ச்சியை விதவிதமாக வெளிப்படுத்தினார்கள். சிலர் அசைவற்று நின்றார்கள். ஒரு கோபிகை, மயிர்க்கூச்சலுடன், கண்ணனது கையை எடுத்து, தனது மார்பில் வைத்துக்கொண்டு நின்றாள். மற்றொருத்தி அவன் கையை எடுத்து, தன் மூச்சே நின்றுவிடும்படி தனது கழுத்தில் இறுகச் சுற்றிக் கொண்டாள்.இன்னொரு கோபிகை, வெட்கத்தை விட்டு, கண்ணன் வாயிலிருந்து தாம்பூலத்தைப் பெற்று, அதை உண்டு, அனைத்தையும் அடைந்து விட்டதாய் நினைத்தாள். இரக்கமில்லாமல் என்னைக் காட்டில் விட்டுவிட்டுச் சென்ற உன்னை யாரும் தொடமாட்டார்கள் என்று ஒரு கோபிகை கண்ணில் நீர் வழிய கோபத்துடன் கூறினாள். ஆனந்தப் பரவசர்களாகி அக்கோபியர்கள், யமுனைக்கரையில் மீண்டும் தமது மேலாக்கினால் ஆசனம் செய்தார்கள். கண்ணனும் அதில் அமர்ந்தான்.

கண்ணன் அவர்களிடம், "பெண்களே! கல்நெஞ்சம் படைத்தவன் என்று என்னை சந்தேகப்படாதீர்கள். உங்கள் அதிக அன்பினால் பயந்து, உங்களுடைய மனம் என்னையே நாடவேண்டும் என்று நான் மறைந்து சென்றேன்" என்று கூறினான். மேலும்,"கோபியர்களே! உங்களைவிட என்னிடம் அன்பு கொண்டவர் எவரும் கிடையாது. ஆகையால், நிலவொளி வீசும் இந்த இரவில், என்னுடன் தடையின்றி விளையாடுங்கள்" என்று கூறினான். தேனினும் இனிய அந்த வார்த்தையால் மிகுந்த ஆனந்தம் அடைந்த கோபியர்கள், மகிழ்ந்து கண்ணனுடன் யமுனைக்கரையில் விளையாடினார்கள்.

Friday, January 30, 2015

கண்ணன் கதைகள் (49) - வருணன் நந்தனைக் கடத்திச் செல்லுதல்

கண்ணன் கதைகள் (49) - வருணன் நந்தனைக் கடத்திச் செல்லுதல்,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

ஒரு நாள் நந்தகோபர் ஏகாதசி விரதமிருந்து, துவாதசி விடியற்காலை என்று நினைத்து இரவில் யமுனையில் நீராடினார். வருணனின் வேலையாளான ஒரு அசுரன் அவரை இழுத்துச் சென்றான். நந்தனைக் காணாமல் அனைவரும் கதறி அழுதனர். கண்ணனிடம் சரணடைந்தனர். கண்ணன் தனது யோக சக்தியால் வருணனின் லோகத்தில் நந்தகோபர் இருப்பதை அறிந்து, உடனே வருணலோகம் சென்றான். 

கண்ணனைக் கண்ட வருணன் பக்தியுடன் தொழுது, பூஜை செய்தான். பிறகு, "ஹரியே! இன்று நான் பாக்கியம் செய்தவனானேன். பிறவிப் பிணி அகற்றுபவரே! எனது வேலையாள் செய்த  இந்தத் தவறை மன்னித்து அருளுங்கள். உம்முடைய தந்தையாரை அழைத்துச் செல்லுங்கள்" என்று கூறினான். அதே நொடியில் நந்தகோபரை அழைத்துக் கொண்டு கண்ணன் வீட்டிற்குச் சென்றான். நந்தகோபரும் தன் சுற்றத்தாரிடம் அதைப் பற்றிக் கூறினார். 

ஆயர்கள் கண்ணனை 'ஸ்ரீஹரி' என்று நிச்சயித்து, அவரது 
இருப்பிடமான வைகுண்டத்தைக் காண விரும்பினார்கள். எங்கும் நிறைந்திருக்கும் திருமாலான கண்ணன், யாராலும் அடைய முடியாத வைகுண்டலோகத்தை உள்ளங்கை நெல்லிக்கனி போல அவர்களுக்குக் காண்பித்தான்வைகுண்டத்தைக் கண்ட கோபர்கள், ஆனந்த நிலையை அடைந்து, கைவல்யம் (மோக்ஷம்) என்ற சமுத்திரத்தில் மூழ்கினார்கள். அவர்களை மீண்டும் உலக உணர்வுக்கு அழைத்து வந்தான். மீண்டும் அவர்கள் பிருந்தாவனத்தில் இருந்தார்கள். இடையனாக வேடம் கொண்ட இந்த கிருஷ்ணாவதாரத்தில் பிரத்யக்ஷமாக வைகுண்டத்தைக்  காண்பித்து அதிசயத்தக்க லீலைகளைப் புரிந்து வந்தான்

Thursday, January 29, 2015

கண்ணன் கதைகள் (48) - கோவிந்த பட்டாபிஷேகம்


கண்ணன் கதைகள் (48) - கோவிந்த பட்டாபிஷேகம்,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

                                         கண்ணன் கதைகள் (48) - கோவிந்த பட்டாபிஷேகம்,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

தோல்வி அடைந்த இந்திரன், கர்வத்தை விட்டு, கண்ணனைப் புகழ்ந்து துதித்து, 'காமதேனு' என்ற தேவலோகத்துப் பசுவைப் பரிசாக அளித்தான். கண்ணனுடைய தாமரைப் பாதங்களில் தலை வைத்து வணங்கினான். காமதேனு என்ற அந்தப் பசு, "உலகிற்கெல்லாம் நாயகனே! தாங்கள் பசுக்களைக் காக்கும் குலத்தில் பிறந்தது எங்கள் பாக்கியம்! 'கோ'க்களைக் காக்கும் உமக்கு என் பாலைச் சொரிந்து, கோவிந்தன் எனப் பெயரிடுகிறேன் " என்று கூறி தனது பாலால் அபிஷேகம் செய்தது. இந்திரனும் 'ஐராவதம்' என்ற தனது யானை கொண்டு வந்த கங்கை ஜலத்தால் அபிஷேகம் செய்தான். இவ்வாறு கண்ணனுக்கு 'கோவிந்தன்' என்று பட்டாபிஷேகம் செய்ததும், ஆயர்பாடியில், வைகுண்டத்திலும் ஸ்வர்க்கத்திலும் கிடைக்காத ஐஸ்வர்யம் நிறைந்தது.

மலையைத் தூக்கியது போன்ற கண்ணனுடைய மகிமைகளைப் பார்த்த கோபர்கள், அவனை உலகிற்கெல்லாம் நாயகன் என்று உணர்ந்தனர். நந்தகோபனிடம் தங்கள் ஜாதகத்தின் பலனைக் கேட்டார்கள். அவர்களிடம் நந்தகோபர், முன்பு கர்க்க முனிவர் கூறியவற்றைச் சொன்னார். அவர்கள் அவன் மேல் அதிக அன்பும் பாசமும் கொண்டனர்.

Wednesday, January 28, 2015

கண்ணன் கதைகள் (47) - கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்தல்

கண்ணன் கதைகள் (47) - கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்தல், கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

ஒரு முறை, இடையர்கள் இந்திரனைப் பூஜிப்பதற்காக ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார்கள். இந்திரனுக்கு தான் மூவுலகங்களுக்கும் தேவன் என்ற மமதை அதிகரித்தது. அதனால் மும்மூர்த்திகளையும் வணங்காமல் அகம்பாவம் கொண்டிருந்தான். அவனுக்குப் பாடம் கற்பிக்க விரும்பிய கண்ணன், நந்தகோபரிடம்,"தந்தையே! இந்த ஏற்பாடுகள் எதற்கு?" என்று அறியாதது போல் கேட்டான். நந்தனும், “மகனே! இந்திரன், மழை பொழியச் செய்து நம் பூமியைச் செழிப்பாக வைக்கிறார். அதனால் அவருக்கு ஒவ்வொரு வருடமும் பூஜை செய்ய வேண்டும். அனைவரின் பிழைப்பும் மழை மூலம் ஏற்படுகிறது. பசுக்களும் நீரையும் புல்லையும் நம்பி இருக்கின்றன” என்று கூறினார். தந்தையின் சொல்லைக் கேட்டு, “இந்திரனால் மழை கிடைக்கிறது என்பது உண்மையல்ல. நாம் முன் ஜன்மத்தில் செய்த தர்மத்தால் மழை பெய்கிறது. காட்டில் உள்ள மரங்கள் இந்திரனுக்கு என்ன பூஜை செய்கின்றன?” என்று கண்ணன் கேட்டான். மேலும்,"இந்தப் பசுக்கள் நம் இடையர்களின் சொத்து. அவைகளுக்குப் புல்லையும், நீரையும் கொடுப்பது கோவர்த்தன மலை. அதனால், கோவர்த்தன மலைக்கும், தேவர்களைவிடச் சிறந்த முனிவர்களுக்கும் பூஜை செய்ய வேண்டும்" என்று கூறினான். அதைக் கேட்ட இடையர்கள், முனிவர்களையும், கோவர்த்தன மலையையும் பூஜித்தனர். பிறகு மலையை வலம் வந்து நமஸ்கரித்தனர். அனைத்து பூஜைகளையும் திருமாலான கண்ணனே மலை வடிவில் பெற்றுக் கொண்டான். கண்ணனுடைய திருவிளையாடல் ஆரம்பமானது. சிரித்துக் கொண்டே இடையர்களிடம், “நான் சொன்னதுபோல் இம்மலை பூஜையை ஏற்றுக்கொண்டது. அதனால் இந்திரன் கோபித்துக் கொண்டாலும், இம்மலையே நம் எல்லோரையும் காக்கும்” என்று சொன்னான். அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் வீடு சென்றனர்.

தனக்குச் சேர வேண்டிய பூஜையில் இடையூறு ஏற்பட்டதைக் கேட்ட இந்திரன் கோபம் கொண்டான். மிகுந்த அகங்காரத்தால் “இடையர்களின் சொத்துக்களை அழித்து நாசம் செய்கிறேன்” என்று இந்திரன் ஆர்ப்பரித்தான். 'ஐராவதம்' என்ற தன் யானையின்மீது ஏறிக்கொண்டு, வஜ்ராயுதத்தை எடுத்துக்கொண்டு, பிரளயகாலத்து மேகங்களை உருவாக்கி, இடையர்களின் இருப்பிடத்தை அழிக்கப் புறப்பட்டான்.

கண்ணனது திருமேனிக்கு ஒப்பான கார்மேகங்கள் வானத்தில் சூழ்ந்தன. இடிமுழக்கம் அனைவரையும் நடுங்கச் செய்தது. அம்மேகங்களைப் பார்த்து அனைவரும் நடுங்கினார்கள். ஆனால், கண்ணன் சந்தோஷித்தான். பெரிய ஆலங்கட்டிகளுடன் கூடிய மழை பெய்தது. பிருந்தாவனம் நீரில் மூழ்கத் தொடங்கியது. இடையர்கள் பயந்து, “கண்ணா, இந்திரனின் கோபத்திலிருந்து எங்களைக் காக்க வேண்டும்” என்று கூக்குரலிட்டனர். இந்திரனால் நமக்கு ஒரு கெடுதலும் நேராது. முனிவர்களும், கோவர்த்தன மலையும் நிச்சயம் நம்மைக் காப்பார்கள் என்று இடையர்களுக்கு சமாதானம் கூறினான் கண்ணன். இந்த கோவர்த்தனமலை இந்திரனின் கொடுமையிலிருந்து அனைவரையும் காத்து, அழிவை நிச்சயம் தடுக்கும் என்று சொல்லிக்கொண்டே, புன்சிரிப்புடன் தனது இளம் கரங்களால் அம்மலையை வேரோடு பிடுங்கி இழுத்தான். தாமரைக் கரங்களால் மலையைக் குடைபோல உயரே தூக்கி, அதன் கீழ் இடையர்களின் உடைமைகளையும், பசுக்களையும், மக்களையும் இருக்கச் செய்தான். ஒரு கையால் மலையை தூக்கிக் கொண்டும், மறு கையால்அருகே வந்த பசுக்களைச் சொறிந்து கொண்டும், நண்பர்களுடனும், கோபியருடனும் விளையாட்டாய்ப் பேசிக்கொண்டு இருந்தான். இடையர்கள், “இவ்வளவு பெரிய மலையைக் கண்ணன் சிறு கரங்களால் தூக்கிக்கொண்டிருக்கிறார். ஆச்சர்யம்! இது மலையின் பெருமையாய் இருக்குமோ?” என்று அறியாது கூறினார்கள். இந்திரன், “இச்சிறுவனுக்கு என்ன தைரியம்? சிறிது நேரத்தில் மலையைத் தூக்க முடியாமல், கீழே போட்டுவிடுவான்” என்று நினைத்து ஏழு நாட்கள் கடுமையாக மழை பொழியச் செய்தான். ஆனால் கண்ணன் சிறிதும் நகரவில்லை. நீர் முழுவதையும் சொறிந்த மேகங்களைக் காற்று வெகுதூரம் தள்ளிச் சென்றது. இந்திரனும் பயந்து ஓடினான். மழை நின்றுவிட்டது. கண்ணன் அனைவரிடமும், "இப்போது நீங்கள் எல்லாரும் வெளியே வரலாம், இந்திரனால் இனிமேல் ஆபத்து வராது" என்று கூற, இடையர்களும், தங்களது உடைமைகளையும், பசுக்களையும் அழைத்துக் கொண்டு வெளியே வந்தார்கள். கண்ணன், மலையை மீண்டும் அதன் இடத்திலேயே வைத்தான். சந்தோஷமடைந்த கோபர்கள் அவனைக் கட்டித் தழுவினர். பெரியவர்கள் அவனை ஆசீர்வதித்தனர்!!

கிருஷ்ணன் தனிமையில் இருக்கும்போது, இந்திரனும் தன் தவற்றை உணர்ந்து மன்னிக்க வேண்டினான். கண்ணனும், "இந்திரனே! உன்னுடைய கர்வத்தைப் போக்கவே இவ்வாறு செய்தேன், உனக்கு இடப்பட்ட பணிகளை கர்வமின்றி செய்வாயாக" என்று கூறி இந்திரனை மன்னித்தான். லக்ஷ்மிநாதனே! வராக அவதாரத்தில் பூமியையே தூக்கிக்கொண்டிருந்த தங்களுக்கு, கோவர்த்தனமலையைத் தூக்குவதில் என்ன கஷ்டம்? என்று தேவர்கள் துதித்தனர்.

Tuesday, January 27, 2015

கண்ணன் கதைகள் (46) - அந்தணப் பெண்களை அனுக்ரஹித்தல்

கண்ணன் கதைகள் (46) -  அந்தணப் பெண்களை அனுக்ரஹித்தல்,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

ஒரு முறை, கண்ணன் பிருந்தாவனத்திலிருந்து வெகு தூரத்திலுள்ள காட்டிற்கு இடைச்சிறுவர்களுடன் பசுக்களை மேய்க்கச்சென்றான். மனித நடமாட்டமற்ற அக்காட்டில் சிறுவர்களும் பசுக்களும், பசியாலும் தாகத்தாலும் வாடினர். அதைக்கண்ட கண்ணன், அருகே யாகம் செய்து கொண்டிருக்கும் அந்தணர்களிடம் உணவு கேட்கச் சொல்லி அச்சிறுவர்களை அனுப்பினான். அவர்கள் அந்தணர்களிடம் சென்று யாசித்தார்கள். வேதமறிந்த அந்த அந்தணர்கள், காது கேட்காதவர்கள் போல் பேசாமல் இருந்தார்கள். உணவு கிடைக்காததால் சிறுவர்கள் வருந்தி, திரும்பி வந்தார்கள். கண்ணன், "அந்தணர்களின் மனைவியரிடம் சென்று நான் வந்திருப்பதாகக் கூறி உணவு கேளுங்கள், இரக்கம் மிகுந்த அவர்கள் அன்னம் கொடுப்பார்கள்" என்று சிறுவர்களிடம் கூறினான். அவ்வாறே குழந்தைகளும் அந்தப் பெண்களிடம் உணவு கேட்டனர். நெடுநாட்களாகத் கண்ணனைக் காண விரும்பிய அப்பெண்கள், கண்ணனுடைய பெயரைக் கேட்டவுடன், அவனை நேரில் காண ஆவல் கொண்டு, நான்கு விதமான அன்னங்களை எடுத்துக்கொண்டு வந்தார்கள். அவர்கள் கணவர்கள் தடுத்தும்கூட வேகமாய் கண்ணன் இருக்குமிடம் வந்தார்கள்.

தலையில் மயில் பீலியுடன், ஒளிவீசும் குண்டலங்களுடன், மஞ்சள் பட்டணிந்து, நீல மேனியுடன், வனமாலையணிந்து, கருணை நிரம்பிய பார்வையுடன், நண்பனின் தோளில் கையை வைத்துக் கொண்டு, பலராமனுடன் நிற்கும் கண்ணனை அப்பெண்கள் கண்டார்கள்.அவர்களில் ஒரு பெண்ணுக்கு, அவளுடைய கணவன் தடுத்ததால் வரமுடியவில்லை. அவள் அங்கேயே கண்ணனை தியானம் செய்து அவனுடன் கலந்து மோக்ஷம் அடைந்தாள். அப்பெண்கள், உலகங்களின் தலைவனான கண்ணனையே விழிகளை இமைக்காமல் நெடுநேரம் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் மனம் முழுவதும் கண்ணனே நிறைந்திருந்தான். அவர்கள் கொண்டு வந்திருந்த உணவினை  கண்ணனிடம் கொடுத்தனர்.

கண்ணன், அந்தணப்பெண்கள் அளித்த உணவை ஏற்று அவர்களை அனுக்ரஹம் செய்தான். கண்ணனுக்கு சேவை செய்ய விரும்பிய அவர்களை, அவர்களுடைய கணவர்கள் செய்யும் யாகத்திற்கு உதவும்படி உத்தரவிட்டு, அவர்கள் கணவர்களையும் அவர்களிடம் அன்புடன் இருக்கப் பணித்தான். அவர்களும் தங்கள் தவறுகளை உணர்ந்து, தத்தம் மனைவியரின் பக்தியையும் உணர்ந்து, கண்ணனைத் துதித்தனர். பிறகு, கண்ணன் அந்தணப் பெண்கள் அளித்த உணவை, தன் நண்பர்களுடன் உண்டு மகிழ்ந்தான்.

Monday, January 26, 2015

கண்ணன் கதைகள் (45) - கோபிகைகளின் ஆடைகளை அபகரித்தல் / கோபிகா வஸ்த்ராபஹரணம்

கண்ணன் கதைகள் (45) - கோபிகைகளின் ஆடைகளை அபகரித்தல் / கோபிகா வஸ்த்ராபஹரணம்,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

கண்ணனின் அழகிய வடிவைக் கண்ட கோபிகைகள் மிகுந்த மோகத்தை அடைந்த கோபிகைகளின் மனம் சஞ்சலமுற்றது. அவர்கள் கண்ணனுக்கு சேவை செய்ய விரும்பி, யமுனா நதிக்கரையில் கூடி, மணலால் பார்வதிதேவியைப்போன்ற பிம்பம் செய்து பூஜித்தனர். கோபிகைகள், கண்ணனின் திருநாமத்தையும், கதைகளையும் கூறிக்கொண்டே யமுனாநதிக்கு வந்தார்கள். பிறகு, நந்தகோபனின் மகன் கோபாலனே கணவனாய் வரவேண்டும் என்று பூஜித்து வேண்டினார்கள். இவ்வாறு ஒரு மாதம் விரதமிருந்தார்கள்.

கண்ணன் அவர்களிடம் கருணை கொண்டு, அவர்களை ஆசீர்வதிக்க யமுனைக் கரைக்குச் சென்றான். விரதம் முடிந்ததும், கோபிகைகள், தங்கள் ஆடைகளைக் களைந்து, கரையின்மேல் வைத்துவிட்டு, யமுனையில் விளையாடத் தொடங்கினார்கள். யமுனைக் கரைக்குச் சென்ற கண்ணன் அந்த கோபிகைகளின் ஆடைகளை எடுத்துக்கொண்டு அருகிலுள்ள மரத்தின் மீது ஏறினான்.

குளித்துவிட்டு வந்த கோபிகைகள், எதிரே கண்ணனைக் கண்டு, வெட்கத்துடன் தலைகுனிந்து நின்றார்கள். "பெண்களே! இங்கு வந்து உங்கள் ஆடைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று புன்சிரிப்புடன் கண்ணன் கூறினான். கோபிகைகள் வெட்கத்தினால் வெளியேவர முடியாமல் திகைத்தனர்.
‘செந்தாமரைக் கண்ணனே! தங்களுக்கு சேவை செய்ய வந்த எங்களை ஏன் கஷ்டப்படுத்துகிறீர்? எங்கள் ஆடைகளைக் கொடுக்கவேண்டும்’ என்று கோபிகைகள் வேண்டினார்கள். கண்ணனோ புன்சிரிப்பையே கோபிகைகளுக்குப் பதிலாகத் தந்தான்.

அவர்கள் கரையேறி, இரு கைகளையும் கூப்பி வணங்கினார்கள். தன்னை சரணடைந்ததால், கண்ணன் அவர்களுக்கு ஆடைகளை அளித்து, "நீங்கள் ஆடையில்லாமல் குளித்த பாபம் நீங்கவே இவ்வாறு செய்தேன்" என்று உபதேசமும் செய்தான். மேலும், "உங்கள் எண்ணத்தை அறிந்து கொண்டேன். நதியின் மணல்குன்றுகளில், நிலா வெளிச்சத்துடன் கூடிய இரவில் நீங்கள் வேண்டியது கிடைக்கும்" என்று கூறினான். தேனினும் இனிய அந்த சொற்களைக் கேட்ட கோபியர்கள், கண்ணனுடைய தாமரை முகத்தைத் திரும்பிப் பார்த்தபடியே மெதுவே வீடு சென்றார்கள். இவ்வாறு கருணையுடன் அனுக்ரஹம் செய்து கோபிகைகளுக்கு ஆனந்தத்தை அளித்தான்.

Sunday, January 25, 2015

கண்ணன் கதைகள் (44) - கண்ணன் காட்டுத்தீயை உண்ணுதல் / பிருந்தாவனத்தின் பருவங்கள் / குழலோசை


கண்ணன் கதைகள் (44) - கண்ணன் காட்டுத்தீயை உண்ணுதல் / பிருந்தாவனத்தின் பருவங்கள் / குழலோசை, கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

பிரலம்பனை வதம் செய்தபின், ஆயர்களுடன் விளையாடிக்கொண்டு கண்ணன் மகிழ்ச்சியாய் இருந்தான். அப்போது, பசுக்கள் புல்லை மேய்ந்துகொண்டே 'ஐஷீகம்' என்னும் காட்டை அடைந்தன. வெப்பம் மிகுந்த காட்டில் கானல் நீரைத் தண்ணீர் என நினைத்த பசுக்கள் தாகத்தினால் தவித்தன. பசுக்களைத் தேடிக்கொண்டு வந்த சிறுவர்கள், வழிதப்பிய பசுக்களைப் பார்த்து, அவற்றை அழைத்துச் செல்ல அவைகளின் அருகே சென்றார்கள். அப்போது நாலாபுறமும் காட்டுத்தீ சூழ்ந்தது. அதனால் துன்பமடைந்த அவர்கள், காப்பாற்ற வேண்டும் என்று தீனமாய்க் கூக்குரலிட்டனர். காட்டுத்தீ வேகமாக சூழ்ந்தது. பசுக்களும், சிறுவர்களும் வெப்பம் தாங்க முடியாமல் கூச்சலிட்டனர். கண்ணன் அவர்களைக் காக்க எண்ணம் கொண்டான். கண்ணன் அவர்களிடம்," கவலைப்பட வேண்டாம், சிறிது நேரம் கண்ணை மூடிக்கொள்ளுங்கள்" என்று கூற அனைவரும் அப்படியே செய்தனர். அப்போது தனது யோகசக்தியால், கண்ணன் அத்தீயை உண்டான்.

பின்னர் அவர்களிடம் கண்ணைத் திறக்கச் சொன்னான். என்ன ஆச்சர்யம்! கண்ணைத் திறந்தபோது மீண்டும் 'பாண்டீரம்' என்னும் ஆலமரத்தடியில் இருந்தனர். 'தீ எங்கு சென்றது?' என்று அதிசயித்தனர். அங்கே காட்டுத் தீ இல்லை. அங்கு பூத்திருந்த பாதிரி முதலிய மலர்களால் மட்டும் வெய்யில் காலம் என்று அறியப்பட்டது. ஆனால் வெயிலின் தாபம் தெரியவில்லை. அந்த இடமே மிகவும் குளிர்ந்ததாக இருந்தது. கோபர்கள் அளவற்ற ஆனந்தத்துடன் கண்ணனைத் துதித்து, வீடு திரும்பினார்கள். இவ்வாறு பலவிதமான அதிசயங்களைச் செய்துகொண்டு, சிறுவர்களுடன் அக்காட்டில் திரிந்து விளையாடினான்.ஆயர் சிறுவர்கள் கோடைக்காலத்தை யமுனையாற்றங்கரையிலேயே கழித்தார்கள்.

கண்ணன் கதைகள் (44) - கண்ணன் காட்டுத்தீயை உண்ணுதல் / பிருந்தாவனத்தின் பருவங்கள் / குழலோசை, கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

கோடைக்காலம் முடிந்தது. கண்ணனின் நிறத்துக்கோப்பான மேகங்கள் வானில் நிறைந்தது. மின்னல்கள் பிரகாசித்தன. எல்லா மக்களுக்கும் மகிழ்ச்சியை அளிக்கும் மழைக்காலம் வந்தது. சிறுவர்கள் மழைக்காலத்தை கோவர்த்தன மலைக்குகைகளில் கழித்தார்கள். அழகிய மயில்களின் அகவல்கள் கேட்டன. மரமல்லிகையும், நீபபுஷ்பங்களும் பூச்சொரிந்தன. தெளிந்த நீருள்ள ஓடைகள், சரத்காலத்தை அறிவித்தன. பசுக்களை நல்ல பசுமையான புற்களை மேய்ந்து மகிழ்ந்தன.

காயாம்பூ போன்ற நிறமுள்ள கண்ணனின் திருமேனி அனைவரையும் ஆனந்திக்கச் செய்தது. அவனது அழகிய வடிவைக் கண்ட கோபிகைகள் மிகுந்த மோகத்தை அடைந்தார்கள். கண்ணன் மாடுகளை மேய்க்கச் சென்றபொழுது, வெகு தூரத்தில் இருந்து கேட்கும் தங்கள் குழலோசையைக் கேட்டு மகிழ்ந்தனர். கண்ணனுடைய விளையாட்டுக்களைப் பற்றிய கதைகளையே பேசி ஆனந்தித்தனர். புல்லாங்குழல் அனுபவித்த தங்கள் அதர அம்ருதத்தின் மிச்சத்தை ஒரு தடவையாவது அனுபவிப்போமா? என்று ஏங்கித் தவித்தனர். இவ்வாறு கோபிகைகளின் மனம் கலக்கமுற்றது. கண்ணனிடம் வைத்த அன்பால் அவர்கள் தினமும் செய்யும் காரியங்களையும் அறியாதவர்களாக ஆனார்கள்.

கானகம் சென்றவுடன், மரத்தடியில், கால்களை மாற்றி நின்று கண்ணன் புல்லாங்குழலை ஊதுவான். அந்தக் குழலின் இனிமையான ஓசை வானில் உள்ள அப்சரஸ் கூட்டங்களை மயங்கச் செய்தது. பசுக்கள், பறவைகள் முதலியன செயலற்று நின்றன. கற்களையும் உருகச் செய்தது. கோபிகைகள் தொலைவில் கேட்கும் வேணுநாதத்தில் மெய்மறந்தனர். மிருகங்களையும், பசுக்களையும், தங்கள் தொடர்பு ஏற்பட்ட கானகத்தையும் மிக்க பேறு பெற்றவை என்று கோபியர்கள் எண்ணினார்கள்.

Saturday, January 24, 2015

கண்ணன் கதைகள் (43) - பிரலம்பாசுர வதம்

கண்ணன் கதைகள் (43) - பிரலம்பாசுர வதம்,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

பலவித லீலைகளால் பிருந்தாவனத்திலுள்ள அனைவரையும் கண்ணன் மகிழ்வித்தான். ஒரு நாள் தன்னை மிக அழகாக அலங்கரித்துக்கொண்டு, பலராமனுடனும், இடைச்சிறுவர்களுடனும், பசுக்களுடனும் காட்டிற்குச் சென்றான். சிறுவர்கள் கையில் கோலுடன் நடக்க, பிருந்தாவனத்தின் அழகை ரசித்துக்கொண்டும், விளையாட்டாய்ப் பேசிக்கொண்டும் 'பாண்டீரகம்' என்னும் ஆலமரத்தடிக்குச் சென்றார்கள். அப்போது, கம்ஸனால் ஏவப்பட்ட 'பிரலம்பன்' என்ற அசுரன், கண்ணனைக் கொல்லும் நோக்கத்துடன், இடையன் வேடத்தில்அங்கே வந்தடைந்தான்.

அவன் எண்ணத்தை அறிந்த கண்ணன், அறியாதது போல் அவனுடன் நட்பு கொண்டான். அம்மரத்தடியில் இடையர்களுடன் விளையாட்டாக ஒருவருடன் ஒருவர் யுத்தம் செய்யத் தொடங்கினார்கள். கண்ணன் தலைமையில் ஒரு குழுவும், பலராமன் தலைமையில் ஒரு குழுவுமாக, இடையர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து கொண்டார்கள். கண்ணன், பிரலம்பாசுரனைத் தன்னுடைய குழுவிலேயே இருக்குமாறு செய்தான்.

அந்த விளையாட்டில், தோற்றவர்கள் வெற்றி பெற்றவர்களைத் தூக்க வேண்டும் என்பது நிபந்தனை. அதன்படி, ஸ்ரீதாமா என்ற கண்ணனின் நண்பனை, பக்தர்களின் அடிமையான கண்ணன் தூக்கினான். இவ்வாறு எல்லா இடையர்களும், தோற்றவர்கள் வெற்றி பெற்றவர்களைத் தூக்கினார்கள். அப்போது, தோற்ற பிரலம்பாசுரன், ஜயித்த பலராமனைத் தூக்கிக் கொண்டு, வெகுதூரம் சென்றான். வெகுதூரத்திற்கப்பால் செல்லும்போது, பலராமன் தன் முழு பலத்தாலும் அவனை அழுத்தினார். உடனே அவன் பயங்கரமான அசுர உருவத்தை எடுத்துக்கொண்டான். அதைக் கண்டு பலராமனும் சிறிது பயந்து, பின்னர் வெகுதூரத்தில் தெரியும் கண்ணனின் முகத்தைக் கண்டு பயத்தை விட்டார். அசுரனின் தலையைத் தன் முஷ்டியால் அடித்து நொறுக்கினார். அசுரனைக் கொன்றுவிட்டு வரும் பலராமனைக் கண்ணன் தழுவிக் கொண்டான். இருவர் மீதும் தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.