Showing posts with label குருவாயூரப்பன் கதைகள். Show all posts
Showing posts with label குருவாயூரப்பன் கதைகள். Show all posts

Sunday, August 20, 2017

கண்ணன் கதைகள் (76) - வானரதம்

கிருஷ்ண பக்தரான பூந்தானம் செய்யும் பாகவத உபன்யாசங்களை மக்கள் மிகவும் நேசித்தார்கள். கேரளாவில் உள்ள கொட்டியூர் என்னும் ஊரில் உள்ள சிவன் கோவில் வருடத்தில் சில நாட்களுக்கு மட்டுமே திறந்திருக்கும். பூந்தானம் கொட்டியூர் சென்று அங்குள்ள குளத்தில் நீராடி, சிவபெருமானை வழிபட்டு மிகுந்த சந்தோஷத்துடன் அங்கேயே சில நாட்கள் தங்கினார்.

தினசரி கோவிலில் சிவன் முன்னால் பாகவத ப்ரவசனம் செய்தார்.
நூற்றுக்கணக்கான மக்கள் அவருடைய இனிமையான பிரவசனத்தைக் கேட்டார்கள்.

ஸ்ரீமத் பாகவதத்தில் கிருஷ்ணர் விளையாட்டாக ருக்மிணியிடம், சிசுபாலன், ஜராசந்தன், சால்வன் போன்றோர் இருக்கும்போது என்னை ஏன் திருமணம் செய்தாய் என்று பரிஹாஸமாகப் பேச, ருக்மிணி மயங்கி விழ, பின்னர் கிருஷ்ணர் சமாதானம் செய்வதைக் கூறும் ஸர்க்கம்.

பூந்தானம் இந்தப் பகுதியை வாசித்து முடித்து, அடுத்த நாள் தொடர்வதற்கு வசதியாய் அந்த அத்தியாயத்தின் முடிவில் அடையாளம் வைத்தார். ஆச்சர்யப்படும் வகையில் அடுத்த நாள் அவர் வைத்த அடையாளம் அந்த ஸர்க்கத்தின் தொடக்கத்தில் இருந்தது. அதனால் மறுபடியும் அந்த ஸர்க்கத்தையே வாசித்தார். மீண்டும் சில நாட்களுக்கு இவ்வாறு தொடர்ந்து நடந்தது. கோவிலை மூட வேண்டிய நாள் வந்தது. பூந்தானம் பிரவசனத்தை முடித்து, வீட்டிற்குத் திரும்பும் வழியில் பாகவத புத்தகத்தைக் கோவிலிலேயே மறந்து வைத்துவிட்டு வந்ததை உணர்ந்தார். அதை எடுக்க மீண்டும் கோவிலுக்குச் சென்றார். ஆனால் நடை சாத்திவிட்டார்கள். யாருமே அருகில் இல்லை.

அவர் ப்ரவசனம் செய்த பாகவத அத்தியாயத்தின் அதே பகுதியை யாரோ கோவிலின் உள்ளிருந்து சொல்வதைக் கேட்க முடிந்தது. சாவி த்வாரத்தின் வழியே உள்ளே பார்த்தார். அங்கே அவர் கண்ட காட்சி!!! பரமசிவனே அதைப் படித்துக் கொண்டிருந்தார். பார்வதிதேவியும், பூதகணங்களும் அதைக் கேட்டுக் கொண்டிருந்தனர். பூந்தானம் அசையாமல் அதைக் கேட்டார். கடைசியில் சிவன் பார்வதியிடம், நான் படித்த இந்த பாகவத ஸர்க்கம் உனக்குப் பிடித்ததா? என்று கேட்க, பார்வதி, “ நன்றாக இருந்தது, ஆனால் பூந்தானம் சொன்னதைப்போல் இல்லை” என்று கூறினாள். சிவனும், உண்மைதான் நானும் பூந்தானம் சொல்வதையே கேட்க ஆசைப்படுகிறேன். அதனால்தான், தினமும் அவர் வைத்த அடையாளத்தை இந்த ஸர்க்கத்தின் தொடக்கத்தில் வைத்தேன் என்று கூறினார்.

வெளியே நின்றுகொண்டிருந்த பூந்தானம் இதைக் கேட்டவுடன் மெய்சிலிர்த்து, க்ருஷ்ணா, க்ருஷ்ணா என்று உரக்கக் கூறினார். அவர் மீண்டும் பார்த்தபோது, சிவபெருமானும் பார்வதியும் மறைந்து விட்டனர். பாகவதத்தை ஏனைய தெய்வங்களும் நேசிக்கிறார்கள் என்பதற்கு இந்த சம்பவமே சான்று.

இவ்வாறு பாகவத பாராயணத்திலும், கிருஷ்ண நாமத்திலும் பூந்தானத்தின் காலம் ஓடியது. பூந்தானத்திற்கு வயதாகியது. ஒரு நாள் கிருஷ்ணன் பூந்தானத்தை ‘என்னிடம் வா’ என்று அழைத்தார். மிகுந்த சந்தோஷமடைந்த பூந்தானம், வீட்டில் உள்ளவர்களிடம், நாளை விஷ்ணுதூதர்கள் நம் இல்லத்திற்கு வருகிறார்கள். வீட்டை நன்கு அலங்கரியுங்கள்; யாரெல்லாம் கிருஷ்ணனைக் காண வருகிறீர்கள் என்று கேட்டார். எப்போதும் கிருஷ்ணனை நினைத்து அவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று அவரது வீட்டாரும், அவ்வூர் மக்களும் நினைத்தார்கள். அடுத்த நாள் வானரதம் வருவதைக் கண்ட அவர், மனைவியிடம் சீக்கிரம் வா, நாம் செல்லலாம் என்று கூறினார். அவர் மனைவிக்கு சமையற்கட்டில் வேலை இருந்ததால் உள்ளே சென்றுவிட்டாள். அப்போது, அவர் வீட்டில் வேலைசெய்த ஒரு பெண், நான் வருகிறேன், என்னை அழைத்துச் செல்லுங்கள் என்று வேண்டினாள். பூந்தானமும் மகிழ்ச்சியுடன் ஒத்துக் கொண்டார். வேலை முடிந்து அவர் மனைவி வந்து பார்த்தபோது வேலைசெய்த அந்தப் பெண்மணி இறந்திருந்தாள். பூந்தானத்தைக் காணவில்லை; பூந்தானம் கிருஷ்ணனோடு ஐக்கியமாகிவிட்டார்.

ஓம் நமோ நாராயணாய!

Saturday, August 19, 2017

கண்ணன் கதைகள் (75) - வாழைக்கு மோக்ஷம்

குருவாயூரப்பன் மீது மிகுந்த பக்தி கொண்டவர், பூந்தானம் எனும் பக்தர். மலையாள மொழியில் குருவாயூரப்பனின் பெருமையைச் சொல்லும் ஞானப்பான என்னும் பாடல்களை எழுதியவர் பூந்தானம். சிறந்த கவிஞர். பாகவத பாராயணம், ப்ரவசனம் செய்து கொண்டே இருப்பார்.

சென்ற பதிவில் பூந்தானத்தின் சோகம் எப்படி ஸ்லோகமானது, ஞானப்பான எப்படி உருவானது என்பது பற்றிப் பார்த்தோம். அவர் வாழ்வில் நடந்த அதிசயமான மற்றொரு சம்பவம் பற்றி இப்போது பார்க்கலாம்.

ஒருநாள் பூந்தானம் உறங்கும்போது, அவருக்கு ஒரு கனவு வந்தது. கனவில், வானரதம் வருகிறது. விஷ்ணுதூதர்கள் இருவர் வந்து அவரை வைகுண்டத்திற்கு அழைக்கிறார்கள். அவர் அவர்களை வரவேற்று ரதத்தில் ஏறுகிறார். ரதம் பல உலகங்களைக் கடந்து, வைகுண்டத்தை அடைகிறது. அங்கு பக்தி யோகத்தால் பகவானை அடைந்த பலரைப் பார்க்கிறார். வைகுண்டத்தின் வாயிலை அடைந்ததும், இருவர் அவரை வரவேற்று வணங்குகின்றனர். வைகுண்டத்தில் இருக்கும் நீங்கள் பூஜிக்கப்பட வேண்டியவர்கள், என்னை வணங்குகிறீர்களே, நானல்லவோ உங்களை வணங்க வேண்டும் என்று அவர்களிடம் கேட்கிறார். அப்போது அவ்விருவரும், நாங்கள் முந்தைய ஜென்மத்தில் உங்கள் வீட்டில் இரண்டு வாழை மரங்களாக இருந்தோம். தினமும் உங்கள் பாகவத பாராயணம் கேட்டு, அப்புண்ணியத்தின் பலனாக, இந்த உன்னதமான நிலையை அடைந்துள்ளோம், அதனால் நீங்களே எங்கள் குரு, அதனால் வணங்கினோம் என்று கூறினார்கள். 


இதைக் கேட்டதும், பூந்தானத்தின் கனவு கலைந்தது. தூக்கத்திலிருந்து விழித்தார். வீட்டின் வெளியே சென்று பார்க்கும்போது அங்கே இருந்த இரண்டு வாழைமரங்கள் கீழே விழுந்திருந்தன. பகவன் நாமத்தை கேட்பதால் உண்டாகும் பலனைக் கண்கூடாகக் கண்ட பூந்தானம், முன்னிலும் தீவிரமாக, பகவானை வணங்கி அவன் நாமத்தைப் பாடிப் பரப்பினார்.

Friday, August 18, 2017

கண்ணன் கதைகள் (74) - ஞானப்பான

கேரளாவிலுள்ள மலப்புரத்தில் கீழாத்தூர் என்னும் ஊரில் வாழ்ந்தவர் பூந்தானம் நம்பூதிரி. பூந்தானம் என்பது அவர்கள் இல்லத்தின் பெயர். இல்லப்பெயரே அவரது பெயராக  நிலைத்துவிட்டது. சிறந்த பக்திமான். குருவாயூரப்பனிடம் மிகுந்த பக்தி கொண்டவர். மலையாளத்தில் பல ஸ்லோகங்கள் கண்ணன் மீது எழுதியுள்ளார். 

சரி, அதென்ன ஞானப்பான? மேலே படியுங்கள்.

பூந்தானத்திற்குத் தன் மடியில் கொஞ்சி விளையாட ஒரு பிள்ளை இல்லையே என்று குறை. குருவாயூரப்பனிடம் பிரார்த்திக்க, நீண்ட காலம் கழித்து அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவருக்குப் பரம சந்தோஷம். நாமகரணம் செய்தார். குழந்தைக்கு ஆறு மாதங்கள் ஆனபோது அன்னப்ராசனம் செய்ய முஹூர்த்தம் குறித்து, உறவினர்களை எல்லாம் அழைத்திருந்தார். அன்னப்ராசன தினத்தன்று, வீட்டில் உள்ள எல்லாரும் சீக்கிரமே எழுந்துவிட்டனர். அவர் மனைவி, குழந்தையை நீராட்டி, புதுத் துணிகள் உடுத்தி விட்டு, அலங்கரித்து, தாய்ப்பால் கொடுத்துவிட்டு, குழந்தையை ஒரு துணியில் சுற்றித் தூங்க வைத்தாள். குழந்தை உறங்க ஆரம்பித்ததும் உறவினர்களை வரவேற்கச் சென்றாள்.

கேரளத்தில், மிகவும் மடியாக இருக்கும் பெண்கள் கையில் தாழங்குடையையையும், மேலே வெள்ளைத்துணியையும் போர்த்தியிருப்பார்கள். வந்திருந்த பெண்களில் ஒருவர், தான் போர்த்தியிருந்த துணியை, குழந்தை இருப்பதை அறியாமல் அதன்மேல் போட்டாள். பின்னால் வந்த அனைவரும் மேலே மேலே துணிகளைப் போட்டார்கள். அன்னப்ராசனம் நடக்கவேண்டிய நேரம் நெருங்கவே, குழந்தையை எடுத்து வர உள்ளே சென்று பார்த்த போது, குழந்தை மூச்சு முட்டி இறந்துவிட்டிருந்தது. நீண்ட காலம் கழித்து பிறந்த குழந்தை இறந்ததைக் கண்ட  
பூந்தானத்தின் மனைவி  நிலைகுலைந்து போனாள். அழுது அரற்றினாள். கிருஷ்ணா ஏன் இப்படி? என்று கதறினார் பூந்தானம்.

அவரது சோகத்தைக் கண்ட குருவாயூரப்பன், "பூந்தானம் கவலைப் படாதே! இனி நானே உன் பிள்ளை, என்று கூறி அவர் மடியில் அமர்ந்து, உன் மடியில் படுத்துக் கொள்ளட்டுமா?" என்று கேட்டான். கண்ணனைத் தன் மடியில் கண்ட பூந்தானம், பரவசமடைந்து, "கண்ணனே என் மடியில் குழந்தையாகத் தவழும்போது, எனக்கென்று பிள்ளையும் வேண்டுமோ?" என்று பக்தியில் தன்னை மறந்தார். ‘ஞானப்பான’ என்ற தத்துவ முத்துக்கள் அவர் வாயிலிருந்து கவிதையாக வந்து விழுந்தது. சோகமே ஸ்லோகமானது. ‘ஞானப்பான’ எளிய மலையாள நடையில் உயர்ந்த தத்துவக் கருத்துகளைக் கொண்ட ஓர் காவியம். ஞானத்தைத் தரும் பானை அதாவது ஞானக் களஞ்சியம் என்றே சொல்லலாம். 
‘ஞானப்பானை' சாஸ்வதமற்ற வாழ்க்கையைப் பற்றிய ஓர் கவிதை.

மனிதப்பிறவியின் அர்த்தத்தை மிக அழகாய்ச் சொல்லும் இந்தக் கவிதையிலிருந்து சில துளிகள்:


"எத்ர ஜென்மம் மலத்தில் கழி
ஞ்தும் 
எத்ர ஜென்மம் ஜலத்தில் கழிஞ்தும் 
எத்ர ஜென்மங்ள் மண்ணில் கழிஞ்தும் 
எத்ர ஜென்மங்ள் மரங்ளாய் நின்னதும் 
எத்ர ஜென்மங்ள் மரிச்சு நடன்னதும் 
எத்ர ஜென்மங்ள் ம்ருகங்ள் பஷுக்களாய்"

மானிடப் பிறவி அரியது. முன்பு புழுவாய், பூச்சியாய், மிருகங்களாய், மரங்களாய், பல ஜன்மங்களை எடுத்து பின்னர் இப்போது கிடைத்திருக்கிறது இந்த மனிதப் பிறவி. குறுகிய காலம் மட்டுமே இருக்கும் இந்த வாழ்க்கையில் நாம் பகவானது திருநாமத்தை உச்சரிக்காமல் இருக்கின்றோமே? என்று ஆச்சர்யப்படுகிறார் பூந்தானம்.

"இன்னலேயோளம் எந்தென்னறிஞ்ஞிலா
இனி நாளேயும் எந்தென்னறிஞ்ஞிலா
இன்னீக்கண்ட தடிக்கு வினாசவும்
இன்ன நேரம் என்னேதுமறிஞ்ஞிலா"

நேற்று வரை என்ன நிகழ்ந்தது  என்று  அறியவில்லை, இனி நாளை என்ன நடக்கும் என்றும் தெரியவில்லை, இன்றிருக்கும் இந்த சரீரத்திற்கு அழிவு எந்த நேரத்தில் என்றும் அறிவதில்லை.

"நம்மெயொக்கேயும் பந்திச்ச ஸாதனம்
கர்மம் என்னறியேண்டது முன்பினால்
முன்னில் இக்கண்ட விஸ்வம் அசேஷவும்
ஒன்னாயுள்ளொரு ஜ்யோதிஸ்வரூபமாய்"

நம் அனைவரையும் இந்த உலகத்தில் கட்டி இருப்பது கர்மமே என்பதை அறிய வேண்டும். ப்ரளயத்தில் நாம் காணும் இந்த உலகமெல்லாம் ஒன்றேயான ஒரே ஜோதிஸ்வரூபத்தில் ஒடுங்குகின்றது.

க்ருஷ்ண க்ருஷ்ண முகுந்தா ஜனார்த்தனா
க்ருஷ்ண கோவிந்த நாராயணா ஹரே
அச்
யுதானந்த கோவிந்த மாதவா
சச்சிதானந்த நாராயணா ஹரே!!!

Wednesday, August 16, 2017

கண்ணன் கதைகள் (72) - தெய்வ குற்றம்

குருவாயூரப்பனின் மகிமைகளை இக்கலியிலும் கண்கூடாகக் கண்டவர் பலர் உண்டு. சில ஆண்டுகளுக்கு முன் பக்தர் ஒருவருக்கு நிகழ்ந்த சம்பவம் இது.

பக்தர் ஒருவரின் மகனுக்குத் திடீரென்று புத்தி ஸ்வாதீனமில்லாமல் போய்விட்டது. ஒருவருடனும் பேசாமல், கேட்ட கேள்விகளுக்கும் பதில் சொல்லாமல் பித்துப் பிடித்தவன்போல் ஆகிவிட்டான். பல சிகிச்சைகள் செய்தும் சரியாகவில்லை. மிகுந்த கவலையடைந்த பக்தர், பகவானே கதி என்று, தனது மகனை அழைத்துக் கொண்டு குருவாயூர் சென்று, பல நாட்கள் சன்னதியிலேயே தங்கி, கைங்கர்யங்களும் செய்து வந்தார். தன் மகனை நினைத்து மிகுந்த கவலையுடன் இருந்தார்.

ஒரு நாள், குருவாயூரப்பன் அவரது கனவில் தோன்றி, 'உன் மகன் முன் ஜென்மத்தில் ஒரு குரங்கைக் கொன்று, ராமருக்கு அபசாரம் செய்ததால், தெய்வ குற்றம் உண்டானதால், இவ்வாறு உள்ளான். நீ அவனை திருப்பரையாறு அழைத்துச் சென்று, ராமரை சேவித்தால் அவன் குணமடைவான்' என்று கூறினார். உடனே, அவர் திருப்பரையாறு சென்றார். அங்கேயே தங்கி, தினமும் ராமரை சேவித்து வந்தார்.

இவ்வாறிருக்கையில், ஒரு நாள், அவர் ராமர் சன்னதியில் இருக்கும் போது, ஸ்ரீ ஹனுமார், கையில் சந்தனம், குங்குமம், துளசியுடன் அவர் மகனின் கண்ணுக்கு மட்டும் தெரியும்படியாகத் தோன்றி, 'இதை வாங்கிக் கொள்' என்று கூறினார். அந்த பக்தரின் கண்களுக்குத் தெரியவில்லை. அவர் மகன் அவரிடம், 'அப்பா, ஒரு குரங்கு சந்தனம், குங்குமம் கொடுக்கிறது, வாங்கிக் கொள்ளட்டுமா?' என்று கேட்டான். என்றுமில்லாமல் மகன் நன்றாகப் பேசுகிறானே என்று மகிழ்ந்த அவர், வாங்கிக் கொள் என்று கூறினார். பக்தரின் கண்களுக்குத் தெரியவில்லையே தவிர, மகனின் கையில் இப்போது பிரசாதங்கள் இருப்பது தெரிந்தது. பகவானின் அனுக்ரஹத்தையும், மகிமையையும் அறிந்த பக்தர் மனம் மகிழ்ந்து அப்பனுக்கு நன்றி கூறினார். அதுமுதல் அவர் மகன் நன்றாகப் பேச ஆரம்பித்து, சித்தமும் தெளிந்தது.

திருப்பரையாறு கோவிலில் அதிர்வெடி வழிபாடு ப்ரசித்தம். பிரச்சனைகள் தீர, அதிர்வெடி வழிபாடு செய்து மக்கள் தமது பிரச்சனைகள் தீரப் பெறுகிறார்கள். கேரளக் கோவில்களில் வெடி வழிபாடு நடைமுறை உண்டு.

இந்த வலைத்தளத்தில் அடியேன் பதிவேற்றியிருக்கும் அனேக குருவாயூரப்பன் கதைகள் என் பாட்டியும், அவரது சிநேகிதியுமான மற்றொருவரும் கூறக் கேட்டவைகளே.

Tuesday, August 15, 2017

கண்ணன் கதைகள் (71) - மாளாக் காதல்

சுமார் 42 வருடங்களுக்கு முன் எங்கள் குடும்பத்தில் நடந்த உண்மைச் சம்பவம்.

கோவைக்கு யார் வந்தாலும், குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு அழைத்துச் செல்வது தாத்தாவுக்கு ரொம்பப் பிடிக்கும். அடிக்கடி பல ஊர்களிலிருக்கும் வரும் உறவினர்களை மலம்புழா, குருவாயூர், ஆழியார் என்று கூட்டிக் கொண்டு போவார். செலவைப் பற்றி யோசனை பண்ண மாட்டார். வீட்டிலேயே கார் இருந்ததால் ரொம்பவே சௌகர்யமாக அனைவரையும் அழைத்துச் செல்லலாம். தாத்தாவுக்குப் பரந்த மனசு. இப்போது போல 5 பேர் கொள்ளும் காரில், ஐந்தாவதாக ஆள் வந்தாலே கஷ்டம் என்று நினைப்பவர் அல்ல. அம்பாசடர் கார். திடமான கார். காரிலும், தாத்தா மனசிலும் இடம் நிறைய உண்டு. புளிமூட்டை போல் ஆட்களை ஏற்றினால்தான் அவருக்குத் திருப்தியாக இருக்கும். அம்பாசடர் காரும் ஈடு கொடுக்கும்.

அதுபோல ஒரு சமயம், சுமார் ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த உறவினர்கள் கோவைக்கு ஒரு விடுமுறைக்கு வந்திருந்தார்கள். காரிலும் டாக்ஸியிலுமாக குருவாயூர் சென்றோம். தரிசனம் செய்தோம். காலை முடி இறக்கும் வேண்டுதல் இருந்ததால், முடி இறக்கி, மறுபடி தரிசனம் முடித்து, காலை 9 மணி அளவில் குருவாயூரிலிருந்து கிளம்பி மதிய உணவிற்குக் கோவை சென்று விடுவதாகத் திட்டம். ஆண்கள் பஸ்சில் பாலக்காடு சென்று விடுவதாகவும், பெண்களும் குழந்தைகளும் எங்கள் காரில் சென்று விடலாம் என்றும், பாலக்காடு அடைந்ததும் எல்லாரும் சந்தித்துவிட்டு கோவை புறப்படலாம் என்றும் முடிவு செய்தார்கள். அதன்படி ஆண்கள் பஸ்சில் செல்ல, காரில் பெண்களும், சிறியவர்களும்.

காரில் டிரைவரைத் தவிர்த்து முன் பக்கம் 2 பேர் மடியில் ஒரு குழந்தையுடன். பின்னால், பெரியவர்கள் 4 பேர், மடியில் 10-12 வயது குழந்தைகள். டிக்கியில் சாமான்கள். பயணம் ஆரம்பித்தது. வடக்கஞ்சேரி வழியைத் தேர்ந்தெடுத்தார் டிரைவர்.

நீண்டு வானளாவிய மரங்களை ரசித்துக்கொண்டு செல்லும் வயதில் நாங்கள் இல்லை. ஏதோ பாடல்கள், அரட்டைகள் என்று இருந்தது. பாடிக்கொண்டு செல்வதால் மனமும் உடலும் உற்சாகமாக இருந்திருக்கலாம்.

இருபுறமும் படுபாதாளம். உயரமான பகுதி, குறுகலான பாதை. எதிரேயோ, பின்னாலோ வண்டி வந்தால் பொறுமையாக ஓட்ட வேண்டும். மயிரிழை நகர்ந்தாலும் அதோகதிதான். டிரைவர் மிக நேர்த்தியாக ஓட்டிக் கொண்டிருந்தாலும், பெரியவர்கள் நிதானமாய் ஓட்டுங்கள் என்று கூறிக் கொண்டு வந்தனர். சரியான மழை. ரோடு வழுக்குப்பாறை போல இருந்ததால், மிக மெதுவாகவே கார் ஓட்டவேண்டும் என்பதால் டிரைவர் மிகக் கவனமாகவே ஓட்டினார். மழை மிகப் பலமாக இருந்தது. வானிலையும் பொழுதுக்குப் பொழுது மாறியது. கருமேகங்கள் கூடும். திடீரென்று சோவென்று மழை கொட்டும், சில சமயம் தூறலாக இருக்கும். இப்படியே அந்த மலைப்பாதையில் மெதுவான பயணமாக இருந்தது. மலைப்பாதை வளைந்து வளைந்து சென்றது. வளைவுகளில் கார் திரும்பும்போது சற்று பயமாக இருக்கும். இருப்பினும் நாங்கள் குழந்தைகளாக இருந்ததாலோ என்னவோ, சந்தோஷமாகவும், ஆசையாகவும், உற்சாகமாகவும் இருந்தது அந்தப் பயணம். மலைப் பகுதிகளில் பசுமை வழிந்தோடியது. எனக்கு இயற்கைக் காட்சிகளை ரசிக்கும் வயதில்லை. சில சிறிய ஊர் வரும் சமயங்களில் வயல்களும் அங்கங்கே வீடுகளும் தெரிந்தது.

இப்போது பள்ளத்தாக்கு ஏதும் இல்லை. சமவெளிப்பகுதி. சிறிது நேரத்தில் பாலக்காடு சென்றுவிடலாம், அங்கே பஸ் ஸ்டாண்டில் உள்ள குடும்பத்து ஆண்களைப் பார்த்த பிறகு, மீண்டும் கோவை செல்லலாம் எனப் பெரியவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். கார்க் கண்ணாடிகளைத் திறந்து வைத்தால், மழைச்சாரல் உடல் மீது படும் என்பதால், அவ்வப்போது ஜன்னலை மூடி, பிறகு திறந்து என்றவாறு பயணம். டிரைவரின் ஜன்னல் மட்டுமே பாதி திறந்திருந்தது. சற்றுமுன் வரை மனிதர்களே இல்லாத அந்தப் பகுதியில், சிலர் சற்று தூரத்தில் இருந்த வயலில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒன்றிரண்டு குடிசைகள்.

அதிக வளைவு இல்லாமல் பாதை நேராகச் சென்ற ஒரு இடத்துக்கு வந்தபோது என்ன ஆயிற்றோ நினைவில்லை, டிரைவர் சற்றே காரை லாகவமாய்த் திருப்ப, கண் இமைக்கும் நேரத்தில் எங்கள் கார் ரோடின் ஓரமாக இருந்த மைல்கல்லில் நேருக்கு நேர் மோதியது. சாலை சற்று சரிவாக இருந்ததால், கார் இரண்டு முறை சுழன்று தலைகீழாக விழுந்தது. பெரியவர்கள் அனைவரும் ‘குருவாயூரப்பா காப்பாத்து’ என்று கூக்குரல். குழந்தைகளும் பெரியவர்களும் காரின் உள்ளே. டிரைவர் எப்படியோ சுதாரித்து, அரைகுறையாய்த் திறந்திருந்த ஜன்னல் வழியே வெளியே வந்து, திறந்திருந்த ஜன்னலின் வழியே கையைவிட்டு, இன்னுமோர் ஜன்னலைத் திறந்து, வெறி பிடித்தவர் போல் உள்ளேயிருந்து எல்லாரையும் இழுத்து வெளியே போட்டார். இரண்டு டயர்கள் கழண்டு எங்கோ விழுந்திருந்தது. அதற்குள் வயலில் வேலை செய்தவர்களும் அங்கு ஓடி வந்து திறந்திருந்த ஜன்னலின் வழியே கையைவிட்டு, மற்ற ஜன்னல்களைத் திறந்து, எல்லாரையும் இழுத்து வெளியே போட்டார்கள். இவையனைத்தும் மிக வேகமாக நடந்தன. முடி இறக்கிய குழந்தையை வெளியில் இழுத்த அதே நொடியில், மயிரிழையில் ஏதோ ஒரு கனமான இரும்புப் பொருள் உள்ளே விழுந்தது. டிரைவரும் மயங்கி விட்டார். குடும்பத்தினர் சிலர் மயங்கி விட்டனர். அங்கிருந்தவர்கள் உடனே சற்று தூரத்தில் இருந்த குடிசைக்கு எங்களை அழைத்துச் சென்றனர். அனைவரையும் ஆசுவாசப்படுத்தி, டீ போட்டுக்கொடுத்தனர். அனைவரும் உயிரோடு இருக்கிறார்கள் என்பது தெரிந்ததும் நிம்மதிப் பெருமூச்சு விட்டு, அப்பனுக்கு நன்றி சொன்னோம்.

அடுத்து, பாலக்காடு சென்ற ஆண்களுக்கோ, வீட்டிற்கோ தகவல் சொல்ல வேண்டும். வீட்டில் தொலைபேசி உண்டு; ஆனால், அருகில் தொலைபேசி வசதி இல்லை. அக்காலத்தில் செல்போன் கிடையாது. எப்போதோ ஓரிரு வண்டிகள் வரும் அந்த ரோடில் யாரிடம் கேட்டு அனைவரும் ஊர் திரும்புவது? சிலருக்கு எலும்பு முறிவு, சிலருக்கு அடி, சிராய்ப்பு வேறு. முதலில் பாலக்காட்டிற்கு சென்று, ஆண்களிடம் தகவல் சொல்லி, பின்னர் ஏதாவது மருத்துவமனையில் வைத்தியம் வேறு பார்க்க வேண்டும். என்ன செய்வது என்று புரியவில்லை.

இதற்கிடையில் மற்றொரு அதிசயம். விபத்து நடந்த இடத்தைக் கடந்த ஒரு சிறிய வேன் சற்று தூரம் சென்றுவிட்டு மீண்டும் திரும்பி வந்தது. எங்கள் காரின் நம்பரைப் பார்த்த அவர்கள், ‘இது ஐயர்வீட்டுக் காராச்சே’ என்று தமக்குள் பேசிக்கொண்டு அங்கிருந்த ஒருவரிடம் விசாரிக்க, அவர் அருகில் குடிசையில் அனைவரும் அமர்ந்திருக்கிறார்கள் என்று சொல்ல, அங்கே வந்தார்கள். அது எங்கள் தாத்தா வேலை செய்த கம்பெனியின் வேன். அந்த வேன் அங்கு வந்தது குருவாயூரப்பனின் திருவருள்தான். அவர்கள் மூலமாக பாலக்காட்டில் உள்ளவர்களுக்கும், வீட்டில் உள்ளவர்களுக்கும் தகவல் சொல்லச் சொன்னோம். டிரைவர் அவர்களுடன் சென்று அருகில் இருந்த சிறிய ஊரில் இருந்து ஒரு வாடகைக் கார் எடுத்து வந்தார். அனைவரும் பாலக்காடு சென்று, மற்றொரு வாடகைக் கார் எடுத்துக் கொண்டு குடும்பத்து ஆண்களுடன் கோவைக்குப் பயணமானோம். கோவையில், நேராக ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்று, மருத்துவம் பார்த்துவிட்டு, எலும்பு முறிந்தவர்களுக்குக் கட்டும் போட்டு, பின்னர் வீடு திரும்பினோம்.

யோசித்துப்பார்த்தால், யாருமற்ற வனாந்திரத்தில் எங்கேயிருந்து சில வீடுகளும், மக்களும் எங்களுக்கு உதவினார்கள்? இவ்வளவு பெரிய விபத்தில் இருந்து மொத்தக் குடும்பத்தையும் காப்பாற்றிய அந்த மகாசக்தி எது? குருவாயூரப்பன்தான். சத்தியம்! சத்தியம்! புதிதாய்ப் பிறந்தது போல உணர்ந்தோம். மொத்தக் குடும்பத்தையும் குருவாயூரப்பன் காப்பாற்றினான். இந்தக் கதை எனது சொந்த அனுபவம். இந்த சம்பவத்திற்குப் பின்தான் குருவாயூரப்பன் எனது இஷ்டதெய்வம் ஆனான்.

“குருவாயூரப்பா சரணம், எண்டே குருவாயூரப்பா, எண்டே குருவாயூரப்பா, பொன்னு குருவாயூரப்பா சரணம்” என அடியேன் ஸ்மரிக்கும்படி செய்ததும் அவனே! குருவாயூரப்பன் பெருமைகள் கணக்கில் அடங்காது. அவன் பெருமைகளை என்னுடைய ஆசையினாலும், என் இஷ்ட தெய்வம் என்பதாலும், எளிய நடையில் எழுதுகிறேனே ஒழிய, அந்த யோக்கியதை எனக்கு இல்லை என்றே சொல்ல வேண்டும்.

புன்சிரிப்பு தவழ என் பூஜையறையிலும், என் மனதிலும் நிற்கும் மாமணிவண்ணனே இன்றளவும் என் மருத்துவன். வரப்ரசாதி. இந்த மருத்துவன்பால் அடியேனுக்கு என்றுமே மாளாத காதல்தான்! இது போன்று குருவாயூரப்பன் நடத்திக் காட்டிய அற்புதங்கள் உங்கள் வாழ்விலும் நடந்திருந்தால் setlur.shanu@gmail.com என்ற மின்னஞ்சலுக்குத் தட்டச்சு செய்து அனுப்பி வைத்தால் பதிவேற்றுகிறேன்.

“குருவாயூரப்பா சரணம், எண்டே குருவாயூரப்பா, எண்டே குருவாயூரப்பா, பொன்னு குருவாயூரப்பா சரணம்”

Monday, August 14, 2017

கண்ணன் கதைகள் (70) - மன நிம்மதி

சென்ற பதிவில் நாராயண பட்டத்ரி பற்றியும் அவர் எப்படி நாராயணீயம் எழுதினார் என்பது பற்றியும் பார்த்தோம்.

நாராயண பட்டத்ரியின் வாழ்வில் நிகழ்ந்த மற்றொரு சம்பவம் இது.

நாராயணீயத்தை இயற்றிய நாராயண பட்டத்ரிக்கு பாகவதத்தின் சாரமாக
நாராயணீயத்தைத் தான் இயற்றிவிட்டதாக சிறு கர்வம் ஏற்பட்டது.
மன நிம்மதியை இழந்தார். பகவான் அவரது கனவில் தோன்றி முக்திபுரியில் (மலையாளத்தில் முக்கோலக்கல்) இருக்கும் பவானியின் கோவிலுக்குச் செல் என்று கூற, முக்திபுரியில் உள்ள முக்கோல தேவியின் கோவிலுக்குச் சென்றார். அப்போது அவர் முக்கோலக தேவியை வழிபட்டு, தேவியின்மீது ஸ்லோகத்தை எழுதத் தொடங்கினார். எழுபது ஸ்லோகங்கள் எழுதி முடித்துவிட்ட நிலையிலும் அவரால் தேவியின் திருப்பாதங்களைப் பற்றி மட்டுமே சொல்ல முடிந்திருந்தது. அதற்குமேல் எழுத வரவில்லை. அப்போது, தாம் இயற்றியதெல்லாம் பகவானின் திருவருளால்தான் என்பதை அவர் உணர்ந்தார். மிகுந்த மன நிம்மதியும் அடைந்தார்.

பின்னர், தேவியைத் துதித்து, தம் இறுதிக் காலம் வரை அங்கேயே கழித்தார். 'ஸ்ரீபாத ஸப்ததி' என்ற தேவியின் புகழ் பாடும் அந்த ஸ்லோகம் தான் அவர் கடைசியாக எழுதியது. ஒரு நாள் தேவியைத் தரிசனம் செய்துவிட்டுத் திரும்பியதும் நிம்மதியாக பகவானின்  திருவடியை  அடைந்தார்.

நாமும் அப்பனின் பாதாரவிந்தங்களை வணங்கி அவள் அருளைப் பெற்று மகிழ்வோமாக!

Sunday, August 13, 2017

கண்ணன் கதைகள் (69) - குருதக்ஷிணை

மேப்பத்தூர் நாராயண பட்டத்திரி  ஸ்ரீமன் நாராயணீயத்தை இயற்றியவர்.

கேரளாவில் 
மேப்பத்தூர் என்ற ஊரில்,  ப்ராம்மண குடும்பத்தில் பிறந்த அவர், வேதம், தர்க்கம், மீமாம்சை என்று அனைத்தையும் கற்றார். அவருக்கு ஒரு அண்ணனும் ஒரு தம்பியும் இருந்தனர். அக்காலத்தில் நம்பூதிரி குடும்பத்தில் மூத்தவர் நம்பூதிரியை மட்டுமே திருமணம் செய்ய வேண்டும். மற்றவர் எந்த சமூகத்திலும் திருமணம் செய்யலாம் என்ற ஒரு கோட்பாடு இருந்தது.

நாராயண 
பட்டத்திரிக்கு பிஷாரடி குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் சம்பந்தம் ஏற்பட்டது. பிறகு அந்தப் பெண்மணியைத் திருமணம் செய்து மணவாழ்க்கையே இன்பம்  என்று  அனுபவித்து வந்தார்.

அந்தப் பெண்ணின் குடும்பத்தில் அச்சுத பிஷாரடி (அச்சுத பிஷாரடியின் தமக்கை மகள் 
பட்டத்திரியின் மனைவி) என்ற ஒரு பண்டிதர் இருந்தார். சிறந்த பக்திமான். ஒரு நாள் அவர் தியானத்தில் இருந்தார். அப்போது வீட்டின் உள்ளிருந்து அவரைக் கடந்து சென்ற பட்டத்திரியைப் பார்த்து, உயர்ந்த குடும்பத்தில் பிறந்து, அழிந்துபோகும் உணர்ச்சிகளுக்குப் பலியாகி, உன் வாழ்க்கையை ஏன் வீணாக்கிக் கொள்கிறாய் என்று கேட்டார். இந்த வார்த்தை பட்டத்திரியின் வாழ்க்கையை மாற்றியது. பிஷாரடியிடமே சிஷ்யனாக சேர்ந்து,  சம்ஸ்க்ருதமும் கற்று பண்டிதரானார். வாலிபத்தில் தவறு செய்த அவர் சிறந்த பக்தரானார். பல நூல்கள் இயற்றினார்.

அந்த சமயம், அவரது குருவான அச்சுத பிஷாரடிக்கு முடக்குவாதம் ஏற்பட்டது. அது கண்டு வருந்திய 
பட்டத்திரி, தன் குருவுக்குத் தர வேண்டிய குருதக்ஷிணைக்குப் பதிலாக, அவருடைய நோயை ஆவாஹனம் செய்து ஏற்றுக் கொண்டார். குருவின் நோய் நீங்கியது. பட்டத்திரிக்கு முடக்குவாதம் ஏற்பட்டது. அதனால் மிகவும் அவதிப்பட்டார். பல சிகிச்சைகள் செய்தும் பலனில்லை. அதைக் கண்ட துஞ்சத்து எழுத்தச்சன் என்பவர், நோய் நீங்க குருவாயூருக்குச் சென்று (மீன் தொட்டுக் கூட்டுக) அதாவது, “நாவிலே மச்சம் தொட்டு உண்” என்று பணித்தார். அறிவற்றவர்களாய் இருந்தால், மீனை உண்ணச் சொல்கிறார் என்று நினைத்திருப்பார்கள். ஆனால், பட்டத்ரிக்கு மச்சாவதாரம் தொடங்கி பகவானை வர்ணிக்கச் சொல்கிறார் என்று புரிந்தது.
பட்டத்திரியும் உடனேயே, குருவாயூர் சென்று அங்குள்ள புண்யதீர்த்தத்தில் ஸ்நானம் செய்து, சன்னிதியிலேயே அமர்ந்து, அவன் பெருமையைக் காவ்யமாக எழுத ஆரம்பித்தார். அந்தக் காவ்யமே “ஸ்ரீ நாராயணீயம்”.

ஸ்ரீமன் நாராயணீயத்தில் மொத்தம் 1034 ஸ்லோகங்கள் உள்ளன. 100 தசகங்கள் கொண்டது . ஒவ்வொரு தசகத்திலும் 10 ஸ்லோகங்கள் உள்ளன. சில தசகங்களில் 10 ஸ்லோகங்களுக்கு மேல் உள்ளன. ஸ்ரீமன் நாராயணீயத்தில் ஒவ்வொரு தசகமும் தமது நோயை குணமாக்கும்படி வேண்டுவது போல் அமைந்துள்ளது. படிப்பவர்களுக்கும் தங்கள் நோயை குணமாக்கும்கும்படி வேண்டுவதுபோல் அமைந்திருப்பது விசேஷம்.
பட்டத்திரியின் வாழ்வில் நிகழ்ந்த வேறொரு சம்பவத்தை அடுத்த பதிவில் பார்ப்போம்.

நாராயண! நாராயண !

Friday, August 11, 2017

கண்ணன் கதைகள் (68) - வைர அட்டிகை

கோவையில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குத் திடீரென்று மிகுந்த கைவலி ஏற்பட்டது. பல டாக்டர்களிடம் காண்பித்தும் பலனில்லை. அவர் அவஸ்தைப்படுவதைக் கண்ட அவர் மனைவியும் மிகுந்த கவலையுற்றாள்.

ஒரு நாள், அவர்கள் இருவரும் சேங்காலிபுரம் ஸ்ரீ அனந்தராம தீட்சிதர் நிகழ்த்திய 'நாராயணீய உபன்யாசம்' கேட்கச் சென்றிருந்தார்கள். ஸ்ரீ குருவாயூரப்பனின் பெருமைகளைக் கேட்ட அவர்கள், வீடு திரும்பியதும் அவர் மனைவி அவரிடம், கை வலி நீங்கினால் தன்னுடைய கழுத்தில் இருக்கும் வைர அட்டிகையை காணிக்கையாகச் செலுத்துவதாக வேண்டிக் கொள்ளச் சொல்ல, அவரும் அவ்வாறே வேண்டிக் கொண்டார்.  சிறிது காலத்திலேயே, அவர் கைவலி படிப்படியாகக் குறைந்தது. வேண்டிக்கொண்டபடி குருவாயூர் சென்று அட்டிகையைக் காணிக்கை செலுத்த முடிவு செய்தார்கள்.

அந்த அட்டிகை அவரது தாத்தா கொடுத்தது. இதற்கிடையில், செல்வந்தர் வைர வியாபாரிகள் சிலரிடம் அதை மதிப்பீடு செய்யச் சொன்னார். அவர்களும் மதிப்பீடு செய்து விலையைச் சொன்னார்கள். குருவாயூர் சென்றார்கள். அங்கு சென்றதும், அவருக்கு தாத்தா அளித்ததைக் காணிக்கையாக்குவதற்கு மனம் வரவில்லை. அதனால் அதற்குப் பதிலாக அதன் மதிப்பைவிட அதிகமான பணத்தை உண்டியலில் சமர்ப்பித்தார்கள். பிறகு ஊர் திரும்பினார்கள்.

ஆனால், மீண்டும் அவருக்குக் கைவலி தொடங்கியது. குடும்ப ஜோசியர் தெய்வ குற்றத்தால் அவ்வாறு வலிப்பதாகச் சொன்னார். வேறு வழியில்லாமல் மீண்டும் குருவாயூர் சென்று அட்டிகையை உண்டியலில் சமர்ப்பித்துவிட்டு  வந்தனர். கைவலியும் வேதனையும் நிரந்தரமாக நீங்கியது. 

பகவான் கீதையில் கூறியபடி, பக்தியுடன் கொடுத்தால் தண்ணீரையும் ஏற்றுக் கொள்வார், பக்தியில்லாமல் கொடுத்தால் எவ்வளவு மதிப்பானதாக இருந்தாலும் ஏற்க மாட்டார் என்பதற்கு இந்த உண்மைச் சம்பவமே சான்று.

கண்ணன் கதைகள் (67) - உறியமதம்

முன்னொரு சமயம் சிறந்த பக்தரான நம்பூதிரி ஒருவர் வாதநோயால் பீடிக்கப்பட்டார். அவருக்கு நோய் மிகவும் தீவிரமாகி, கை கால்களை நீட்ட முடியாமல், உடல் குறுகிவிட்டது. அவரால் நடக்க முடியாததால், அவரை உறியில் வைத்துத் தூக்கிச் செல்வார்கள். அதனாலேயே அவரை 'உறியமதம்' என்று அவ்வூர் மக்கள் அழைக்க ஆரம்பித்தார்கள். மருத்துவங்கள் பலனளிக்கவில்லை. பெருந்தொகையைக் காணிக்கையாகச் செலுத்துவதாகவும், தான் பூரண குணமடைய வேண்டும் என்றும் குருவாயூரப்பனுக்கு வேண்டிக்கொண்டார். குருவாயூர் செல்ல பயணப்பட்டார். உறியில் வைத்து அவரை அழைத்துச் சென்றனர். 

அதே சமயம், வறுமையால் வாடிய ஒருவன், குருவாயூர் சென்று வேண்டினால், வறுமை தீர்ந்து சௌகரியமாய் வாழலாம் என்ற நம்பிக்கையில் குருவாயூர் வந்தான்.

உறியமதம் ஸ்வாமி, தீர்த்தத்தில் நீராடி, நித்ய அனுஷ்டானத்தை முடிக்க ருத்ர தீர்த்தம் சென்றார். தன்னுடைய பணப்பையைப் குளத்துப் படிக்கட்டில் வைத்தார். உறியைக் குளத்தில் இறக்கி வைக்கச் சொன்னார். ஏற்கனவே அங்கிருந்த, பணமில்லாமல் வாடிக் கொண்டிருந்த பக்தன், அந்தப் பணப்பையை எடுக்கக் கையை வைத்தான். அதைக் கண்ட உறியமதம், யாருமே எதிர்பார்க்கா வண்ணம், உறியிலிருந்து குதித்து, அவனைப் பிடிக்க ஓடினார். ஆனால் அவன் ஓடிவிட்டான். தான் குணமடைந்ததையே உணராத 

உறியமதம், காணிக்கை அளிக்க முடியவில்லையே என்று மனம் வருந்தினார். அப்போது "கவலைப்படாதே! உங்கள் இருவரின் ப்ரார்த்தனையும் நிறைவேறிவிட்டது" என்று அசரீரி கேட்டது. மகிழ்ந்த அவர் பெருமானை சேவித்து ஊர் திரும்பினார்.

அவரது நோயும் பூரணமாக நீங்கியது.

இவ்வாறு கலியுகத்தில் அப்பனின் லீலைகள் அனைவரையும் வியக்க வைக்கும் அற்புதமாகும்.

Sunday, August 6, 2017

கண்ணன் கதைகள் (66) - வாகைச்சார்த்து / வாகச்சார்த்து

சில ஆண்டுகளுக்கு முன் குருவாயூர் சென்ற பொழுது அதிகாலை நிர்மால்ய தரிசனம் செய்ய சன்னதிக்குச் சென்றோம். கூட்டம் அதிகமாக இருந்ததால், நாங்கள் சென்ற சமயம் நிர்மால்யம் முடிந்துவிட்டது, ஆனால் வாகைச்சார்த்து சேவிக்கும் பாக்கியம் பெற்றோம்.

வாகைச்சார்த்து என்றால் என்ன? குருவாயூரில் தரிசனம் தரும் குழந்தைக் கண்ணனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தமும், தைலமும், தோல் நோய்களையும், அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் என்பது நம்பிக்கை. பகவானின் திருமேனியில் வாகை மரத்துப் பட்டையின் பொடியைக் கொண்டு எண்ணெய் போகத் தேய்க்கிறார்கள். இதைத்தான் ‘வாகைச்சார்த்து’ என்று கூறுகிறார்கள். இந்த வாகைச்சார்த்து வழிபாடு வழக்கம் எப்படி வந்தது?

இது பற்றி ஒரு கதை கூறப்படுகிறது. ஒரு காலத்தில், ஒரு கிராமத்தில், காஷு என்ற சிறுவன் இருந்தான். பத்து, பனிரெண்டு வயதிருக்கும். தாய் தந்தை யாரும் இல்லை. மிகுந்த வறுமை. அந்த கிராமத்தில் சிறு சிறு வேலைகள் செய்து அதனால் கிடைக்கும் பணத்தை வைத்து தனக்கு வேண்டிய உணவை வாங்கி உண்பான். ஒரு சமயம் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் உணவில்லாமல் இருக்க நேரிட்டது. பசியின் கொடுமையைத் தாங்க முடியாத அந்த சிறுவன், அருகிலுள்ள நதிக்குச் சென்று அதில் மூழ்கி இறந்துவிட நினைத்தான். அப்போது நாரதர் அவன் முன் தோன்றி ஒரு பாத்திரத்தைக் கொடுத்து, அவன் விரும்பும் போதெல்லாம் அந்த பாத்திரத்திலிருந்து அவனுக்கு வேண்டிய உணவு கிடைக்கும் என்று கூறினார். அந்தப் பாத்திரத்தில் இருந்து அவனுக்கு வேண்டிய உணவை அவன் பலகாலம் பெற்று வந்தான்.

இந்நிலையில் ஒருநாள் காஷுவுக்கு வீடு, செல்வம் வேண்டும் என்ற பேராசை ஏற்பட்டது. மீண்டும் தண்ணீரில் மூழ்குவது போல நடித்தால், நாரதர் வருவார் என்ற எண்ணத்தில், நதியில் மூழ்கினான். நாரத முனிவரும் வரவில்லை, பாத்திரமும் மறைந்துவிட்டது. மீண்டும் பசியின் கொடுமையில் வாடினான். தனது பேராசை பெரு நஷ்டமாகிவிட்டதை உணர்ந்த காஷு, மிகவும் வருந்தினான். அப்போது நாரதர் மீண்டும் அவன் முன் தோன்றி, அவனிடம், ‘உன்னுடைய முன்ஜென்மத்தில் உனக்கு சாம்பு என்று ஒரு மகன் இருந்தான், அந்த மகனின் பக்தியால்தான் இப்போது என்னைப் பார்க்க முடிகிறது, நீயும் பக்தி செய்து முக்தியடை’ என்று கூற, அதன் பிறகு காஷு, எப்போதும் பகவானின் திருநாமங்களை உச்சரித்துக் கொண்டு தனது வாழ்நாளைக் கழிக்க ஆரம்பித்தான்.

அவனது நிலையைக் கண்ட மஹாலக்ஷ்மி, அந்தச் சிறுவனுக்கு உதவி செய்யுமாறு பகவானிடம் வேண்டினாள். அதற்கு பகவான் அவன் பாவங்கள் இன்னும் தீரவில்லை, முன்ஜென்மத்தில் அவன் ஒரு பூசாரியாய் இருந்தான். வேசிகளுடன் சுற்றிக்கொண்டு, கோவிலையும் கவனிக்கவில்லை. அப்போது அவன் மகன் சாம்பு, கோவிலில் பூஜைகளை பக்தியுடன் செய்து என்னை வந்தடைந்தான். முன்பைப் போலவே இப்போதும் காஷு தனது ஆசை நிறைவேறியதும் என்னை மறந்துவிடுவான். ஆகையால் அவனை சிறிது காலம் சோதித்துப் பிறகு ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறினார். காஷுவும் பகவானின் திருநாமங்களை உச்சரித்துக் கொண்டே இருந்தான். மீண்டும் மஹாலக்ஷ்மி பகவானிடம் வேண்ட, பகவானும் அதற்கு இணங்கினார்.

இதற்கிடையே, காஷு சுயநினைவை இழந்துவிட, பகவான் அவன் முன்னே தோன்றினார். அவன் தலையைத் தடவிக் கொடுத்தார். தன்னை அவரது திருவடிகளில் சேர்த்துக்கொள்ளுமாறு காஷு வேண்டினான். தன்னைப் போலத் துன்பமடைபவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் தானும் உதவ அருள் புரியுமாறும் வேண்டினான்.

பகவானும் அதை ஏற்றுக் கொண்டு, "கலியுகத்தில் நீ ஒரு வாகை மரமாகப் பிறப்பாய். அப்போது குருவாயூர் கோவிலில் குருவாயூரப்பனாக இருக்கும் எனக்கு, தினமும் காலையில் எனக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, பின் என்னை வாகைத் தூளினால் தேய்ப்பார்கள். அந்த வகையில் நீ எனக்கு சேவை செய்வாய். என் மூலமாக எனது பக்தர்களின் தோல் நோய்களும் தீரும்'' என்று கூறி காஷுவை ஆசீர்வதித்து விட்டு மறைந்தார்.

குருவாயூரப்பனுக்கு "வாகை சார்த்து' வழக்கம் இவ்வாறுதான் ஏற்ப்பட்டது. அதன்படியே இன்றும், நிர்மால்யம் முடிந்தவுடன், தைலாபிஷேகம் செய்து, பின்னர் வாகை மரத்தின் பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் பொடியை குருவாயூரப்பனின் திருமேனியில் போட்டு எண்ணெய் போகத் தேய்க்கிறார்கள். இதைத் தான் வாகைச் சார்த்து என்கிறார்கள். பிறகு பகவானுக்கு அபிஷேகம் செய்து அலங்காரம் செய்கின்றனர். இந்த அபிஷேக தீர்த்தமும் தைலமும் பல நோய்களைக் குணப்படுத்தும் சக்தி பெற்றவை என்பது நம்பிக்கை.

குருவாயூரப்பனை வழிபட்டு, வாழ்வில் நோய்களும், தோஷங்களும் நீங்கப் பெறுவோம்! ஓம் நமோ நாராயணாய! நாராயண! நாராயண!

Saturday, August 5, 2017

கண்ணன் கதைகள் (65) - ஸர்ப்ப தோஷ நிவர்த்தி

குருவாயூர் க்ருஷ்ணரின் மகிமை.

குருவும் வாயுவும் சேர்ந்து ப்ரதிஷ்டை செய்த குருவாயூரப்பனின் லீலைகளை அளவிட முடியாது. பாம்பின் தலையிலேயே தன் பாதத்தை வைத்து நடனமாடிய க்ருஷ்ணரை மனதார வணங்கினால் ஸர்ப்ப தோஷம், தொழு நோய், தோல் நோய், எல்லாம் பயந்து ஓடும் என்பதற்கு இந்த புராணக் கதையே எடுத்துக்காட்டு.

உத்தரையின் கர்ப்பத்திலிருந்த குழந்தையை  ஸ்ரீ கிருஷ்ண பகவான் காப்பாற்றினார். அந்தக் குழந்தையே "விஷ்ணுரதன்" எனப்படும் பரீக்ஷித்.

பஞ்ச பாண்டவர்கள் இமயத்திற்குச் சென்றபின் அவர்கள் பேரனான பரீக்ஷித் அரசாட்சி ஏற்று, நீதி தவறாமல் ஆண்டு வந்தான். ஒரு சமயம் காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்தபோது சமீகர் என்ற முனிவரைக் கண்டு தாகத்திற்குத் தண்ணீர் கேட்டான். தவத்திலிருந்த முனிவரிடம் சலனம் இல்லாததால், தனது வில்லின் நுனியால் அருகில் இருந்த ஓர் உயிரற்ற பாம்பை அவர் கழுத்தின் மீது போட்டுவிட்டுச் சென்றான். சற்று நேரம் கழித்து அங்கு வந்த முனிவரின் மகன் சிருங்கி, தன் தந்தைக்கு நேர்ந்த அவமானத்தைக் கண்டு, அன்றிலிருந்து ஏழாவது நாள், பரீக்ஷித் கொடிய விஷம் கொண்ட 'தக்ஷகன்' என்ற பாம்பால் கடிபட்டு இறப்பான் என சபித்தான். இதனை அறிந்த பரீக்ஷித், தான் செய்த தவற்றை உணர்ந்து, அரியணையைத் துறந்து, தனது மகன் ஜனமேஜயனுக்கு அரசை அளித்து, தன் கடைசி ஏழு நாட்களில் சுக முனிவரிடம் பாகவதக் கதையை கேட்டறிந்தான்.

சாபத்தின்படி, தக்ஷகன் என்னும் கொடிய விஷமுள்ள பாம்பு பரீக்ஷித்தை ஏழாம் நாளில் கடிக்க பரீக்ஷித் இறந்துவிடுகிறான். இதனால் கோபமடைந்த பரீக்ஷித்தின் மகன் ஜனமேஜயன், தன் தந்தையைக் கொன்ற பாம்புகளின் வம்சத்தையே அழிக்க முடிவு செய்து, பாம்பு வேள்விக்கு உத்தரவிட்டான். சரியான மந்திரங்களை உச்சரித்து, பாம்புகளின் பெயர்களைச் சொல்லி வேள்வி செய்ய, பாம்புகள் ஆயிரக்கணக்கில் அந்த அக்னியில் விழுந்து அழிந்தன. அறம் அறிந்த 'ஆஸ்தீகர்' என்பவர், ஜனமேஜயனிடம் சென்று, அவருடைய தவறை எடுத்துச் சொல்லி, பாம்புகள் அழிவதைத் தடுத்தார். ஜனமேஜயனும் மனம் திருந்தினார். ஆனால், பல பாம்புகளை கொன்றதால் ஜனமேஜயனுக்கு ஸர்ப்பதோஷம் உண்டானது. அவருக்கு தொழுநோய் உண்டானது.

பல சிகிச்சைகள் செய்தும் பலனில்லாமல், மரணத்தை ஏற்க முடிவு செய்தபோது, ஆத்ரேயர் என்ற முனிவர், அரசனிடம்,"உனக்கு ஏற்பட்டிருக்கும் ஸர்ப்பதோஷத்தையும், தொழுநோயையும் போக்க ஒரு வழியிருக்கிறது. பாம்பின் தலையிலேயே தன் பாதத்தை வைத்திருக்கும் ஸ்ரீ க்ருஷ்ணரை மனதார வணங்கினால் உன்னுடைய ஸர்ப்பதோஷமும், தொழுநோயும் நீங்கும். வைகுண்டத்தில் தன்னை தானே வழிபட்ட க்ருஷ்ணரின் விக்கிரகமானது குருவாயூரில் உள்ளது. நீ உடனே குருவாயூர் சென்று அங்கு உள்ள க்ருஷ்ண விக்கிரகத்தைத் தரிசித்து வணங்கு" என்று சொன்னார். ஜனமேஜயனும், குருவாயூர் சென்று, அங்குள்ள க்ருஷ்ண விக்கிரகத்தைத் தியானம் செய்து, அன்புடன் பூஜை முதலியவற்றை செய்து பத்து மாதங்கள் வழிபட்டார். தொழுநோய் படிப்படியாக நீங்கியது. ஸ்ரீ குருவாயூர் க்ருஷ்ணரும் ஜனமேஜயனுக்கு பூரண குணத்தை அருளினார். மகிழ்ச்சியடைந்த ஜனமேஜயன் குருவாயூர் கோவிலைப் புதுப்பித்துக் கொடுத்தார் என்பது புராணம்.

ஸர்ப்ப தோஷத்தை நீக்கும் சக்தி படைத்தவர் குருவாயூரப்பன். குருவாயூர் 
க்ருஷ்ணரை மனதார வணங்கினால் ஸர்ப்ப தோஷம், தொழு நோய், தோல் நோய் அனைத்தும் நீங்கும் என்பது சத்தியம்.

Sunday, July 23, 2017

கண்ணன் கதைகள் (64) - திருமண அனுக்ரஹம்

கண்ணன் கதைகள் (64) - திருமண அனுக்ரஹம்
முன்னோரு சமயம் தெய்வ பக்தி நிரம்பிய ஓர் வைதீகர் இருந்தார். அவர் பெரிய சம்சாரி. மிகவும் ஏழ்மையில் இருந்த அவர், தன் பெண்ணிற்குத் திருமணம் செய்ய வேண்டுமே என்று மிகவும் கவலைப்பட்டார். ஜோதிடர்கள் அந்தப் பெண்ணிற்கு திருமணம் சற்று தாமதமாக நடக்கும் என்று கூறியதால் மிகுந்த கவலையுடன் இருந்தார்.

அவர் கவலையை அறிந்த அவர் நண்பர், அவரைத் தேற்றி, "நான் சொல்வது படி செய்யுங்கள், விரைவிலேயே திருமணம் நடக்கும். ஸ்ரீ குருவாயூரப்பனின் படத்தை வைத்து, தினமும் பூஜை செய்து, ஸ்ரீ நாராயணீயத்தைப் பாராயணம் செய்து வாருங்கள், உங்கள் பெண்ணுக்குத் திருமணம் நடக்கும். ஸ்ரீ நாராயணீயத்தைப் படிப்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும், நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் கட்டாயம் அளிக்கும். தைரியமாக இருங்கள்" என்றார். அதன்படி வைதீகரும் தினந்தோறும் செய்து வந்தார். ஒரு வாரம் ஆயிற்று. ஒருநாள் பூஜை, பாராயணம் செய்துவிட்டு வந்தபோது அவரது நீண்ட நாள் நண்பர் தனது மனைவியுடன் அவர் வீட்டிற்கு வந்தார். க்ஷேமங்கள் பற்றி விசாரித்த அவர், உனக்கு ஒரு பெண் இருந்தாளே, அவளுக்குத் திருமணம் ஆகிவிட்டதா? என்று கேட்க, வைதீகரும் இன்னமும் ஆகவில்லை என்றார். உடனே நண்பர், தனக்குத் தெரிந்த ஒரு நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பையன் இருப்பதாகவும், அவர்கள் வீட்டிற்குச் சென்று பேசி வரலாம் என்றும் கூறினார். உடனே வைதீகரும் மகிழ்ச்சியுடன் அவர்கள் வீட்டிற்குச் சென்று அவர்களைப் பார்த்துப் பேசி பெண் பார்க்க வர வேண்டும் என்று சொன்னார்கள். ஒரு நல்ல நாளில் அவர்கள் பெண் பார்க்க வந்து அன்றே நிச்சயதார்த்தமும் செய்து சென்றார்கள். வெளியூரில் இருந்த மகனுக்கு இந்த நல்ல விஷயத்தைப் பற்றிக் கடிதம் எழுதினார்.

வைதீகருக்கு இதில் மிகவும் மகிழ்ச்சி என்றாலும், கல்யாணத்திற்குச் சில நாட்களே இருந்த நிலையில், அதற்குத் தேவையான பணம் இல்லாததால் மிகுந்த கவலையுடன் குருவாயூரப்பன் படத்தின்முன் சென்று மனதார வேண்டினார். அப்போது வாசலில் தபால்காரர் வந்து ஒரு தபால் கொடுத்தார். அவர் மகனிடமிருந்து கடிதம் வந்திருந்தது. நீண்ட நாட்களாக அவனிடமிருந்து கடிதம் வராமல் இப்போது வந்ததில் ஆனந்தமடைந்து அதைப் படித்தார். அதில், “அப்பாவுக்கு அனேக நமஸ்காரம். உங்கள் கடிதம் கண்டேன். இத்துடன் தங்கையின் கல்யாணத்திற்காக நான் சேர்த்து வைத்திருந்த பணம் இருக்கிறது, அதை வைத்து வேண்டிய செலவுகளைச் செய்து கொள்ளுங்கள், நானும் புறப்பட்டு வந்து விடுகிறேன், கவலை வேண்டாம்" என்று எழுதியிருந்தான். பிறகு, குறிப்பிட்ட தேதியில் அவர் பெண்ணின் திருமணமும் நல்லவிதமாக நிறைவேறியது. வைதீகர், குருவாயூரப்பனின் திருவருளை நினைத்து ஆனந்தத்துடன் மெய்சிலிர்த்து குருவாயூரப்பனுக்கு நன்றி கூறி மிக மகிழ்ந்தார்.

Thursday, July 20, 2017

கண்ணன் கதைகள் (63) - எது மதுரம்?

ஓர் ஊரில் ஒரு வயதான நம்பூதிரிப் பெண் இருந்தாள். அவள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று குருவாயூர் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். அப்போது அவள் பகவானுக்கு திரிமதுரம் சமர்ப்பிப்பது வழக்கம். ஒரு சமயம் அவள் கால்கள் வீங்கி வலியும் வேதனையும் இருந்ததால் அவளால் செல்ல முடியாமல் இருந்தது. மேலும் மாதக் கடைசியானதால் அவளிடம் அதற்கான பணமும் இருக்கவில்லை. அதனால் பஸ்ஸிலும் செல்ல முடியாது, திரிமதுரம் சமர்ப்பிக்கவும் முடியாது. அடுத்த நாள் முதல் தேதி. தன்னால் செல்ல முடியாததை நினைத்து அவள் மிகவும் வருந்தினாள். 

தனது விதியை நொந்து தனது சினேகிதியிடம் சொல்லிவிட்டு படுக்கச் சென்றாள். படுக்கும்போது பகவானின் நாமங்களைச் சொல்லிக் கொண்டே தூங்கிவிட்டாள். அப்போது அவளுக்கு ஓர் கனவு வந்தது. சொப்பனத்தில் குருவாயூரப்பன் அவள் முன்பு தோன்றி, “உன்னுடைய பையில் செலவுக்குப் பணம் இருக்கிறது. நீ வழக்கம்போல் குருவாயூருக்கு வரலாம். திரிமதுரம் எனக்குப் பிடிக்கும். ஆனால், என் பக்தர்கள் எனது நாமத்தை ஜபிப்பதைக் கேட்பது அவர்கள் அளிக்கும் நெய்வேத்தியத்தைவிட மதுரமானது” என்று கூறி மறைந்தார்.   கனவு கலைந்து பகவானின் அருளை நினைத்து மிகவும் மகிழ்ந்தாள். காலையில் அவளது கால் வீக்கமும் வடிந்திருந்தது. சந்தோஷத்தோடு, எந்தவித சிரமமும் இல்லாமல் குருவாயூர் சென்று தரிசனம் செய்தாள்.

பகவானிடம், அவன் நாமங்களைத் தொடர்ந்து சொல்வதையே வரமாகக் கேட்டாள். பகவானுடைய திருவருளை நினைத்து, தனது அன்புக்குரலுக்கு ஓடோடி வந்ததையும் நினைத்து ஆனந்தக் கண்ணீர் வடித்தாள்.  

Wednesday, July 19, 2017

கண்ணன் கதைகள் (62) - மீனவன்

குருவாயூரில் இருந்த ஒரு வியாபாரியின் மகன் கல்லூரியில் படித்து வந்தான். வாலிபனாக இருப்பினும் தீவிர பக்தனாக இருந்தான். நாள்தோறும் பகவானின் நாமஜபம் செய்து வந்தான். ஓய்வு நேரத்தில் பாகவதம் படிப்பான். ஒரு நாள் எட்டமனூரில் இருந்த தன் சகோதரிக்குத் துணையாக எட்டமனூரில் இருந்து குருவாயூர் சென்றான். படகுப் பயணம். பொதுவாக படகுப் பயணம் பச்சைப்பசேலென்ற மனதைக் கொள்ளைக் கொள்ளும் காட்சிகளைப் பார்த்துக் கொண்டு செல்வதால் மிகவும் உல்லாசமாக இருக்கும். அன்று வானம் இருண்டிருந்தது. ஒரே புயல் காற்று வேறு. அவர்கள் சென்ற படகில் திடீரென்று கோளாறு ஏற்பட்டது. படகு தண்ணீரில் மூழ்கிவிடும் அபாயம் அதிகரித்தது. இந்தப்பையனும் அவன் சகோதரியும் விடாது நாமஜபம் செய்தார்கள். 

அந்தப் படகு நீரில் சிறிது சிறிதாக மூழ்கிக் கொண்டிருந்தது. படகிலிருந்த அனைவரும் பீதியடைந்து கூச்சலிட்டார்கள். இவர்கள் இருவரும் நாமஜபம் செய்வதை நிறுத்தவே இல்லை. அப்போது யாரோ அவர்களை இழுத்துத் தண்ணீரில் வீசி எறிவதைப் போல் உணர்ந்தார்கள். அவர்கள் சுயநினைவு தப்பியது. சுயநினைவுக்கு வந்தபோது கரையில் பாதுகாப்பான இடத்தில் இருப்பதை அறிந்தார்கள். அவர்களைச் சுற்றியிருந்த மக்கள், அந்தப் படகு மூழ்கியதைப் பற்றியும், அதிலிருந்த அனைவரும் இறந்துவிட்டதாகவும், இவர்கள் இருவரை மட்டும் ஒரு மீனவன் காப்பாற்றியதாகவும் சொன்னார்கள்.

அன்றிரவு பகவான் அவர்கள் கனவில் தோன்றி, "மீனவனாக வந்து உங்களைக் காப்பாற்றியது நான்தான்" என்று திருவாய் மலர்ந்தருளினார். பகவான் ஸ்ரீஹரியை எப்போதும் நினைவில் கொண்டு ஜபிப்பவர்கள் எப்பேற்பட்ட ஆபத்திலிருந்தும் காப்பாற்றப்படுவார்கள் என்று அவன் பாகவதத்தில் படித்தது நினைவுக்கு வந்தது. அவன் பகவானுக்கு நன்றி செலுத்தி மேலும் சிறந்த பக்தனாக விளங்கினான்.

Tuesday, July 18, 2017

கண்ணன் கதைகள் (61) - சீசா



வயதான நம்பூதிரிப் பெண் ஒருத்தி தனியே வசித்து வந்தாள். அவள் பலகாலமாகத் தாங்க முடியாத தலைவலியால் மிகவும் அவதிப்பட்டு வந்தாள். பல சிகிச்சைகள் செய்தும் அவள் தலைவலி குணமாகவில்லை. அவள் எப்போதும் குருவாயூரப்பனையே தியானித்துத் தலைவலி சரியாக வேண்டும் என்று வேண்டிக் கொண்டிருப்பாள்.

ஒரு நாள் இரவு நேரம். அவளுக்குத் தலைவலி  மிகவும் அதிகமாக இருந்தது. துணைக்கு வேறு யாரும் இல்லை. காற்றாட திண்ணையில் அமர்ந்திருந்தாள். அப்போது ஏழு  அல்லது எட்டு வயதுள்ள சிறுவன் ஒருவன் அங்கு வந்தான்.  சிறுவன் அவளிடம் வந்து, "நீ எப்போதும் குருவாயூரப்பா, குருவாயூரப்பா  என்று சொல்லிக் கொண்டிருக்கிறாயே, அப்படி இருந்தும் உனக்கு இந்தத் தலைவலி ஏன் போகவில்லை தெரியுமா?  நீ உன்னுடைய முன் ஜென்மத்தில் உன் குடும்பத்தில் இருந்த பெரியவர்களை மிகவும் மனம் நோகச் செய்தாய். அதன் பலனை இப்போது அனுபவிக்கிறாய்" என்று கூறினான். மேலும், அந்த சிறுவன், நான் ஒரு சீசாவில் தைலம் தருகிறேன், அதைத் தடவிக் கொள் என்று கூறி ஒரு சீசாவைக் கொடுத்தான்.

தைலத்தின் பெயரைப் பார்க்கலாம் என்று பார்த்தபோது, அதன் மேலிருந்த காகிதத்தில் முகவரி, குருவாயூர் கிழக்கே நடை என்று இருந்தது. அந்தத் தைலத்தை எடுத்து மூன்று முறை தலையில் தடவுவதற்குள் அவள் தலைவலி குணமாகியிருந்தது. தைலத்திற்குப் பணம் கொடுக்கலாம் என்று அந்த சிறுவனைத் தேடினாள். சிறுவனைக் காணவில்லை. அவனை அவள் அந்த ஊரில் இதுவரை பார்த்ததே இல்லை. சாக்ஷாத் குருவாயூரப்பனே சிறுவன் வடிவில் வந்து தன் தலைவலியைப் போக்கியதை உணர்ந்து மெய்சிலிர்த்தாள்.  இதுபோன்ற பல அற்புதங்கள் இன்றும் நடக்கிறது. கண்ணனை நம்பினோர் கைவிடப்பட்டுவதில்லை.

Monday, February 9, 2015

கண்ணன் கதைகள் (59) - குருவாயூரப்பனும் குந்துமணியும்

கண்ணன் கதைகள் (59) - குருவாயூரப்பனும் குந்துமணியும்,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,
குண்டுமணி சிவப்பு, கறுப்பு நிறங்களில் சிறிய உருண்டை வடிவில் இருக்கும். கேரளாவில் அநேகமாக அனைவரது இல்லங்களிலும் இந்த மரம் இருக்கும். மஞ்சாடி என்ற மரத்தில் இருந்து வரும் விதை என்பதால் இதை கேரளாவில் "மஞ்சாடிக்குரு" என்று சொல்வார்கள். நாங்கள் கோவையில் இருந்தபொழுது, சின்ன வயதில், பக்கத்தில் இருக்கும் பூங்காவிற்கு தினம் சென்று அங்கு இருக்கும் குண்டுமணிகளைப் பொறுக்கி வீட்டிற்கு எடுத்து வருவோம். பிறகு அதை நன்கு கழுவி "பல்லாங்குழி" விளையாட உபயோகப்படுத்துவோம். சென்ற வருடம் கூட கேரளாவில் ஒரு நண்பர் வீட்டிற்குச் சென்றிருந்தபொழுது நிறைய குண்டுமணிகளைப் பொறுக்கி வந்தோம். "

குருவாயூர் கோயிலில் ஒரு பெரிய உருளியில் குண்டுமணியை நிரப்பி வைத்திருப்பார்கள். இரண்டு கைகளாலும் அதை அளைந்து கொண்டு நோய்கள் குணமாகவும், குழந்தை வரம் வேண்டியும் மனதார பிரார்த்தனை செய்யவேண்டும். பிறகு மீண்டும் அதிலேயே போட்டு விட வேண்டும்.

நாங்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையன்றும் வேண்டிக்கொண்டு வீட்டிலேயே ஒரு சின்னப் பெட்டியில், 7 மிளகு, கொஞ்சம் கடுகு, 7 குந்துமணி, ஒண்ணேகால் ரூபாய் எடுத்து வைத்து, குருவாயூர் செல்லும்போது அதை அங்கு சமர்ப்பிப்பது வழக்கம்.

அது சரி. குருவாயூர் கோயிலில் இதற்கு அப்படி என்ன விசேஷம்? இதன் பின்னால் ஒரு சுவையான கதை உண்டு.

முன்னொரு காலத்தில் ஒரு வயதான பெண்மணி இருந்தாள். அவளுக்கு ஸ்ரீகுருவாயூரப்பன் மிகவும் இஷ்டமான தெய்வம். அவளுடைய ஊர் குருவாயூருக்கு மிகத் தொலைவில் இருந்தது. அவளை அழைத்துச் செல்வார் யாருமில்லை. பணவசதி கிடையாது. ஆனால் குழந்தைக் கண்ணனைக் காண வேண்டும் என்றும், அவனுக்கு ஏதாவது கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவளுக்குக் கொள்ளை ஆசை.

அவள் வீட்டில் மஞ்சாடி மரம் (குந்துமணி மரம்) இருந்தது. அதிலிருந்து நிறைய குண்டுமணிகள் கீழே விழும். அவற்றைச் சேகரித்து, நன்கு அலம்பி, துடைத்து ஒரு பை நிறைய சேர்த்து வைத்திருந்தாள்.

ஒரு நாள் கண்ணனைக் காண வேண்டும் என்ற ஆவல் மிகுதியால் பயணம் புறப்பட்டாள். வசதி படைத்தவள் அல்லவே ! அதனால் நடந்தே செல்லத்தீர்மானித்தாள். தொலை தூரம். வயது வேறு ஆகிவிட்டது. நடுநடுவே இளைப்பாறிக் கொள்வாள். ஸ்ரமமாக இருப்பினும் "கண்ணனைக்காணவும் அவனுக்கு குண்டுமணிகளைக் கொடுக்கவும் வேண்டுமே" என்று தொடர்ந்து பயணம் செய்தாள்.

ஒரு மண்டலம் பயணம் செய்து குருவாயூரை அடைந்தாள். கோவிலையும்அடைந்தாள். அவள் சென்ற நாள் அந்த மாதத்தின் முதல் நாள். அவள் கோவிலைஅடைந்த சமயம், கோவிலில் மிகவும் பரபரப்பாக இருந்தது. ஏதோ விசேஷம் என்று அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் அன்றும் அந்த ஊர் அரசன், அவன் பக்தியை வெளிப்படுத்த, கோயிலுக்கு ஒரு யானையை சமர்ப்பிப்பது வழக்கம். அதனால்தான் அந்த பரபரப்பு. சேவகர்கள், அரசன் வருவதால் வழியை விலக்கிக் கொண்டிருந்தனர்.

இந்த வயதான பெண்மணி, தன்னுடைய பையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள். சேவகர்களின் அஜாக்கிரதையால் அவள் கீழே தள்ளப்பட்டாள். பை கீழே விழுந்து அதிலிருந்த குண்டுமணிகள் சிதறி விழுந்தன. கிழவியின் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகப் பெருகியது. ஒரு சொட்டுக் கண்ணீர் தரையில் விழுந்தது.

அதே சமயம், கோயிலுக்கு சமர்ப்பிக்கக் கொண்டு வந்த யானை மதம் பிடித்து ஓட ஆரம்பித்தது. அனைவரும் " என்ன ஆயிற்று?" என்று பதறினர். கோவில்பொருட்களை யானை நாசம் செய்ய ஆரம்பித்தது. யானையை அடக்க முடியவில்லை. கலங்கிய மன்னனும் மற்றவர்களும் குருவாயூரப்பனிடமே ப்ரஸ்னம் கேட்டனர்.

அப்பொழுது கர்ப்பக்ருஹத்திலிருந்து " நீங்கள் என் பக்தையை அவமானப்படுத்திவிட்டீர்கள். என் பக்தை அன்பாகக் கொண்டு வந்த குண்டுமணிகள் எனக்குவேண்டும்" என்று அசரீரி கேட்டது. கீழே சிதறிக் கிடந்த குண்டுமணிகளை, அனைவரும் பொறுக்கி எடுத்தனர். அதை அந்த வயோதிகப் பெண்மணியிடம் கொடுத்து அவளிடம் மன்னிப்பும் கேட்டனர். அவளை கல மரியாதைகளுடன் சன்னிதிக்கு அழைத்துச் சென்றனர். அவள் ஆசையுடன் அதை அப்பனிடம் சமர்ப்பித்ததும், யானையின் மதம் அடங்கியது. அவள் பக்தியின் நினைவாக இன்றும் குருவாயூர் கோயிலில் உருளியில் குண்டுமணிகள் வைக்கப்பட்டுள்ளது .

பகவான் வஸ்துக்களின் உயர்வு தாழ்வைப் பார்ப்பதில்லை. உள்ளத்தில் தூய்மையான அன்புடன் தரப்படும் பக்தியின் மேன்மையைத்தான் பார்க்கிறான்.

Sunday, February 8, 2015

கண்ணன் கதைகள் (58) - குருவாயூரப்பனும் கொன்னப்பூவும்

கண்ணன் கதைகள் (58) - குருவாயூரப்பனும் கொன்னப்பூவும்தமிழ் வருடப்பிறப்பு / விஷு / கொன்னப்பூ, கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,
கண்ணன் கதைகள் (58) - குருவாயூரப்பனும் கொன்னப்பூவும்தமிழ் வருடப்பிறப்பு / விஷு / கொன்னப்பூ, கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,
சிறு வயதில், எனது பக்கத்து வீட்டில் இருந்தவர்கள், விஷு கொண்டாடியது நினைவுக்கு வருகிறது. முதல் நாள் இரவே, பூஜைக்கு உரிய வெற்றிலை, பாக்கு, வெள்ளரி, காசு, கண்ணாடி, உருளி, நாராயணீயம். கொன்னப்பூ, அரிசி முதலியவற்றை எடுத்து வைப்பார்கள். என்னையும் "கைநீட்டம்" பெற வரச்சொல்லுவார்கள். நான் காலையில் "கைநீட்டம்" பெற சந்தோஷமாகப்போவேன். குருவாயூரப்பன் மீது எனக்கு 'மாளாக்காதல்' உண்டாக எனது பாட்டியும், அவரது தோழியான ஒரு மாமியும் சொன்ன கதைகளே முக்கிய காரணம்.  'லாலு' என்று நான் அன்புடன் அழைக்கும் அந்த மாமி,  சிறு வயதில் எனக்குச் சொன்ன கதை இப்போது ஞாபகம் வருகிறது. கதைக்குச் செல்வோமா?

கேரளத்தில் ஒரு சிறு பாலகன் இருந்தான். அவன் தினமும் குருவாயூரப்பனை தரிசனம் செய்யக் கோவிலுக்குப் போவான். அவனுக்கு ஸ்ரீ குருவாயூரப்பனை நேரிலே பார்க்க மிகவும் ஆசை. ஒரு நாள், கண்ணனை எப்படியும் பார்த்தே தீருவது என்று முடிவு செய்து, கண்ணனிடம் பிரார்த்தித்தான். கண்ணனோ வரவில்லை. கண்ணா வா என்றான் . நான் உன்னை நேரிலே பார்க்க வேண்டும் என்றான். நீ வராவிட்டால் நான் இங்கேயே இருப்பேன் என்று கூறி கோவிலிலேயே உட்கார்ந்து விட்டான். நடையும் அடைத்தாயிற்று.

கண்ணன் வரவில்லை. அழுதான். அரற்றினான். குழந்தையல்லவா? அவன் அழுவது கண்ணனுக்கு பொறுக்கவில்லை. வந்தான். எப்படி? மயில் பீலி, பட்டு, பீதாம்பரம் உடுத்திக்கொண்டு, குழலூதிக்கொண்டுவந்தான். குழந்தையுடன் விளையாடினான். சிறுவனுக்கு ஒரே சந்தோஷம். கண்ணனோ தன்னுடைய அரைஞாணை அவனுக்கு அளித்தான்.

சிறுவன் சந்தோஷமாக வீட்டுக்குச்சென்று அம்மாவிடம் நான் கண்ணனுடன் விளையாடினேன் என்றான். அம்மாவோ நம்பவில்லை. இங்கே பார் "கண்ணன் தன்னுடைய கிண்கிணியை எனக்கு கொடுத்தான் பார்" என்றான்.
கோவிலிலும் அரைஞாணைக் காணாததால் அனைவரும் சிறுவன் அதைத் திருடியதாக நினைத்தார்கள். அம்மா திட்டினாள். அதைப்பிடுங்கி வீசினாள். அது பக்கத்தில் இருந்த கொன்றை மரத்தின்மேல் சிக்கிக்கொண்டது. உடனே, அந்த மரம் முழுவதும் தங்க நிறத்தில் கிண்கிணியைப்போன்ற பூக்கள் பூத்துக்குலுங்கின. அப்பொழுது, "உன் மகனுடன் நான் விளையாடியது நிஜம்" என்று அசரீரி வாக்கு கேட்டது. அது முதல் "கொன்னப்பூ" பூஜைக்கு மிகவும் உகந்ததாகப் போற்றப்பட்டது. இப்பொழுது மேலே உள்ள படத்தில் குருவாயூரப்பனின் அரைஞாணும் கொன்னப்பூவின் மொக்குகளும் ஒரே மாதிரி இருப்பது போல் தெரிகிறதா?

Saturday, February 7, 2015

கண்ணன் கதைகள் (57) - ருக்மிணி கல்யாணம்

கண்ணன் கதைகள் (57) - ருக்மிணி கல்யாணம், கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்

கிருஷ்ணர் துவாரகையை அடைந்தார். விஸ்வகர்மாவால் உருவாக்கப்பட்டதும், தேவர்கள் அளித்த ஐஸ்வர்யங்களை உடையதும், கடலின் நடுவே உள்ளதுமான அந்தப் புதிய துவாரகா நகரமானது, அவருடைய தேக காந்தியால் மிகவும் அழகாகவும், சிறப்பாகவும் விளங்கியது. பிரமனின் ஆக்ஞைப்படி, ரேவத நாட்டு அரசன், தன் பெண்ணான ரேவதியை, பலராமனுக்கு மணம் செய்து கொடுத்தான். கிருஷ்ணர், யாதவர்களோடு சேர்ந்து அந்தத் திருமணத்தில் உற்சாகத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

விதர்ப்ப நாட்டு அரசனின் பெண்ணான ருக்மிணி, கிருஷ்ணரின் மீது அன்பு கொண்டாள். அவளுடைய அண்ணன் ருக்மி. சேதி நாட்டு அரசன் சிசுபாலன் அவனுடைய நெருங்கிய நண்பன். தீய எண்ணம் கொண்ட சிசுபாலனுக்கு, ருக்மிணியை மணம் செய்து கொடுக்க ருக்மி முடிவு செய்தான்.

ருக்மிணி கிருஷ்ணரிடம் வெகுநாட்களாகக் காதல் கொண்டிருந்தாள். தன் விருப்பம் நிறைவேறாமல் போய்விடுமோ என்று அஞ்சினாள். தனக்கு ஏற்பட்ட துன்பத்தை கிருஷ்ணரிடம் தெரிவிக்குமாறு ஒரு அந்தணரை அவரிடம் தூது அனுப்பினாள். அந்த அந்தணர், விரைவாக துவாரகா நகரை அடைந்தார். கிருஷ்ணர் அந்த அந்தணரை வரவேற்று உபசரித்தார். அந்தணரும் மிகுந்த சந்தோஷமடைந்தார். அவர், “கிருஷ்ணா! குண்டின தேசத்து இளவரசியான ருக்மிணி தங்களிடத்தில் காதல் கொண்டுள்ளாள். நான் அவளுடைய தூதுவனாக, அவள் அனுப்பிய சேதியோடு இங்கு வந்திருக்கிறேன்” என்று கூறினார். பிறகு,“உலகிற்கெல்லாம் நாயகனே! உம்முடைய குணங்களால் கவரப்பட்டு உம்மையே கணவனாக வரித்துவிட்டேன். தற்போது, சிசுபாலன் என்னை அடைந்து விடுவானோ என்று அஞ்சுகிறேன். கருணைக்கடலே! என்னைக் காக்க வேண்டும்” என்று ருக்மிணி கூறிய சேதியை அந்தணர் கிருஷ்ணரிடம் தெரிவித்தார். “வேறு கதியில்லாத என்னைக் கைவிட்டீரானால் நான் உடனே என் ஜீவனை விட்டுவிடுவேன்” என்று ருக்மிணி கூறியதை அந்தணர் சொன்னதும், கிருஷ்ணருடைய மனத்திலும் மிக்க சஞ்சலம் உண்டானது. கிருஷ்ணர் அந்த அந்தணரிடம், “அவளுடைய வேதனையைக் காட்டிலும் என் மனதில் அதிகமான மன்மத வேதனை ஏற்பட்டுள்ளது. நான் சீக்கிரமாக வந்து, அரசர்களின் முன்னிலையில், கருவிழிகளையுடைய என் பிரியையான ருக்மிணியைக் கரம் பிடிக்கிறேன்” என்று கூறினார்.

பின்னர் கிருஷ்ணர் ரதத்தில் ஏறிக்கொண்டு, அந்தணருடன் சீக்கிரமாகக் குண்டின தேசத்தை அடைந்தார். பலராமன் சேனைகளுடன் பின் தொடர்ந்து வந்தார். அரசனான பீஷ்மகன் அவர்களை வரவேற்று உபசரித்தான். கிருஷ்ணர் வந்த செய்தியைக் கூறிய அந்தணருக்கு, ருக்மிணி மிகுந்த அன்புடன் நமஸ்காரம் செய்தாள். உலகிலேயே அழகான கிருஷ்ணருடைய திருமேனியைக் கண்டும், ருக்மி எடுத்த முடிவைக் கேட்டும், குண்டின தேசத்து மக்கள் துயரமடைந்தார்கள். இரவும் கழிந்தது.

மறுநாள் காலை, ருக்மிணி மங்களகரமான ஆடை ஆபரணங்களுடன், காவலர்கள் சூழ, பார்வதிதேவியை வணங்கக் கோவிலுக்குக் கிளம்பினாள். அவள் மனத்தை கிருஷ்ணரிடத்திலேயே அர்ப்பணித்திருந்தாள். உயர்குலப் பெண்களுடன் பார்வதி தேவியின் ஆலயத்திற்குள் சென்று, நன்கு வழிபாடு செய்து, அவள் பாதங்களில் நமஸ்கரித்தாள். கிருஷ்ணனையே கணவனாக அளிக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வேண்டினாள். ருக்மிணியைக் காண வேண்டும் என்ற ஆவலில் பல நாட்டு அரசர்கள் கோவில் வாசலில் கூடியிருந்தார்கள். கிருஷ்ணரும் ருக்மிணியைக் கிரஹிக்க எண்ணம்கொண்டு காத்திருந்தார். அப்போது ருக்மிணி, மிகுந்த அழகுடன் எல்லா திசைகளையும் ஆனந்தமுறச் செய்துகொண்டு, ஆலயத்திலிருந்து வெளியே வந்தாள். அவள் அழகானது உலகையே மயங்கச் செய்வதாய் இருந்தது. அவளது தேககாந்தியால் எல்லா அரசர்களும் மயங்கினர். அவளது கடைக்கண் பார்வையால் கிருஷ்ணரும் மோஹித்தார். சந்திரன் போன்ற முகத்தை உடைய ருக்மிணியை நெருங்கினார். “நிலவைப் போன்ற முகமுடையவளே! எங்கே போகிறாய்?” என்று கேட்டு, நொடிப்பொழுதில் அவள் அருகே சென்று, அவளது நுனிக்கை விரல்களைப் பிடித்து, அவளைக் கைகளினால் அன்புடன் பற்றி, அவளை கிரஹித்தார். மனோவேகத்தில் செல்லும் தன்னுடைய ரதத்தில் ஏற்றிக்கொண்டார். ருக்மிணியின் மனோரதமும் நிறைவேறியது.

உடனே, அனைத்து திசைகளில் இருந்தும் எதிரிகளின் கூச்சல் அதிகமானது. இந்த இடைச்சிறுவன் எங்கிருந்து வந்தான்? என்று கூடியிருந்த அரசர்கள் கோபமடைந்து போர்புரியத் தொடங்கினார்கள். யாதவர்கள் அவர்களை ஜயித்தார்கள். நாய்க்கூட்டங்களைப் பார்த்த சிங்கம் போல், அந்த அரசர்களைக் கண்ட கிருஷ்ணர் சிறிதும் அசையவில்லை. ருக்மி எதிர்த்துப் போர்புரிய வந்தான். அவனைக் கட்டி இழுத்து, அவன் தலையை மொட்டை அடித்து, மீசையைக் கத்தரித்து அவன் கர்வத்தை அடக்கினார். பலராமனின் வேண்டிக் கொண்டதன்பேரில் அவனை விடுவித்துக் கொல்லாமல் விட்டார்.

பிறகு, மஹாலக்ஷ்மியான ருக்மிணியுடன் துவாரகைக்குச் சென்றார். அனைவரும் அவர்களை வரவேற்றார்கள். துவாரகையில் முறைப்படி கிருஷ்ணருக்கும் ருக்மிணிக்கும் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. துவாரகை நகரம் முழுவதும் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டு, மங்கள வாத்தியங்களின் ஒலிகளால் ஸ்வர்க்கம் போன்று விளங்கியது. நகரத்து மக்கள் அனைவரும் கிருஷ்ணரையும், ருக்மிணியையும் காண ஓடோடி வந்தார்கள். உத்தமமான அவர்களுடைய சேர்க்கையைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள். கிருஷ்ணருடைய சேர்க்கையால் ருக்மிணி மிகுந்த நாணத்தை அடைந்தாள். புதிய காதல் அனுபவத்தால் மிகுந்த சந்தோஷமடைந்தாள். அவள் முகம் மந்தஹாஸப் புன்னகையுடன் விளங்கியது. கிருஷ்ணர் தனிமையில் ருக்மிணிக்குப் பலவகையில் ஆனந்தமளித்தார். இரவும் பகலும் விளையாட்டுப் பேச்சுக்களால் மகிழச் செய்தார். முன்பை விடப் பலவிதமாய் அரவணைத்து, அவளை சந்தோஷமடையச் செய்தார் . மக்களும் சுபிட்சமாக, பேரானந்தத்துடன் வாழ்ந்து வந்தார்கள்.

Friday, February 6, 2015

கண்ணன் கதைகள் (56) - கோபிகைகளுக்கு உத்தவர் சேதி சொல்லுதல்

கண்ணன் கதைகள் (56) - கோபிகைகளுக்கு உத்தவர் சேதி சொல்லுதல்,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்

பிறகு கிருஷ்ணர் பலராமனுடன், ஸாந்தீபனி முனிவரிடம் அறுபத்து நான்கு நாட்களிலேயே பல வித்தைகளையும், கல்விகளையும் கற்றார். குருதக்ஷிணையாக, இறந்த அவரது மகனை யமலோகத்திலிருந்து மீட்டு, அவரிடம் கொடுத்தார். பின்னர் மதுரா நகரத்தை அடைந்தார்.

பிருந்தாவனத்தில் கோபிகைகள், கிருஷ்ணரை நினைத்து மிகவும் துயரம் அடைந்தார்கள். அதனை அறிந்த கிருஷ்ணர், அவர்கள் மீது கருணை கொண்டு, தனது நண்பரும், சிறந்த பக்தருமான உத்தவரை அவர்களிடம் சேதி சொல்ல அனுப்பினார். எவ்வுலகிலும் காண முடியாத கோபிகைகளின் அன்பையும், பக்தியையும் உத்தவருக்குக் காண்பிக்க நினைத்து, அவரை அங்கு அனுப்பினார். உடனே உத்தவர் புறப்பட்டு, கோகுலத்திற்கு மாலையில் சென்றார். கிருஷ்ணனைப் பற்றிய செய்திகளைக் கூறி நந்தகோபரையும், யசோதையையும் சந்தோஷமடையச் செய்தார். நந்தனுடைய வீட்டின் அருகில் தேர் நிற்பதைப் பார்த்த கோகுலத்துப் பெண்கள், உத்தவர் வந்திருப்பதை அறிந்து, எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு நந்தனின் வீட்டை அடைந்தனர். கண்ணனுடைய பல்வேறு செயல்களையும் விளையாட்டுக்களையும் மீண்டும் நினைத்துப் பேச முடியாமல் ஆனார்கள். தடுமாற்றத்துடன் தயங்கிக் கொண்டு உத்தவரிடம் பேச முயன்றார்கள். "உத்தவரே! இரக்கமற்ற அந்தக் கண்ணன், தன் பெற்றோரைப் பார்ப்பதற்காக உங்களை அனுப்பினானா? நகரத்துப் பெண்களால் கவரப்பட்ட அவன் எங்கிருக்கிறான்? நாதனே! காக்க வேண்டும். உமது முத்தங்களையும், தழுவல்களையும், பேச்சுக்களையும், அழகிய விளையாட்டுக்களையும் யாரால் மறக்க முடியும்?" என்று அரற்றினார்கள். இவ்வாறு பலவிதமாய்ப் புலம்பிய கோபிகைகளிடம், உத்தவர் தத்துவங்கள் பொதிந்த கண்ணனின் சேதியைக் கூறி, சமாதானம் செய்தார். அதனைக் கேட்ட கோபியர்கள் மகிழ்ந்தனர். உத்தவர், அவர்களோடு கிருஷ்ணனின் செய்கைகளையும், விளையாட்டுக்களையும் பற்றிப் பேசிக்கொண்டு சில தினங்களை அங்கே கழித்தார். கோகுலத்தில், எப்பொழுதும், எல்லாரும் கிருஷ்ணனைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். வீட்டு வேலைகள் செய்யும்போது கூட, அவருடைய லீலைகளையே பாடிக் கொண்டிருந்தார்கள். தூக்கத்திலும் கிருஷ்ணனைப் பற்றியே பேசினார்கள். அவர்களது செய்கைகள் யாவும் கிருஷ்ணனை அனுசரித்தே இருந்தன. அனைத்து செயல்களும் கிருஷ்ணமயமாக இருந்தது. இதைக் கண்ட உத்தவர் மிகுந்த ஆச்சர்யம் அடைந்தார்.

உத்தவர் ராதையிடம், “ராதையே! உன் கிருஷ்ணன் பூக்களைக் கண்டால், இது என் ராதைக்கு மிகவும் பிரியமானது என்பார். நான் பேசினால் ராதையும் இவ்வாறுதான் பேசுவாள் என்றும், நான் பேசாவிட்டால், கோபம் கொண்ட ராதையைப் போல் என் பேசாமல் இருக்கிறாய்? என்றும் என்னைக் கேட்பார்” என்று கூறி, தாமரைக்கண்களுடைய ராதையை ஆனந்தமடையச் செய்தார். “ நான் சீக்கிரமே திரும்பி வருவேன். மிகுந்த கார்யங்களினால் வரமுடியவில்லை. பிரிவைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். என்னைப் பற்றிய நினைவுகள் எப்போதும் உங்களுக்கு இருப்பதால் வெகு விரைவில் உங்களுக்கு பிரும்மானந்த சுகம் கிட்டப் போகிறது. அப்போது உங்களுக்கு பிரிவும், சேர்க்கையும் சமமான ஆனந்தத்தை அளிக்கும்” என்று கிருஷ்ணன் கூறியதை, உத்தவர் கோபிகைகளிடம் கூறி சமாதானப் படுத்தினார். இவ்விதமான அன்பையும், பக்தியையும் எந்த உலகிலும் கண்டதில்லை, கேட்டதில்லை. தவம் செய்வதாலோ, வேதங்களைக் கற்பதாலோ என்ன பயன்? கோபிகைகளை நமஸ்கரித்துத் தொழுதாலே போதும் என்று எவ்வுலகிலும் காண முடியாத கோபிகைகளின் அன்பையும், பக்தியையும் மெய்மறந்து, ஆனந்தத்துடன் கூறிக்கொண்டு உத்தவர் கோகுலத்திலிருந்து மதுரா திரும்பினார்

மதுராவில், ஸைரந்திரி கிருஷ்ணரைப் பற்றியே நினைத்துக்கொண்டு, ஒவ்வொரு நாளும் அவருடைய வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். தன் இல்லத்தையும், தன்னையும் நன்கு அலங்கரித்துக் கொண்டு காத்திருந்தாள். கிருஷ்ணன் உத்தவருடன் அவளது இல்லத்திற்குச் சென்றார். அவளது நீண்டநாள் எண்ணம் நிறைவேறியது. அதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்த அவள், கிருஷ்ணனைப் பலவிதமாகப் பூஜித்தாள். கிருஷ்ணன் அவளிடம் வேண்டிய வரம் கேள் என்று கூற, அவளும், பல இரவுகள் கண்ணனோடு கழிக்கும் விஷய சுகத்தையே வரமாக வேண்டினாள். பிறகு, சில இரவுகள் அவளுடன் தங்கி அவளுக்கு ஆனந்தத்தை அளித்து அவளுக்கு உபஶ்லோகன் என்ற புத்திரனையும் அளித்தார். அந்த உபஶ்லோகன், நாரத முனிவரிடம் இருந்து பாஞ்சராத்ர ஆகமத்தை உபதேசம் பெற்று அதில் பிரசித்தனாக விளங்கினான். பின்னர், கிருஷ்ணர் பலராமருடனும், உத்தவரோடும் அக்ரூரரின் வீட்டை அடைந்தார். அவருடைய வரவால் மிகவும் மகிழ்ந்த அக்ரூரர், அவர்கள் அனைவரையும் நன்கு வரவேற்று உபசரித்து, பூஜித்துத் துதித்தார். அவரை நகரத்திற்கு அனுப்பி, குந்தியின் புத்திரர்களான பாண்டவர்கள் காட்டிலிருந்து நகருக்குத் திரும்பி வந்ததைப் பற்றியும், திருதராஷ்ட்ரனின் கெட்ட செயல்களைப் பற்றியும் அறிந்தார்கள்.

ஜராஸந்தன் என்பவன், தன் நண்பனும், மாப்பிள்ளையுமான கம்ஸனின் வதம் பற்றிக் கேள்விப்பட்டு, மிகுந்த கோபம் கொண்டு, மதுராநகரத்தை அழித்தான். சிறிய படையையுடைய கிருஷ்ணர், தேவலோகத்திலிருந்து பலராமனுக்குக் கிடைத்த தேர் முதலியவற்றால், அவனது இருபத்திமூன்று அக்ஷௌஹிணிப் படைகளை முறியடித்தார். பலராமன் ஜராஸந்தனைக் கட்டி வைத்தார். அவனோடு யுத்தம் செய்ய ஆசைகொண்ட கிருஷ்ணன் அவனை விடுவித்தார். ஏனெனில், அனைத்து அரசர்களையும் வென்று, அவர்களது சேனைகளையும் அடைந்த ஜராஸந்தனைப் போன்ற வீரன் அப்போது யாரும் இல்லை. தோல்வியடைந்த ஜராஸந்தன், மற்ற அரசர்களின் உதவியுடன் பதினாறு முறை கண்ணனோடு யுத்தம் செய்தான். அவனது முன்னூற்று தொண்ணூற்று ஒன்று அக்ஷௌஹிணிப் படைகளையும் கிருஷ்ணர் அடித்துக் கொன்றார். அவனுடன் பதினெட்டாவது முறை யுத்தம் ஆரம்பிக்கும்முன், மூன்று கோடி யவனர்களுடன் ஒரு யவனன் படையெடுத்து வருவதை அறிந்த கண்ணன், உடனே, விஸ்வகர்மாவைக் கடலின் நடுவில் ஒரு நகரை உருவாக்கச் சொல்லி, அதில் மக்கள் அனைவரையும் குடியேறச் செய்தார். பிறகு, தாமரை மாலையணிந்து, நகரத்திலிருந்து வெளியே வந்தார். யவனர்களின் தலைவன் பின்தொடர்ந்து வந்தான். உடனே கிருஷ்ணர் ஒரு மலைக்குகையில் மறைந்தார். தொடர்ந்து வந்த யவனன், கிருஷ்ணன் என்று நினைத்து, குகையில் தூங்கிக் கொண்டிருந்த முசுகுந்தன் என்ற அரசனைக் காலால் உதைத்தான். விழித்த முசுகுந்தன், அந்த யவனனை, தன் பார்வையால் சாம்பலாக்கினான். அப்போது கிருஷ்ணன், குகையில், பக்தனான முசுகுந்தனுக்கு காட்சி கொடுத்தார். "எனக்கு அரச வாழ்வில் விருப்பம் இல்லை. தங்கள் அனுக்ரஹம் ஒன்றே வேண்டுகிறேன்" என்று முசுகுந்தன் துதித்ததைக் கேட்ட கிருஷ்ணன் மகிழ்ந்து, எல்லா துக்கங்களையும் போக்கும் பக்தியையும், அதன்பின் முக்தியையும் அவனுக்கு வரமாக அளித்தார். வேட்டையாடி உயிரினங்களைக் கொன்ற தோஷம் நீங்க அவனைத் தவம் செய்யச் சொன்னார்.

பிறகு கிருஷ்ணர் மதுராநகரம் சென்றார். யவனன் அழைத்து வந்த சேனைகளை அழித்தார். வழியில், ஜராஸந்தன் தடுத்தான். அவனுக்குக் கடைசியான வெற்றியைக் கொடுத்து, ஓடி ஒளிந்து கொள்வதுபோல் பாவனை செய்து, கடலின் நடுவே உள்ள துவாரகா நகரை அடைந்தார்.

Thursday, February 5, 2015

கண்ணன் கதைகள் (55) - கம்ஸ மோக்ஷம் / கம்ஸ வதம்

கண்ணன் கதைகள் (55) - கம்ஸ மோக்ஷம் / கம்ஸ வதம்,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்

கண்ணனின் அவதார நோக்கம் நிறைவேறும் அந்த நாளும் வந்தது. மறுநாள் அதிகாலையில், கம்ஸனின் ஆணைப்படி, மல்யுத்தத்திற்கான போட்டிகள் முரசொலி செய்து அறிவிக்கப்பட்டது. அதனைக் காண, பல அரசர்கள் வந்தனர். நந்தகோபரும் உப்பரிகைக்குச் சென்றார். கம்ஸனும் உப்பரிகைக்குச் சென்றான். கிருஷ்ணனும் பலராமனும் அழகிய ஆடை அலங்காரங்களுடன் மல்யுத்த களத்தை அடைந்தார்கள். அங்கு 'குவாலயாபீடம்' என்ற யானை அவர்களை வழிமறித்து நின்றது. வழிவிட்டுச் செல் என்று அந்த யானையைப் பணித்தார் கிருஷ்ணன். அப்போது யானைப் பாகனான 'அம்பஷ்டன்', கிருஷ்ணனைத் தாக்க யானையை ஏவினான். அந்த யானை, விரைந்து கிருஷ்ணனைப் பிடித்தது. அதனிடமிருந்து லாவகமாகத் தன்னை விடுவித்துக்கொண்ட கிருஷ்ணன், அதன் மத்தகத்தில் அடித்தார். பின்னர் அதன் காலடியில் மறைந்து, பிறகு சிரித்துக்கொண்டு வெளியே வந்தார். யானைக்கு அருகில் இருந்தாலும், அதன் பிடியில் அகப்படாமல் நழுவி, வெகுதூரம் ஓடி, விளையாட்டாய் விழுவது போல் கீழே விழுந்தார். அந்த யானையும் கிருஷ்ணனைத் தாக்க எதிரே வந்தது. உடனே கிருஷ்ணன், அதன் தந்தங்களை வேருடன் பிடுங்கி எறிந்தார். யானையைக் கீழே தள்ளி, அந்த தந்தங்களால் யானையைக் குத்திக் கொன்றார். தந்தத்தின் அடிப்பகுதியிலுள்ள உயர்ந்த முத்துக்களை எடுத்து, ஸ்ரீதாமனிடம் கொடுத்து, "இவற்றை அழகிய முத்து மாலையாகச் செய்து ராதையிடம் கொடு" என்று கூறினார். பிறகு, யானையின் இரு தந்தங்களையும், கிருஷ்ணனும் பலராமனும் தங்களுடைய தோளில் சுமந்துகொண்டு, மல்யுத்த களத்திற்குச் சென்றார்கள். அவர்களைக் கண்ட மக்கள், அவர்களுடைய தேககாந்தியால் அபகரிக்கப்பட்டு, ஆச்சர்யம்! என்றும், நந்தகோபன் மஹாபாக்கியசாலி என்றும், சிலர் யசோதை பாக்கியசாலி என்றும், வேறு சிலர், இல்லை இந்த நகரத்து மக்களாகிய நாம்தான் பாக்கியம் செய்தவர்கள், என்றும் உவகையுடன் கூவினார்கள். அந்நகர மக்கள் கண்ணனைப் பரப்ரம்மமாக அறியவில்லை. ஆயினும், முதன்முதலாய் அவரைப் பார்த்த அவர்கள், உடனேயே பாபம் நீங்கியவர்களாய் ஆனார்கள். கிருஷ்ணனுடைய செய்கைகளைப் பற்றிப் போற்றிப் பாடினார்கள்.

கம்ஸனுடைய ஆணையின்படி, மல்யுத்தத்தில் சிறந்த சாணூரன் என்ற மல்லன் கிருஷ்ணனையும், முஷ்டி யுத்தத்தில் சிறந்த முஷ்டிகன் என்பவன் பலராமனையும் சவாலுக்கு அழைத்தார்கள். பலவிதமான தாக்குதல்களுடன் யுத்தம் தொடங்கியது. "இது என்ன போட்டி? ஒரு புறம் அழகான சிறுவர்கள். மல்லர்களோ கடினமானவர்கள். இந்த யுத்தத்தை நாம் பார்க்க வேண்டாம், போய்விடுவோம்" என்று மக்கள் பேசிக் கொண்டார்கள். அப்போது கிருஷ்ணன், சாணூரனைத் தூக்கிச் சுற்றி உயிரிழக்கச் செய்தார். உயிரிழந்த அவனை பூமியிலே ஓங்கி அடித்தார். பலராமனும் முஷ்டிகனை அடித்துக் கொன்றார். மீதமிருந்த மல்லர்கள் அங்கிருந்து ஓடினர். திகைத்த கம்ஸன், முரசுகளையும், வாத்தியங்களையும் முழங்க விடாமல் தடுத்தான். உக்ரசேனன், நந்தகோபன், வசுதேவன் ஆகியோரைக் கொல்லும்படியும், கண்ணனையும் பலராமனையும் வெகுதூரத்திற்கப்பால் விரட்டும்படியும் காவலர்களுக்கு உத்தரவிட்டான். இதைக் கேட்டுக் கோபமடைந்த கண்ணன், உப்பரிகையில் வீற்றிருந்த கம்ஸனை நோக்கி சிங்கம்போலப் பாய்ந்து சென்றார். கம்ஸன் வாளெடுத்துச் சுழற்றினான். அவனை அசையவிடாமல் வலுவாகப் பிடித்து, அவனுடைய கேசங்களைப் பிடித்து இழுத்து, சிம்மாசனத்திலிருந்து தலைக்குப்புற கீழே சாய்த்துத் தள்ளினார். பூமியில் தள்ளி, அவன் மார்பு மேல் அமர்ந்து, அவனுடைய அங்கங்களை அடித்து நொறுக்கினார். கம்ஸனுடைய கிரீடம் சிதறுண்டு தரையில் உருண்டது. மயங்கி விழுந்த கம்ஸன் மாண்டு போனான். தேவர்கள் பூமாரி பொழிந்தனர். கம்ஸன் எப்போதும் கிருஷ்ணனையே மனதில் நினைத்திருந்தபடியால் மோக்ஷத்தை அடைந்தான்.

பிறகு கிருஷ்ணன், பெற்றோரான வசுதேவரையும், தேவகியையும் சிறையிலிருந்து மீட்டு, அவர்களை நமஸ்கரித்தார். கம்ஸனின் தந்தையான உக்ரசேனனை அந்த நாட்டிற்கு அரசனாக ஆக்கினார். யாதவ குலத்தினர் மிகவும் மகிழ்ந்தார்கள். தேவர்களின் குருவான பிருகஸ்பதியிடமிருந்து வித்தைகளைக் கற்ற உத்தவரை நண்பராக ஏற்றுக் கொண்டார். மிக்க மகிழ்ச்சியுடன் மதுரா நகரில் வசித்து வந்தார்.