Saturday, February 29, 2020

கண்ணுக்கினியன கண்டோம்- திரு வடமதுரை (மதுரா) விருந்தாவனம், கோவர்த்தனம் அடங்கியது - பகுதி 2

நாள் 2
பர்ஸானா(Barsana)

காலைச் சிற்றுண்டியை முடித்துக் கொண்டு, 7 மணிக்கு பர்ஸானா கிளம்பினோம்.
இந்தியில் ‘பர்ஸானா’ என்றால் பொழிதல் என்று பொருள். க்ருஷ்ண ரஸம் பொழிவதால் பர்ஸானா என்று பெயர்.  மதுராவிலிருந்து சுமார் 50 கி.மீ தொலைவிலும், கோவர்த்தனத்திலிருந்து 19 கி.மீ தொலைவிலும் பர்ஸானா அமைந்துள்ளது. இது பிருந்தாவனத்தின் உபவனங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

ராதாராணியின் தந்தை வ்ருஷபானு. தாயார் ஸ்ரீகீர்த்தி. பர்ஸானா, மன்னர் வ்ருஷபானுவின் தலைநகரமாகும். அதனால் விருஷபானுபுரி என்றும் அழைக்கப்படுகிறது. வ்ருஷபானுவின் பெண்ணான ராதாராணி பிறந்த இடம் ராவல்.  வளர்ந்த இடம் பர்ஸானா. ராவல் என்னும் இடத்திலிருந்து ராதாராணி பர்ஸானாவிற்கு இடம்பெயர்ந்தார். ராதாராணியின் அவதாரம் பற்றி ராவல் செல்லும்போது பார்ப்போம்.

பகவான் கிருஷ்ணர், ஸ்ரீ ராதாராணி மற்றும்  தனது நண்பர்களுடன் விளையாடி மகிழ்ந்த, லீலைகள் பல செய்த இடம் பர்ஸானா. ராதாராணி தனது தோழிகளுடன் பொழுதுபோக்கிய இடம். பிரம்மகிரி, விஷ்ணுகிரி என்று இரண்டு மலைகள் இங்கு உள்ளது. விருந்தாவன லீலைகலைக் காண விரும்பிய பிரம்மதேவர், பகவான் கிருஷ்ணர், ராதை, மற்றும் கோபியர்களின் பாததூளிகள் தன் மேல் விழவேண்டும் என்பதற்காக பர்ஸானாவிற்கு வந்து மலையாக மாறிக் காத்திருந்தார். பிரம்மகிரி என்ற இந்த மலையின் நான்கு முகடுகள், பிரம்மாவின் நான்கு தலைகளைக் குறிக்கும். பானுகர், விலாஸ்கர், தான்கர் மற்றும் மான்கர் என்று பெயர். பானுகர் என்ற மலையின் மீது வ்ருஷபானு தனது மாளிகையை அமைத்தார். ஆழ்வார்கள், ராதையை நப்பின்னை ரூபத்தில் அனுபவிக்கிறார்கள். ஸ்ரீ ஆண்டாளும்,”கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா” என்று திருப்பாவை 19ம் பாசுரத்தில் பாடுகிறாள்.

 


ராதாராணி வாழ்ந்த இந்த இடத்தில் தற்போது ஒரு கோவில் உள்ளது. மலையின்மேல் அழகான கோவில். இங்கு உள்ள ராதா ராணி கோயில் லடிலால்ஜி அல்லது ஸ்ரீ ஜி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. லட்லி லால் ஜி அல்லது ஸ்ரீ ஜி என்றால் அன்பான ராதா என்று பொருள். ஸ்ரீஜி என்ற ராதாராணி இந்தக் கோயிலில் எப்போதும் எங்கும் நிறைந்திருப்பாள்  என்று நம்பப்படுகிறது. கோயில் மலையில் இருப்பதால், கோயிலை அடைய அழகான படிக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளது. ஸ்ரீ ராதா ராணியின் கடாக்ஷம் பெற ஒருவர் சுமார் 108 படிக்கட்டுகள் ஏற வேண்டும். வயதானவர்கள் அல்லது முடியாதவர்களை அழைத்துச் செல்ல பைக் வசதியும் உண்டு. காரில் கோயிலை அடைய வேறொரு பாதை உள்ளது. லட்லிலால்ஜியை நன்கு தரிசித்தோம். பின்னர் மலைக்கோயிலின் மேலிருந்து பர்சானா கிராமத்தின் அழகையும் ரசித்தோம். அங்கிருந்தே தூரத்தில் 'மயூர் குடிர்' என்ற இடத்தையும் கண்டோம். 
ஸ்ரீ ராதா ராணியுடன் ஹோலி விளையாடுவதற்காக கிருஷ்ணர் பர்சானாவுக்கு வருவார் என்று கூறப்படுகிறது. இன்று வரை, இங்குள்ள உள்ளூர்வாசிகள் மற்றும்  நந்த்காவின் ஆண்கள், பர்சானாவின் பெண்களுடன் ஹோலி விளையாட வருகிறார்கள். இந்த விழாவைக் காண உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் வந்து ஹோலியை இங்கு கொண்டாடுகிறார்கள். ராதாஷ்டமி மற்றும் ஹோலி போன்ற பண்டிகைக் காலங்களில் இந்த விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இங்கு அனைவரும் ராதே ராதே என்றே கூறிக் கொண்டிருக்கிறார்கள்! பிச்சை எடுப்பவர்கள் கூட ராதே ராதே என்றுதான் கேட்கிறார்கள்! விரஜபூமியில் பிராணவாயுவிற்கு பதிலாக ராதே ராதே தான் உயிர்மூச்சு!!

பர்சானாவில் லஸ்ஸி(lassi) மிகவும் பிரசித்தம். கீழே இறங்கும்போது அனைவரும் லஸ்ஸி அருந்தினோம். மிகவும் ருசியாக இருந்தது. அங்குள்ள கடைகளில் சில பொருட்களையும் ஞாபகார்த்தமாக வாங்கிக் கொண்டோம்.  

பாவன் ஸரோவர் (Paavan Sarovar)

 
பாவன என்பதற்கு புனிதம் என்றும் ஸரோவர் என்றால் ஏரி என்றும் பொருள். ஆகவே, பாவன ரோவரில் குளிப்பவர்கள், தங்கள் பாவங்களிலிருந்தும் விடுபடுவார்கள் என்று நம்பப்படுகிறது. ஸரோவர் மிக அழகாக உள்ளது. ஒரு சிவன் கோவிலும் உள்ளது. கிருஷ்ணர், மாலையில் மேய்ச்சல் நிலங்களிலிருந்து திரும்பும் போது தனது மாடுகளை இங்கு அழைத்து வருவாராம். மாடுகளும் இந்த சரோவரின் குளிர்ந்த நீரைக்குடித்து, தாகத்தைத் தணித்துக் கொள்ளுமாம்.  ஒருமுறை நந்தகோபர், கங்கை, யமுனா மற்றும் சரஸ்வதி சங்கமத்தில் நீராட வேண்டும் என்பதற்காக பிரயாக்ராஜுக்கு செல்ல விரும்பினார். கிருஷ்ணரோ, அக்ஷய திரிதியையான மறுநாள் பயணம் செய்யுமாறு கூறினார். மறுநாள், நந்தர் அதிகாலையில் எழுந்து, குளிப்பதற்காக பாவன ஸரோவருக்குச் சென்றபோது, ​​ கறுப்பு நிறமுடைய ஒரு  நபரைக் கண்டார், அவர் யார் என்று நந்தர் கேட்க, அவர் தான் பிரயாக்ராஜின் ராஜா என்றும், யாத்ரீகர்கள் தனக்கு விட்டுச்செல்லும் பாவங்களைக் கழுவ, புனிதமான பாவன ஸரோவரில் நீராட வந்திருப்பதாகவும் கூறினார். தன்னுடன் மற்ற ஆறுகள், தீர்த்தங்களும்  வந்திருப்பதாகவும் கூறினார்.  இதைக் கேட்ட நந்தகோபர் ஆச்சரியப்பட்டார். அதனால் பிரயாகராஜ் செல்லாமல், அவர் பாவன ஸரோவரில் குளித்துவிட்டு தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டார். ஸரோவரின் வடக்கு கரையில் பாவனபிஹாரி கோயில் உள்ளது. ஸ்ரீ ராதாராணி தனது சகிகளுடன் இந்த ஸரோவரில் நீர் விளையாட்டுகளை விளையாடி மகிழ்வாளாம். புனிதமான இந்த ஸரோவரில் ப்ரோக்ஷித்துக் கொண்டு நந்தக்ராமம் புறப்பட்டோம்.

நந்தகாவ்(Nandgaon)

 
 


நந்தீஷ்வர மலையைச் சுற்றியுள்ள பகுதி நந்தகிராமம்/ நந்தகாவ் என்று அறியப்படுகிறது. இது பிருந்தாவனத்தின் உபவனங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. நந்த மகாராஜரின் தந்தை (பர்ஜன்யா) முன்பு தனது குடும்பத்தினருடன் வாழ்ந்த இடம். நந்தகோபரும், வ்ருஷபானுவும் நல்ல நண்பர்கள். கோகுலத்தில் உண்டான இடையூறுகள் காரணமாக நந்தகோபர் கோகுலத்திலிருந்து தனது நண்பர் உள்ள இடத்திற்கு அருகே உள்ள நந்தகிராமத்திற்கு இடம்பெயர்ந்தார். இந்த நந்தகாவ் கிராமம் நந்தீஷ்வர் மலையின் உச்சியில் அமைந்துள்ளது. கிருஷ்ணர் தனது தோழர்களுடன் இளமைப் பருவத்தில் லீலைகள் நடத்திய இடம். கிருஷ்ணரின் லீலைகலைக் காண விரும்பிய பரமசிவன், பகவானைப் பிரார்த்திக்க,  சிவனின் பிரார்த்தனையில் மகிழ்ந்த கிருஷ்ணர், பிருந்தாவனத்தில் இந்த இடத்தில் மலை வடிவில் தங்கும்படி கூறினார். இவ்வாறு சிவபெருமான் நந்தீஷ்வர மலையின் வடிவத்தை எடுத்து இங்கு நந்தகிராமத்தில், கிருஷ்ணரின் லீலைகளை அனுபவித்து வருகிறார்.

ஒரு காலத்தில் நந்தகோபரின் இல்லம் இருந்த இடத்திலேயே தற்போதைய கோயில் கட்டப்பட்டுள்ளது. மலையின் உச்சியில் இந்த கோயிலை ராஜா ரூப் சிங் கட்டியுள்ளார். இந்த இடம், மிகவும் ரம்மியமாக, அழகாக உள்ளது. நந்தகோபரின் மாளிகையையும், கோயிலுக்குள், கிருஷ்ணரும் பலராமரும் யசோதை மற்றும் நந்தகோபருக்கு அருகே இருப்பதையும் தரிசித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.

விருந்தா குண்ட்(Vrindakund)/விருந்தாதேவி கோயில் (Vrindhadevi temple)


நந்தகிராமத்திற்கு அருகிலேயே இருக்கிறது இந்த விருந்தா குண்ட். இங்கே விருந்தாதேவி கோயில் உள்ளது.  நாலாபுறமும் பச்சைப்பசேல் என்று இயற்கை எழில் கொஞ்சுகிறது.  





துளசியின் பெருமை அனைவரும் அறிந்ததே. துளசிக்கு பிருந்தா என்று ஒரு பெயர் உண்டு. வ்ருந்தா, வ்ருந்தாதேவி, வ்ருந்தேஸ்வரி என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறாள். விருந்தாதேவியின் தங்குமிடமாகும். மனதை மயக்கும் அழகுடன் விருந்தா என்கின்ற துளசிதேவி ஒளிர்கிறாள். ஒரு கிளியைக் கையில் பிடித்துக்கொண்டு வருகை தரும் அனைத்து மக்களிடமும்  புன்னகை பூக்கும் முகத்துடன் தரிசனம் தருகிறாள். விருந்தாதேவியின் ஆசீர்வாதம் இருந்தால் மட்டுமே ஒருவர் இந்த பூமியில் நுழைய முடியும் என்றும் தரிசனம் கிடைக்கும் என்றும் சொன்னார்கள். விருந்தாதேவியிடம் எல்லா ஸ்தலங்களிலும் நல்ல தரிசனம் கிடைக்கப் பிரார்த்தித்துக் கொண்டேன். துளசிதேவி  இந்த ஒரே ஒரு கோவிலில் தான் மூர்த்தி வடிவில் வழிபடப்படுகிறாளாம். 


பிருந்தாதேவி  இங்கிருந்து கொண்டுதெய்வீக தம்பதியரான ராதா மற்றும் க்ருஷ்ணருக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறாளாம்.  தனது செல்ல கிளிகளின் உதவியுடன், வ்ரஜ பூமியில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் பற்றிய தகவல்களை சேகரித்து, அதற்கேற்ப ராதா கிருஷ்ணரின் சந்திப்புக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறாளாம். இங்கே உச்சிகால ஆரத்தியைக் கண்ணாரக் கண்டு மகிழ்ந்தோம். மிக அழகாக, நேர்த்தியாக, பக்தியாக பூஜைகள் செய்யப்படுகிறது. இங்கு பச்சைக் கிளிகள், பல விதமான பறவைகள், அணில்கள் இனிமையாக சத்தமிட்டுக் கொண்டே இருக்கின்றன. இந்தக்கிளிகள் விரஜபூமியில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் விருந்தாதேவிக்குச் சொல்லுமாம்.
 

இங்கு உள்ள கிளிகள் இளம் பச்சையில் மஞ்சள் நிறம் கலந்த மாதிரி இருக்குமாம். அட! ஆமாம்! செல்லக்கிளியே! Pose குடும்மா! என்று கேட்டுப் பெற்ற இன்பம் 😍😊


 

கோயிலுக்கு முன்னால் விருந்தா குண்ட் மற்றும் கோயிலுக்குப் பின்னால் புனித குப்த குண்ட் உள்ளது. ராதை இருக்கும் இடத்துக்கு அருகிலேயே இருப்பதால், ராதா ஷ்யாம் காலையில் சந்திக்கும் இடமாம். விரஜாவில் குப்த குண்ட், ராதா குண்ட் மற்றும் பிருந்தாவனத்தில் உள்ள ராதா கோவிந்த் கோயில் ஆகிய மூன்றும் யோக பீடங்கள் என்றும், சந்திக்கும் இடங்கள் என்றும் கூறப்படுகிறது. நந்தகாவில் கிருஷ்ணருக்கு காலை உணவு சமைத்தபின், ராதிகா பர்சானாவில் உள்ள தனது இல்லத்திற்குத் திரும்பும்போது, ​​ முதலில் இங்கு வருகிறாள். மேய்ச்சலுக்காக வந்திருக்கும் ஸ்ரீ கிருஷ்ணரைச் சந்திக்கிறாள், அவர்களின் முதல் சந்திப்பு இந்த குப்த குண்டில்தான். இதனால் இது ஒரு சிறப்பு இடமாக இருக்கிறது. குப்த குண்டில் பராமரிப்புப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

இங்கே உள்ள அர்ச்சகர்களிடத்தில் மதிய உணவு தயார் செய்யச் சொல்லி ஏற்பாடு ஆகியிருந்தது. அருமையான உணவு. ஆத்மார்த்தமாக, மிகுந்த அன்புடன் பரிமாறினார்கள். 




அமைதியான, ரம்மியமான சூழல், மனதை மயக்கும் அழகுள்ள இயற்கை எழில் கொஞ்சும் இந்த இடத்தில் விருந்தாதேவியின் பிரசாதமான மதிய உணவை முடித்துக் கொண்டு, அந்த இடத்தை விட்டுச் செல்ல மனமின்றி,  தங்குமிடத்திற்குப் புறப்பட்டோம்.

சாயங்காலம் வேறு எங்கும் செல்லாததால், அவரவர்களாகவே, ப்ரேம் மந்திர், இஸ்கான் கிருஷ்ண பலராமர் கோயில் செல்ல உத்தேசித்து, சற்று இளைப்பாறினோம். பின்னர், ஆட்டோவில் ப்ரேம் மந்திர் சென்றோம்.

ப்ரேம் மந்திர்(Prem mandir) 



பிரேம் மந்திர் (அன்பின் கோயில்) பிருந்தாவனத்தில் உள்ள ஒரு இந்து கோயில். கிருபாலு மகாராஜ் அவர்களால் நிறுவப்பட்டது. ஜகத்குரு கிருபாலு பரிஷத் என்ற அறக்கட்டளை பராமரிக்கிறது. பிருந்தாவனத்தின் மிக அழகான மற்றும் நேர்த்தியான கட்டமைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.


பிருந்தாவனின் புறநகரில் 55 ஏக்கர் பரப்பளவில், பிரம்மாண்டமாக அமைந்துள்ள இந்த பிரேம் மந்திர் வளாகம், முற்றிலும் இத்தாலிய பளிங்குகளால் கட்டப்பட்டுள்ளது. 125 அடி உயரம், இரண்டு அடுக்கில் இந்த வெள்ளை மாளிகை கண்ணைக் கவர்கின்றது. நுழைவாயில் முதல் சுற்றியுள்ள தோட்டங்கள் மற்றும் பிரதான வளாகம் வரை, அழகு கவர்ந்திழுக்கிறது.



விஸ்தாரமான சுற்றுவட்டப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதை பகவான் கிருஷ்ணரின் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள், கோவர்த்தன மலையை உயர்த்துவது போன்ற காட்சிகளை சித்தரிக்கின்றன. கோயிலின் வெளிப்புற சுவர்களில் ஸ்ரீ கிருஷ்ணரின் லீலைகள் செதுக்கப்பட்டுள்ளது. ஒலி ஒளி நிகழ்ச்சி, பெரிய இசை நீரூற்று, காளிய நடனம் என்று அனைத்துமே மிக அற்புதமாக உள்ளது. இது தவிர, ஸ்ரீ கிருஷ்ண லீலைகள், கிருஷ்ணர் நிகழ்த்திய அற்புதங்கள், ராதாக்ருஷ்ணா மற்றும் சீதாராம் கோயிலுக்குள்ளே படங்களாகக் காணப்படுகின்றன. முதல் தளத்தில் ராதாக்ருஷ்ணா மற்றும் இரண்டாவது தளத்தில் சீதாராம் சன்னதிகள் உள்ளது. சேவித்துக் கொண்டோம்.


 


பிரேம் மந்திர் மிகவும் அழகாக மட்டுமல்ல, கிருஷ்ணரால் போதிக்கப்பட்ட அன்பின் சாரத்தையும் சித்தரிப்பதுபோல் உள்ளது.  கண்களுக்கு ஒரு விருந்து என்றே சொல்லலாம். பல்வேறு வண்ணங்களில் மாறிக்கொண்டே இருக்கும் கோவிலை ரசித்துக் கொண்டே இஸ்கான் கோவிலுக்கு செல்லப் புறப்பட்டோம். 



இஸ்கான் கிருஷ்ண பலராமர் கோயில் (Iskcon Krishna Balarama temple)


 

ஸ்ரீ கிருஷ்ண-பலராம் மந்திர் பிருந்தாவனத்தில் உள்ள ஒரு கௌடியா வைணவ கோயில். இது இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் உள்ள முக்கிய இஸ்கான் கோயில்களில் ஒன்றாகும். கோயிலின் நடுவே கிருஷ்ணர் மற்றும் பலராமர் சன்னதியும்,  ஒருபுறம் லலிதா மற்றும் விசாகாவுடன் ராதாக்ருஷ்ணர் சன்னதியும் உள்ளது. மற்றொரு சன்னதியில் நித்யானந்தாவுடன் சைதன்யா மகாபிரபு, மற்றும் பக்திவேதந்த சுவாமி பிரபுபாதா மற்றும் அவரது ஆன்மீக ஆசிரியர் பக்திசித்தாந்த சரஸ்வதி தாகுர் ஆகியோரின் மூர்த்திகளும் உள்ளது. பஜனையும் ஆரத்தியும் இங்கே பிரதானம். நன்கு தரிசனம் செய்து கொண்டு, மனநிறைவுடன் தங்குமிடம் திரும்பினோம்.

இரவு உணவு முடித்ததும், அடுத்த நாள் 'கோவர்த்தன பரிக்ரமா' செல்லப் போகிறோம் என்று யாத்திரை இயக்குனர் சொன்னார். மகிழ்ச்சியுடன், மனநிறைவுடன் படுக்கச் சென்றோம்.

-யாத்திரை தொடரும்-

2 comments:

  1. அழகாக ஒன்றையும் விடாமல் அதற்க்கு ஒப்பான படங்களுடன் நேர்த்தியாக எழுதி இருக்கீங்க.நேரில் பார்த்த உணர்ச்சி ஏற்பட்டது.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  2. ஆஹா... அற்புத தரிசனம்...

    துளசிதேவியின் கோவில் மனதை கவர்கிறது...

    ReplyDelete