Monday, March 2, 2020

கண்ணுக்கினியன கண்டோம்- திரு வடமதுரை (மதுரா) விருந்தாவனம், கோவர்த்தனம் அடங்கியது - பகுதி 3


நாள் 3 காலை (Day 3 morning)

காலையில் சீக்கிரமே எழுந்து, சிற்றுண்டியை முடித்துக் கொண்டு, கோவர்த்தன பரிக்ரமா செல்ல ஆயத்தமானோம். முதலில் சென்ற இடம் குஸும் ஸரோவர். இங்கிருந்து, பரிக்ரமாவை ஆரம்பிக்கப் போகிறோம் என்று யாத்திரை ஒருங்கிணைப்பாளர் கூறினார்.

 கோவர்த்தன பரிக்ரமா’விற்கான பொது விதிகள்:
1. கோவர்த்தன பர்வதத்தின்மேல் ஏற வேண்டாம். மலை புனிதமாக கருதப்படுகிறது.
2. நீங்கள் நடக்கும்போது/பரிக்ரமாவின் போது மலையை உங்கள் வலதுபுறத்தில் வைத்திருங்கள். மலைக்கு உங்கள் முதுகு அல்லது கால்களைக் காட்ட வேண்டாம்.
3. எந்தவொரு குண்ட்/குளத்திலும் உங்கள் கால்களைக் கழுவ வேண்டாம், பிரோக்ஷித்துக் கொள்ளவும். குளிக்க அனுமதி உண்டு.
4. எங்கிருந்தும் பரிக்ரமாவைத் தொடங்கலாம். தொடங்கிய இடத்திலேயே முடிக்கவேண்டும். நன்கு பிரார்த்தித்துக்கொண்டு பரிக்ரமாவைத் தொடங்கவும், பரிக்ரமாவை முடித்த பிறகு மீண்டும் பிரார்த்தனை செய்து நமஸ்காரம் செய்யவும்.

கோவர்த்தன பர்வதத்தின் கற்கள் மீதான நம்பிக்கை:
விரஜபூமியிடமிருந்து கற்களை எடுத்துச் செல்லக் கூடாது என்று சொல்வார்கள். விரஜபூமியிலிருந்து கற்களை எடுத்துச் செல்லும் மக்கள் அழிவுகளை சந்திப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

கைகூப்பித் தொழுதுவிட்டு, பிரார்த்தனைகளை மனதில் நினைத்து பரிக்ரமாவை ஆரம்பித்தோம். கோவர்த்தன பரிக்ரமாஎன்பது, கோவர்த்தன மலையை சுற்றி வலம்வரும் வட்டப்பாதை. மிகவும் பிரபலமானது. நாம் சங்கல்பித்துக் கொண்டு, 'परिक्रमा मार्ग/parikrama marg' என்ற பாதையில் எங்கிருந்தும் பரிக்ரமாவைத் தொடங்கலாம். தொடங்கிய இடத்திலேயே முடிக்கவேண்டும். மக்கள் பல்வேறு வகையான பரிக்ரமாக்கள் செய்வதையும் காணலாம். நாங்கள் அதை ஒரு இ-ரிக்‌ஷாவில் செய்தோம்.

பல கோயில்கள், குளங்கள், தோப்புகள் வழியாக செல்லும் முழு பரிக்ரம பாதை சுமார் 21 கி.மீ. இந்த பாதை பெரும்பாலான இடங்களில் மிகவும் சுத்தமாகவும் அகலமாகவும் இருந்தது. வழியெங்கும் ஏகப்பட்ட குரங்குகள் உள்ளது.  கிராமங்கள் வரும் போது தார் சாலையில் நடக்க வேண்டும்.

குஸூம் ஸரோவர்(kusum sarovar)

ஸரோவர் என்றால் ஏரி, குஸூம் என்றால் பூக்கள் என்று பொருள். இது கிருஷ்ணரின் வன யாத்திரைக்கான தலங்களில் ஒன்றாகும். இங்கே குஸூம் ஸரோவர் என்று அழைக்கப்படும் ஏரி, ஆழமான நீர் தேக்கத்திற்குத் தோதாக,  நான்கு பக்கங்களிலும் படிகளுடன் கீழ்நோக்கி செல்கிறது. ஸுமன் ஸரோவர் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏரி முன்பு அழகிய காடுகளாலும் பல்வேறு பூச்செடிகளாலும் சூழப்பட்டிருந்ததாம். ஸ்ரீ ராதாராணி, இங்கிருந்து பூக்களை சேகரித்துக்கொண்டு, தனது சகிகள் மற்றும் கிருஷ்ணர் ஆகியோருடன் சேர்ந்து பொழுது போக்குவார் என்று சொல்லப்படுகிறது. அஷ்டவக்ரர், இங்கே தவம் செய்தார் என்று கூறப்படுகிறது. நாரத முனி, இங்கே  குளித்தபின் யோகமாயா தேவியின் ஆசீர்வாதத்துடன் கோபியின் உடலை அடைந்து, ஸ்ரீ கிருஷ்ணரைத் தரிசித்தாராம்.

இந்த ஏரியின் பின்பகுதியில் அற்புதமான நினைவுச்சின்ன கட்டிடம் ஒன்றும் உள்ளது. மணற்கற்களால் ஆன இந்த கவர்ச்சியான கட்டிடம் ஜவஹர் சிங் தனது தந்தை சூரஜ் மால் நினைவாக அமைத்தாராம். கட்டிடத்தின் பின்னால் அழகான தோட்டம் உள்ளதாம். நாங்கள் அங்கு செல்லவில்லை. 

ஸ்ரீ ராதா வனவிஹாரி கோவில் (Sri Radha Banebihariji temple)


இந்தக் கோவில், குஸூம் ஸரோவரை ஒட்டியுள்ள மிக அழகான கோயில். சிறிய கோவர்த்தன் ஷிலா மற்றும் பல பிரபுக்களுடன் அருகிலேயே உள்ளது. ஸ்ரீ ராதா பன-பிஹாரியின் கோவில் மிக அழகாக இருக்கிறது. அருகிலுள்ள காடுகளில் இருந்து சேகரித்த பூக்களைக் கொண்டு, இங்கே ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ ராதாராணிக்குத் தலை பின்னி, பூக்களால் அலங்கரித்து விடுவாராம். இஸ்கான் அமைப்பால் பராமரிக்கப்படுகிறது. கட்டாயம் பார்க்க வேண்டிய கோவில்.

தான்காடி (Dan Ghati) 
லட்சுமி நாராயண் கோயில் அமைந்துள்ள சாலையில் உள்ளது. “டான்” என்றால் வரி வசூலிக்கப்படும் இடம். ராதையும் அவளது தோழிகளும், தங்கள் தயிர்ப்பானையை விற்பனை செய்வதற்காக இந்த வழியேதான் எடுத்து வருவார்களாம்.  அப்போது, கண்ணனும் அவரது நண்பர்களும், இந்த இடத்தைக் கடந்து செல்லும் கோபிகளை நிறுத்தி, வழிமறித்து, மேலே செல்ல விடாமல் தடுத்து, ராதையிடம் வரி கேட்பானாம். இந்த இடத்தைத் தாண்டி செல்ல வேண்டுமானால், வரி செலுத்த வேண்டும் என்பானாம். வெண்ணெய், பால், தயிர் ஆகியவற்றை வரியாகக் கேட்பானாம். கண்ணன்தான் பால், தயிர், வெண்ணைப்பிரியன் ஆயிற்றே!  வாங்காமல் விடுவானா?! வாக்குவாதம் செய்தால் தயிர்ப்பானையில் கல்லெறிந்து உடைத்து தயிர் குடிப்பானாம். ஆகவே இந்த இடத்திற்கு தான் காடி என்று பெயர் (வெண்ணைக்காக வரி வசூலிக்கும் இடம்). இந்த நிகழ்வுகளை நினைவுகூறும் வகையில் வஜ்ரநாபரால் டானி ராயா கோயில் கட்டப்பட்டது. தற்போது இந்த கோவிலில் வழிபாடு இல்லை.

ஸ்ரீ லக்ஷ்மி நாராயணர் கோவில் (Sri Lakshmi Narayan temple)


தான் காடிக்கு எதிரே அமைந்துள்ளது இந்த அழகிய லக்ஷ்மிநாராயண் கோயில். இது 1903 ஆம் ஆண்டில் ஒரு செல்வந்தரால் கட்டப்பட்டது. லக்ஷ்மி நாராயணரை ஸேவித்துக் கொண்டோம்.

மானசீ கங்கா (Manasi Ganga)

பகவானின் திருவடியிலிருந்து தோன்றிய புனித கங்கையில் நீராட வேண்டும் என்று நந்தகோபரும் யசோதையும் விரும்பினர். ஆனால் கண்ணனுக்கு ஆவர்களை விட்டுப் பிரிய மனம் இல்லை. அவர்களது விருப்பத்தைப் பூர்த்தி செய்ய கிருஷ்ணர் தனது மனதில் கங்கையை நினைத்து, தனது சங்கல்பத்தால் கங்கையை இங்கு கொண்டு வந்தார்
அதனால் அதற்கு மான்சி கங்கா என்ற பெயர் வந்தது. இந்த ஏரியைச் சுற்றி பல கோயில்கள் உள்ளது. சுற்றிலும் வீடுகள் உள்ளது. மானசீ கங்கையில் பிரோஷித்துக் கொண்டோம்.

சங்கர்ஷ குண்ட் (Sankarshan Kund)
வழியில் உள்ள சங்கர்ஷண குண்ட் சேவித்துக் கொண்டோம். கடந்த 50 ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட நிலையில் கிடந்த இந்த குளம், திரிதண்டி ஸ்ரீமன் நாராயண ராமானுஜ சின்ன ஜீயர் ஸ்வாமி மற்றும் அவரது சீடரான டாக்டர் ராமேஸ்வர் ராவ் ஆகியோரால் சீரமைக்கப்பட்டு, அக்டோபர் 1, 2012 அன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த சங்கர்ஷண மூர்த்தி, விரஜின் மிகப்பெரிய மூர்த்தி என்று கூறப்படுகிறது.

கோவிந்த் குண்ட் (Govind Kund)

விரஜ பூமியின் மற்ற இடங்களைப் போன்று, கோவர்த்தனத்தைச் சுற்றியும் நிறைய குண்டங்கள் (kund) குளங்கள் நிறைந்து இருக்கிறது. விரஜ பூமியில் 250 க்கும் மேற்பட்ட குண்ட்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். அனைத்தும் கிருஷ்ணருடன் தொடர்புடையதாகவே இருக்கிறது.  கண்ணன், கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து, கடும் மழையிலிருந்து, விரஜ மக்களைக் காத்தான். இந்திரன், தனது செயலுக்கு வருந்தி, மன்னிப்பு கேட்டு, கண்ணனை  சரணடைந்து, ‘கோவிந்த பட்டாபிஷேகம் செய்தான்.  கோவிந்த பட்டாபிஷேகம் நடந்த இடம்தான் இந்த கோவிந்த குண்ட். கண்ணனுக்கு இந்திரன் செய்த அபிஷேக தீர்த்தம் தேங்கி, ஒரு குளமாகியாது. இதுவே கோவிந்த குண்ட். கோவிந்தா என்ற திருநாமத்தைத் தினமும் உச்சரித்தால் மோக்ஷம் நிச்சயம். அப்படிபட்ட விசேஷமான கோவிந்த் குண்ட் சேவித்து, பிரோக்ஷித்துக் கொண்டோம்.  

முகாரவிந்த் (Mukaravind)  



 
முகார்விந்த் - இந்த முகாரவிந்த் கோயில் மிகவும் பிரபலமான ஒரு சிறிய கோவில். கோவர்த்தனமே இங்கு கிரிராஜ் என்று அழைக்கப்படுகிறார். திறந்த கோவிலில், சிலா ரூபமாக (ஒரு பெரிய பாறை உருவில்) உள்ளார். அமர்ந்த திருக்கோலத்தில் உள்ள  பகவானை வணங்கினோம். நம் கையாலேயே அபிஷேகம் செய்யலாம். கிரிராஜ பர்வதம் என்ற விசேஷமான அம்மலைக்கு ஜல அபிஷேகமும் செய்தோம். பக்தர்கள் பால் கொடுத்து/அபிஷேகம் செய்து வணங்குகிறார்கள். தினமும் விதம்விதமான அலங்காரம் உண்டு. கிருஷ்ணர் மலையைத் தூக்கும் காட்சி மலையின் உச்சியில் சித்தரிக்கப்பட்டுள்ளது. பகவானே கோவர்த்தன மலையாகி சேவை சாதிக்கும் இடம். சுற்றியுள்ள மலை பெரிய கற்களின் குவியல் போன்று இருக்கிறது. கண்ணன், விரஜ மக்கள் படைத்த விதவிதமான உணவை உண்டு தனது வாயால் அவற்றை சாப்பிடுவதைக் காண்பிக்கிறார். அதனாலேயே, இந்த இடம் முகாரவிந்தம் என்று பெயர் பெற்றது. ஸ்ரீ கிருஷ்ணன், இந்திரன் ஏவிய  கடும் மழையிலிருந்து விரஜ மக்களைக் காக்க, கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்துக்கொண்டு, 7 நாட்கள் நின்றார். அவருக்கு விரஜ மக்கள் 8 வேளை உணவு  படைத்தனர். 8x7- 56. இதுவே சப்பன் போக் (chappan(56) bhog) எனப்படுகிறது. குடை போன்று உள்ள இம்மரங்கள் இந்த பூமியில் மட்டுமே வளருமாம். ராதா க்ருஷ்ணா தங்கள் பொழுதுபோக்குகளின்போது இந்த மரத்தின் நிழலில் அமருவார்களாம்.


விரஜ பூமியில், மும்மூர்த்திகளும் மலை வடிவில் காட்சி தருகிறார்கள். பர்சானாவில் பிரம்மா பிரம்மகிரி மலையாகவும், நந்தகாவில் பரமசிவன் 'நந்தீஸ்வர' மலையாகவும், கோவர்த்தனத்தில், மகாவிஷ்ணு 'கோவர்த்தன' மலையாகவும் சேவை சாதிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



விரஜபூமியே விசேஷம். விரஜபூமியை தரிசிப்பதே புண்ணியம். 'குன்றமேந்தி குளிர் மழை காத்து, அன்று ஞாலமளந்த பிரானை'க் கண்ணாரக் கண்டு பரவசமடைந்தோம்.

அட்டுக் குவி சோற்றுப் பருப்பதமும்
தயிர் வாவியும் நெய்அளறும் அடங்கப்
பொட்டத் துற்றி மாரிப் பகை புணர்த்த
பொரு மா கடல்வண்ணன் பொறுத்த மலை
வட்டத் தடங்கண் மட மான் கன்றினை
வலைவாய்ப் பற்றிக் கொண்டு குறமகளிர்
கொட்டைத் தலைப் பால் கொடுத்து வளர்க்கும்
கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே! - பெரியாழ்வார் திருமொழி
முகாரவிந்த் கோயிலுக்கு அடுத்து, மலையின் உச்சியில் கோபால்ஜி கோயில் உள்ளது. தற்போது நாத் த்வாராவில் உள்ள ஸ்ரீநாத்ஜி மூர்த்தி முற்காலத்தில் இங்கே இருந்தாராம். சந்தியா ஆர்த்திக்குப் பிறகு, நாத் த்வாராவில் உள்ள ஸ்ரீநாத்ஜி இன்னும் தூங்குவதற்காக இங்கு வருகிறார் என்று கிராம மக்கள் நம்புகிறார்கள். நாங்கள் அக்கோயிலுக்குச் செல்லவில்லை. பரிக்ரமா செல்லும் பாதையில், அங்கங்கே சிறிய கற்கள் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டு வழிபடப்படுகிறது.

குன்றிலிருந்து கோவர்த்தனத்தின் தரிசனம் (view of govardhan from the top of a nearby hill)
அருகில் இருந்த ஒரு குன்றின் மேலிருந்து கோவர்த்தன கிரியைப் பார்க்கச் சென்றோம். நாங்கள் இருந்து அதன் வால் பகுதி என்று சொன்னார்கள்.



கிருஷ்ணதாச கவிராஜா கோஸ்வாமி என்பவர், தனது கவியான கோவிந்த லீலாம்ருதத்தில், கோவர்த்தன மலையை ஒரு மயில் போல சொல்கிறாராம்.  ராதா குண்ட் மற்றும் ஷ்யாம் குண்ட் அதன் கண்கள் என்றும், தான் காட்டி மற்றும் மானசீ கங்கை அதன் நீண்ட கழுத்து என்றும், முகரவிந்த் வாய், குசும் ஸரோவர் அதன் முகம்பூஞ்ச்ரி அதன் முதுகு, வால் மற்றும் இறகுகள் என்றும் கூறுகிறார். கோவர்த்தன மலை, பசு மற்றும் மயிலை ஒத்திருப்பதாக சொல்கிறார்கள். மேலிருந்து பார்க்கும்போது சற்று தூரத்தில் இரண்டு குண்டங்களும், ஒரு கோவிலும் தெரிந்தது. பூஞ்ச்ரி என்ற கிராமத்தில் உள்ள பூஞ்ச்ரி லௌடாஜி கோவிலாம். குண்டங்கள் முறையே அப்சரா குண்ட் மற்றும் நாவல் குண்ட்.
அப்சரா குண்ட் - கோவிந்த பட்டாபிஷேகத்தின் போது அங்கு வந்த அப்சரஸ் ஸ்த்ரீகள் நடனமாடிக் களித்த இடம்.  
நாவல் குண்ட் - முதலில் பூஞ்ச்குண்ட் என்று அழைக்கப்பட்டது. அதை புதுப்பித்த பரத்பூர் ராணியால் நாவல் குண்ட் என்று பெயர் மாற்றப்பட்டது. நாவல் என்றால் புதுமை.

அந்தக் குன்றின் மேல் இருந்த கோவிலில், நரசிம்மரையும் சேவித்துக் கொண்டு கீழே இறங்கினோம். வழியில் பூஞ்ச்ரி லௌடாஜி கோவிலை வெளியிலிருந்தே தரிசித்தோம்.
 



பூஞ்ச்ரி லௌடாஜி ஸ்ரீ கிருஷ்ணரின் நண்பர். ஒன்றாக மல்யுத்தத்தை பயின்றனர்.
கிருஷ்ணர் துவாரகாவுக்கு விரஜ பூமியை விட்டு வெளியேற வேண்டியிருந்தபோது, லௌடாவை உடன் வரச் சொன்னார். ஆனால் லௌடா விரஜ பூமியை விட்டு வெளியேற விரும்பவில்லை. கிருஷ்ணர் திரும்பும் வரை எதையும் சாப்பிடாமலோ, குடிக்காமலோ வாழ்வேன் என்றார். சாப்பிடாமலேயே ஆரோக்கியமான வாழ்க்கை வாழ கிருஷ்ணரும் ஆசீர்வதித்தார். ஆனால் அதன்பிறகு, கிருஷ்ணர் மதுராவுக்கு திரும்பி வரவில்லை. லௌடாவுக்காக ஒரு நாள் கிருஷ்ணர் திரும்பி வருவார் என்று மக்கள் நம்புகிறார்கள்.  

உத்தவ் குண்ட்(Udhav Kund) / உத்தவர் கோவில்(Udhdhavji மந்திர்)

இங்கேதான் உத்தவர், பல கிருஷ்ண கதைகளைச் சொல்லி, கோபியர்களின் தாபத்தைப் போக்குகிறார். அவர்களின் தாபத்தைப் போக்கி ஞானத்தை அளித்துவிட்டு, ஒரே நாளில் மதுரா திரும்ப வேண்டும் என்று நினைத்து வந்த உத்தவர், இங்கேயே 6 மாதம் தங்கிவிட்டார். இங்கு அழகான ஏரி(குண்ட்), மற்றும் உத்தவருக்கு கோயிலும் உள்ளது.

ராதா குண்ட்-ஷ்யாம் குண்ட் (Radha Kund-Shyam Kund)


மிகவும் விசேஷமான இடம். ராதையும் ராதா குண்டமும் கண்ணனுக்கு மிகவும் பிரியமானது. கண்ணன் காளை உருவத்தில் வந்த அரிஷ்டாசுரன் என்ற  அசுரனை வதம் செய்தார். அப்போது, கோபிகைகளும், கோபர்களும், கண்ணனிடம், “நீ காளைமாட்டைக் கொன்றதால் உனக்கு பசுஹத்தி தோஷம் வந்துவிட்டது”, நீ எங்களுடன் சேர வேண்டாம் என்று கூறினர். பிராயச்சித்தமாக என்ன செய்ய வேண்டும் என்று கண்ணன் கேட்க, அனைத்து நதிகளிலும், தீர்த்தங்களிலும் நீராடிவிட்டு வா என்கின்றனர். கண்ணனோ, நான் சென்று நீராடினாலும் நீங்கள் நம்ப மாட்டீர்கள், அதனால், புண்ணிய தீர்த்தங்களையும், நதிகளையும் இங்கேயே வரவழைத்து, உங்கள் முன்னே நீராடுகிறேன் என்று கூற, அவர்களும் சம்மதிக்கிறார்கள். உடனே கண்ணன் தனது காலால் பூமியை அழுத்தி, தீர்த்தங்களையும், நதிகளையும் அங்கே வரவழைக்கிறார். ராதையிடமும், அஷ்ட சகிகளிடமும் காமிக்க அவர்களோ, ஒன்றும் தெரியவில்லை என்று கூற, ஒவ்வொரு நதியும், தமதமது பெயர்களை, நான் கங்கை, நான் யமுனை எனக்கூறி ராதையையும் அவள் தோழிகளையும் நம்ப வைக்கிறார்கள். அவர்களும் கண்ணனை இந்த குண்டத்தில் நீராடி உன் தோஷத்தைப் போக்கிக்கொள் என்று கூற, கண்ணனும் அப்படியே செய்கிறார். அதனால் இதற்கு ஷ்யாம் குண்ட் என்று பெயர்.

இப்போது கண்ணன், கோபியரிடம், நீங்கள் அசுரனுக்கு சாதகமாகப் பேசியதால் உங்களுக்கு தோஷம் வந்துவிட்டது, அதனால் நீங்களும் இதில் நீராடுங்கள் என்று கூறுகிறார். அதற்கு அவர்கள், நீ நீராடி உன்னுடைய தோஷத்தைப் போக்கிய நீரில் நாங்கள் நீராட மாட்டோம் என்று கூறினார்கள். உடனே, நீளாதேவியான ராதையும் தனது சங்கல்பத்தால் அனைத்து நதிகளையும் வரவழைத்து ராதா குண்ட்டை ஏற்படுத்துகிறாள்.  உடனே கண்ணன், இங்கு வருபவர்கள், ராதா குண்டில்தான் நீராடுவார்கள், ஷ்யாம் குண்டில் நீராட மாட்டார்கள் என்று கூற, ராதை, ‘அவ்வாறு நடக்க விட மாட்டேன் என்று சொல்லி, தன்னுடைய கையில் அணிந்திருந்த வளையலால் , மடையை உடைத்து, இரண்டு குண்டங்களையும் ஒன்றாக ஆக்குகிறாள். கண்ணனும் தனது புல்லாங்குழலினால் மேலும் பெரிதாக உடைத்துவிட, இரண்டு குண்டங்களும் ஒன்றாக சேர்ந்து விடுகிறது. இந்த ராதா குண்ட்,ஷ்யாம் குண்ட் -ல் நீராடினால், பாவம் தொலையும், குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை பிறக்கும் என்று ஐதீகம்.     

இங்கு தரிசனம் செய்து, பிரோஷித்துக் கொண்டபின், கோவர்த்தன பரிக்ரமாவை முடித்து, மீண்டும் குஸூம் ஸரோவர் அருகில் பரிக்ரமா ஆரம்பித்த இடத்திற்கே சென்று, நமஸ்கரித்து, பிரார்த்தனை செய்து, அனைத்து இடங்களையும் நன்கு சேவித்த த்ருப்தியுடன், தங்குமிடம் திரும்பினோம்.

நாள் 3 மாலை(evening)

கோவிந்த்ஜி மந்திர் (Govindji Mandir)
இந்த கோவிந்த்ஜி கோயில், ஒரு காலத்தில் 7 அடுக்குகளைக் கொண்ட கோயிலாக இருந்தது. இக்கோயிலும் வஜ்ரநாபரால் கட்டப்பட்டது. மூலஸ்தானத்தில், கோவிந்த்ஜியும் ராதாராணியும் காட்சி தருகிறார்கள். கோயிலில் எட்டு கைகளில் எட்டு ஆயுதம் ஏந்திய யோகமாயா சந்நிதி உள்ளது. கல்லில் பொறித்த  கிருஷ்ணரின் பாதம் உள்ளது. அழகிய கட்டிடக்கலையுடன், தெய்வீகமாக உள்ள இந்தக் கோயில் கட்டாயம் தரிசிக்க வேண்டிய ஒன்று.

சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்பு ரூபா கோஸ்வாமியால் கண்டுபிடிக்கப்பட்டது. ஔரங்கசீப், தனது மாளிகையை விடப் பெரிதாக இக்கோயில் உள்ள காரணத்தால், இக்கோயிலை அழித்து ஒரே அடுக்குள்ளதாக செய்தார். அச்சமயம், கோவிந்த்ஜியை பிருந்தாவனத்திலிருந்து எடுத்துக்கொண்டு ஜெய்ப்பூரில் மறைத்து வைத்தார்கள்.  ஜெய்ப்பூர் மன்னரின் அரண்மனைக்கு வெளியே உள்ள கோவிலில் தற்சமயம் மூல கோவிந்த்த்ஜி உள்ளார்.

ரங்ஜி மந்திர் (Rangji Mandir)

ஸ்ரீ ரங்ஜி மந்திர், வடநாட்டில் நம் தென்னிந்தியப் பாணியில் பெரிய கோபுரத்துடன்  உள்ள கோயில். பிரதான நுழைவாயில் ராஜஸ்தான் பாணியில் உள்ளது. மற்ற கோபுரங்கள் தென்னிந்திய பாணியில் உள்ளது. கர்ப்பக்ரஹத்தில்,  ஸ்ரீவில்லிப்புத்தூரைப் போலவே, ஆண்டாள், ரங்கமன்னார், கருடாழ்வார் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். ஸ்ரீரங்கனாதர், ஸ்ரீனிவாசர், கோதண்டராமர் சன்னதிகளும் உள்ளன. ஆழ்வார்கள், ஆசார்யர்கள் சந்நிதிகள் உள்ளது. இத்திருக்கோயில் எம்பெருமானையும் நன்கு சேவித்தோம்.  ஆலய வளாகத்தில் அழகிய புஷ்கரணி ஒன்றும்  உள்ளது.

இக்கோயில், ஸ்ரீரங்கதேசிக ஸ்வாமிஜி அவர்களால் அமைக்கப்பட்டது. ஸ்ரீவில்லிப்புத்தூரில் அவதரித்த ஆண்டாள், தன் வாழ்நாளை விருந்தாவனில் கண்ணன் காலடியில் கழிக்கவேண்டும் என்று விரும்பிய விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் போல் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கோயிலில், தென்னாச்சார்ய சம்பிரதாயப்படி வழிபாடு, உற்சவங்கள் நடைபெறுகிறது. கோயில் பட்டாச்சாரியர்களும் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள்தான். விரஜபூமியே திவ்யதேசம்தான். எனினும், இந்த ஆலயம் ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு இணையாகக் கருதப்படுவதால், திவ்யதேசம் என்றே சொல்லப்படுகிறது.
 
கோபேஷ்வர் கோவில் (Gopeshwar temple)
கோபேஷ்வர் மகாதேவ் கோயில், பிருந்தாவனத்தில் அமைந்துள்ள மற்றொரு குறிப்பிடத்தக்க ஆலயம். சிவபெருமான் ஒரு முறை கிருஷ்ணருக்கும் கோபிகளுக்கும் இடையிலான ராஸலீலையைக் காண விரும்பினார். கிருஷ்ணரைத் தவிர வேறு எந்த ஆண்களும் இந்த நடனத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படாததால், பிருந்தாதேவி சிவபெருமானுக்கு அனுமதி மறுத்துவிட்டார். ராதாசகி லலிதா, யமுனா நதியில் குளிக்க சிவனிடம் கூறினார். சிவனும் யமுனையில் குளித்து, அழகான இளம் கோபியாக மாறி, ராஸலீலையைக் காண அனுமதிக்கப்பட்டார். புதிய “கோபி” யைக் கவனித்த கிருஷ்ணர், சிவபெருமானைப் பார்த்து புன்னகைத்து, அவருக்கு 'கோபேஸ்வரர்' என்று பெயரிட்டார். இதனால், இக்கோவிலில் உள்ள சிவலிங்கத்திற்கு  கோபியர்களைப் போல் அலங்காரம் செய்யப்படுகிறது. இன்றுவரை, சிவன் ராஸலீலையின் பாதுகாவலராகக் கருதப்படுகிறார்.  

நாங்கள் சென்றபோது அபிஷேகம் நடந்துகொண்டிருந்ததால், அலங்காரத்தைக் காண முடியவில்லை. சிவலிங்கத்தை வழிபட்டோம்.

யமுனை ஆர்த்தி (Yamuna aarthi)


கேசி காட் (kesi ghat) யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்கேதான் யமுனா ஆர்த்தி நடைபெறுகிறது. ஆர்த்தி அல்லது ஆரத்தி என்பது ஒரு இந்துக் கடவுளுக்கு முக்கியமான ஸம்ப்ரதாயம். யமுனை நதிக்குச் செய்யப்படும் இந்த ஆர்த்தி, விருந்தாவனில் தினமும் அந்தி வேளையில் நடைபெறுகிறது. இங்கு யமுனை தெய்வமாகவே கருதப்படுகிறாள். கங்கை மற்றும் பிற நதிகளின் கரையிலும் இதேபோன்ற ஆர்த்திகள் தினமும் நடைபெறுகின்றது.  யமுனையின் கண்கவர் மாலை ஆரத்தி ஒரு முக்கிய நிகழ்வாகும். ஆர்த்தியில் பிரதானமாக மந்திரங்கள், பூக்கள், இனிப்புகள், இசை, வாத்தியங்கள் முழங்க பூஜைகள் செய்யப்படுகிறது. ஸந்த்யா காலத்தில், தண்ணீரில் சிறிய விளக்குகளை மிதக்க விடுகிறார்கள். பிறகு அலங்கார ஆரத்தி எடுக்கிறார்கள். யமுனா ஆரத்தி மிகவும் அருமையாக இருந்தது. கேசி காட் முன் அமர்ந்து, யமுனா ஆரத்தியைக் காணும் வாய்ப்பு கிடைத்தது நாங்கள் செய்த பாக்கியம். கேசி காட்டில் உள்ள ஒரு படகில் இருந்துகொண்டும் யமுனாவின் மாலை ஆரத்தியைக் காணலாம்.  பிறகு நிதிவனம் நோக்கி நடந்தோம்.

நிதிவன் (Nidhivan)
விருந்தாவனத்தில் நிதிவனம் என்பது மர்மங்கள் நிறைந்த இடம். கிருஷ்ணர் இந்த இடத்திற்கு வருவது மட்டுமல்லாமல், ஒவ்வொரு இரவும் தனது ராஸலீலாவை இங்கு நடத்துகிறார் என்று நம்பப்படுகிறது. மாலை 7 மணிக்கு ஆர்த்திக்குப் பிறகு, அர்ச்சகர், நிதிவனின் கதவுகளை மூடுகிறார்.  யாருக்கும் அனுமதி இல்லை. நாள் முழுவதும் இங்கு காணப்படும் குரங்குகள் மற்றும் பறவைகளும் மாலையில் வளாகத்தை விட்டு வெளியேறுகின்றனவாம்.

நிதிவனுக்கு உள்ளே நான்கு கோவில்கள்/சந்நிதிகள் உள்ளன. பங்கே பிஹாரி சந்நிதி (பங்கே பிஹாரி தோன்றிய இடம்), 'ரங் மஹால்' என்கின்ற ஸ்ருங்கார் அறை, வம்சி சோரி ராதாராணி சந்நிதி (ராதை கிருஷ்ணராக வேஷம் தரித்த கோலம்), ஹரிதாஸ் ஸ்வாமி சமாதி. 'ரங் மஹால்' என்ற இந்த சன்னிதியில், கிருஷ்ணருக்கு ஒவ்வொரு இரவும் சந்தனத்தால் செய்யப்பட்ட கட்டிலில் படுக்கை விரித்து, படுக்கையறையில் தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு ஜாடி, இனிப்புகள், துணிமணிகள், ஒரு வேப்பங்குச்சி (பற்களைத் துலக்க) மற்றும் பான் (பாக்குடன் வெற்றிலை) வைக்கிறார்கள். காலையில் சன்னிதியின் கதவுகள் திறந்தவுடன், படுக்கையில் யாரோ தூங்கியிருப்பது போல் கலைந்தும், அதேபோல் ஜாடியில் உள்ள தண்ணீரும், வெற்றிலை பாக்கும்,வேப்பங்குச்சியும் உபயோகப் படுத்தப்பட்டது போலும் இருக்குமாம். இங்கு, இன்றளவும் ஒவ்வொரு இரவும் ராஸலீலை நடைபெறுவதாக நம்பப்படுகிறது. இந்த மர்மத்தைப் பார்க்க வேண்டும் என்று முயற்சித்தவர்களுக்கு, பார்வை/பேச்சு இழந்தோ, புத்தி ஸ்வாதீனமில்லாமலோ போய்விடுகிறதாம். அருகிலேயே வீடு இருப்பவர்கள் கூட, சந்நிதி கதவு மூடியதும், ஜன்னல்களை மூடி விடுவார்களாம். நிதிவனில் காணப்படும் துளசிச் செடிகள் கூட ஜோடியாக உள்ளன. எப்போதும் பசேலென்றே இருக்குமாம். இங்குள்ள  மரங்கள் வித்தியாசமாக  ஒன்றோடொன்று பிணைந்தே காணப்படுகின்றது. அவையே இரவில் கோபிகளாக மாறி ராஸலீலாவில் பங்கேற்கின்றன என்று கூறுகிறார்கள். விடிந்தவுடன், அவை மீண்டும் மரங்களாக மாறிவிடுமாம். இந்த மரங்களில் பூச்சிகள் கிடையாது, பறவைகள் கூடு கட்டுவதில்லை. புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர்களும் விஞ்ஞானிகளும் இங்கு வந்து, இந்த இடத்தின் மர்மத்தை விடுவிக்க முடியாமல், 'இது கடவுளின் இடம்' என்று கூறி சென்றுவிட்டது குறிப்பிடத்தக்கது. ராதாக்ருஷ்ணாவை நன்கு தரிசித்தோம். இரவில் சென்றதால் படங்கள் எடுக்கவில்லை.

ஆனந்தமயமான தரிசனங்கள் கிடைத்த திருப்தியில் தங்குமிடம் அடைந்து, இரவு உணவுக்குப் பின்,  விருந்தாதேவிக்கு நன்றி சொல்லிக்கொண்டு உறங்கச் சென்றேன்.

2 comments:

  1. மிக அருமை....


    விருந்தாவனத்தின் அழகையும்...பல இடங்களின் சிறப்பான தகவல்களையும் அறிந்துக் கொண்டேன்...

    அங்கு செல்லும் போது வழிகாட்டியாக படித்து செல்லும் அளவு பல செய்திகள்...

    ReplyDelete
  2. Very nice writing with eye catching pictures of the place - Great efforts- Please keep up the good work. Best wishes

    ReplyDelete