Thursday, February 20, 2014

அர்த்தபஞ்சகம் - அறிய வேண்டிய ஐந்து விஷயங்கள்

அர்த்தபஞ்சகம்


வைணவத்தில் பல தத்துவக் கோட்பாடுகள் சம்பிரதாயமாக இருக்கின்றன. அவற்றுள் ஒன்று 'அர்த்தபஞ்சகம்' என்பது. வைணவத்தின் ஐந்து பேருண்மைகள். ஆன்மா அறிய வேண்டிய ஐந்து நிலைகள்.  இந்த விஷயங்கள் என்ன என்று ஸ்ரீ பராசரபட்டர் அருளியுள்ள திருவாய்மொழி .தனியனால் அறிந்து கொள்ளலாம்.

"மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்".

இந்த ஐந்து விஷயங்கள்:

1. அடைய வேண்டிய பொருள்
2. அடைகிறவன்
3. அடைவதற்காக செய்ய வேண்டிய வேலை
4. அடைவதிலுள்ள இடையூறுகள்
5. அடைவதன் பலன்

இதை முறைப்படிப் பார்த்தால் முதலில் 'இறைநிலை'(பரமாத்ம ஸ்வரூபம்) எனப்படும் பரப்ரும்மம் எது என்பதை அறிய வேண்டும்.
.
அடுத்து, 'உயிர்நிலை'(ஜீவாத்ம ஸ்வரூபம்) என்கிற ஆத்மா பற்றி அறிய வேண்டும்.

மூன்றாவதாக, .'தக்க நெறி'(உபாய ஸ்வரூபம்) எனப்படும் நெறிநிலையான உபாயம் பற்றி அறிய வேண்டும்.

நான்காவதாக, .'ஊழ்வினை'(விரோதி ஸ்வரூபம்) என்கிற எதிரியைப்பற்றி அறிய வேண்டும்.

முடிவில், ஐந்தாவதாக, 'வாழ்வு'(புருஷார்த்த ஸ்வரூபம்) எனப்படும் முக்தியை உணர வேண்டும். இந்த ஐந்தையும் 'அர்த்த பஞ்சகம்' என்பர்.

1.  ' இறைநிலை'(பரமாத்ம ஸ்வரூபம்) - பரம், வியூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை எனப்படும். இறைவன் பரமபதத்தில் இருப்பது 'பரம்'. முத்தொழில் நடத்த ஸங்கர்ஷணன், பிரத்யும்னன், அநிருத்தன், வாசுதேவ நிலை 'வியூகம்'. பல அவதாரங்கள் .'விபவம்'. எள்ளுக்குள் எண்ணையைப் போல எங்கும் இருத்தல் 'அந்தர்யாமி'. ஆலயங்களில் விக்ரஹ ரூபம் 'அர்ச்சை'.

2.  'உயிர்நிலை'(ஜீவாத்ம ஸ்வரூபம்) - நித்ய, முக்த, பத்த,கேவல,முமுக்ஷுக்கள்.

வைஷ்ணவர்களுக்கு மூன்று வித தத்துவங்கள் முக்கியம். அவை ,சேதனம், அசேதனம், ஈஸ்வரன். சித், அசித், ஈஸ்வர தத்வங்கள் ஆகிய தத்வ த்ரயம்.

i). ஜீவாத்மா (சேதனன்): இது உடம்பினின்று வேறுபட்டது, அழிவில்லாதது. ஜீவாத்மா பரமாத்மாவிற்கே அடிமை. வேறு எவருக்கும் அடிமைப்பட்டதல்ல.

இதில் சேதனன் என்பவர் மூவர் - பத்தர், முக்தர், நித்யர். ஸம்ஸாரத்தில் மூழ்கி பலவிதமான ஸுகதுக்கங்களை அநுபவித்து, கர்மத்தில் உழல்பவர் பத்தர்.

இந்த ஸம்ஸார ஸம்பந்தத்தை விட்டு, கர்ம பந்தத்திலிருந்து விலகி எம்பெருமான் அனுபவத்தை பெற்று மகிழ்ச்சியுடன் இருப்பவர்கள் முக்தர்கள்-
ரிஷிகள், ஆழ்வார்கள்.

எம்பெருமானுக்கு எப்போதும் கைங்கர்யம் செய்பவர் நித்யர்கள். ஸ்ரீவைகுண்டத்தில் பகவானுக்கு கைங்கர்யம் செய்து கொண்டு இருக்கும் நித்யஸுரிகள்.

ii). அறிவில்லாத வஸ்து (அசேதனம்): சேதனனே இவைகளால் விளையும் பயனை அனுபவிப்பவன்.
அசேதனம் என்பது ப்ரக்ருதி, காலம், சுத்த ஸத்வம் என்று மூன்று வகைப்படும். ப்ரக்ருதியிலிருந்து ஆகாயம், காற்று, நீர், மண், நெருப்பு,  முதலியவை உண்டாகின்றன.நேற்று, இன்று, நாளை, என்று நம்மால் விவரிக்கப்படுவது காலம். சுத்த ஸத்வம் என்பது ரஜோ குணம், தமோகுணம் ஆகிய இரண்டும் இன்றி இருக்கும் ஸ்ரீவைகுண்டம்.

iii) பரமாத்மா : இறைவன்

கேவலர் -பகவத் அனுபவமின்றி ஆத்மாவிலே நின்றவன்
முமுக்ஷு- உயர்ந்ததான மோக்ஷத்தில் நாட்டம் கொண்டவர்களை முமுக்ஷுக்கள் என்பார்கள்.

3.  'தக்க நெறி'(உபாய ஸ்வரூபம்) - கர்ம, ஞான, பக்தி, பிரபத்தி, ஆச்சார்ய அபிமானம் முதலியன

4.  'ஊழ்வினை'(விரோதி ஸ்வரூபம்) - ப்ரக்ருதி சம்பந்தமே விரோதி.
விரோதி மூன்று. அவை ஸ்வரூப விரோதி, உபாய விரோதி, ப்ராப்ய விரோதி..மோக்ஷத்தை  அடைய இடையூறாக உள்ள தன்மை. ஸ்ரீமன் நாராயணனின்  திருவடியைப் பற்ற முடியாமல் தடுக்கும் இடையூறுகளான ஊழ்வினைகள்.

5.  'வாழ்வு'(புருஷார்த்த ஸ்வரூபம்) - நான்கு புருஷார்த்தங்கள்: தர்ம, அர்த்த, காம, மோக்ஷம்,(அறம், பொருள், வீடு., இன்பம்.) பகவதனுபவம்.

ஸ்ரீ வைஷ்ணவத்தில் மூன்று ரகஸ்யங்கள் சிஷ்யர்களுக்கு .உபதேசிக்கப்படும். முமுக்ஷுக்கள் அறிய வேண்டிய ரஹஸ்யங்கள் மூன்று. அவை: திருமந்திரம், த்வயம், சரம ஶ்லோகம்.

முப்பொருள், நாற்பொருள், ஐம்பொருள்  ஆகிய அர்த்த விசேஷங்களைக்கொண்ட  "அர்த்த பஞ்சகம்"  என்பதை மேலெழுந்தவாரியாகப் படிப்பதால் மட்டும் ஒருவர் .அறிந்து கொள்ள முடியாது. அதை, நீண்ட முயற்சிக்குப் பின் பகவத் க்ருபையால் அறிந்து கொள்ளவும், உணரவும் முடியும்.

அர்த்த பஞ்சகமான, ஐந்து அர்த்தங்களை, ஐந்து விஷயங்களை நமக்கு   ஓதும் இந்த  "திருவாய்மொழி" யாழினிசை வேதம் என்று சொல்லுகிறார் பராசர பட்டர்.

2 comments:

  1. அறிய வேண்டிய விஷயங்களை மிகவும் எளிதாக பட்டியலிட்டு புரியும் நடையில் அளித்ததிற்கு மிக்க நன்றி. மனதில் பதிய. இன்னும் பல தடவை படிக்க வேண்டும்.

    ReplyDelete
  2. It may be difficult to understand in one time reading it's easy while you read in second time

    ReplyDelete