Saturday, January 24, 2015

கண்ணன் கதைகள் (43) - பிரலம்பாசுர வதம்

கண்ணன் கதைகள் (43) - பிரலம்பாசுர வதம்,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

பலவித லீலைகளால் பிருந்தாவனத்திலுள்ள அனைவரையும் கண்ணன் மகிழ்வித்தான். ஒரு நாள் தன்னை மிக அழகாக அலங்கரித்துக்கொண்டு, பலராமனுடனும், இடைச்சிறுவர்களுடனும், பசுக்களுடனும் காட்டிற்குச் சென்றான். சிறுவர்கள் கையில் கோலுடன் நடக்க, பிருந்தாவனத்தின் அழகை ரசித்துக்கொண்டும், விளையாட்டாய்ப் பேசிக்கொண்டும் 'பாண்டீரகம்' என்னும் ஆலமரத்தடிக்குச் சென்றார்கள். அப்போது, கம்ஸனால் ஏவப்பட்ட 'பிரலம்பன்' என்ற அசுரன், கண்ணனைக் கொல்லும் நோக்கத்துடன், இடையன் வேடத்தில்அங்கே வந்தடைந்தான்.

அவன் எண்ணத்தை அறிந்த கண்ணன், அறியாதது போல் அவனுடன் நட்பு கொண்டான். அம்மரத்தடியில் இடையர்களுடன் விளையாட்டாக ஒருவருடன் ஒருவர் யுத்தம் செய்யத் தொடங்கினார்கள். கண்ணன் தலைமையில் ஒரு குழுவும், பலராமன் தலைமையில் ஒரு குழுவுமாக, இடையர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து கொண்டார்கள். கண்ணன், பிரலம்பாசுரனைத் தன்னுடைய குழுவிலேயே இருக்குமாறு செய்தான்.

அந்த விளையாட்டில், தோற்றவர்கள் வெற்றி பெற்றவர்களைத் தூக்க வேண்டும் என்பது நிபந்தனை. அதன்படி, ஸ்ரீதாமா என்ற கண்ணனின் நண்பனை, பக்தர்களின் அடிமையான கண்ணன் தூக்கினான். இவ்வாறு எல்லா இடையர்களும், தோற்றவர்கள் வெற்றி பெற்றவர்களைத் தூக்கினார்கள். அப்போது, தோற்ற பிரலம்பாசுரன், ஜயித்த பலராமனைத் தூக்கிக் கொண்டு, வெகுதூரம் சென்றான். வெகுதூரத்திற்கப்பால் செல்லும்போது, பலராமன் தன் முழு பலத்தாலும் அவனை அழுத்தினார். உடனே அவன் பயங்கரமான அசுர உருவத்தை எடுத்துக்கொண்டான். அதைக் கண்டு பலராமனும் சிறிது பயந்து, பின்னர் வெகுதூரத்தில் தெரியும் கண்ணனின் முகத்தைக் கண்டு பயத்தை விட்டார். அசுரனின் தலையைத் தன் முஷ்டியால் அடித்து நொறுக்கினார். அசுரனைக் கொன்றுவிட்டு வரும் பலராமனைக் கண்ணன் தழுவிக் கொண்டான். இருவர் மீதும் தேவர்கள் பூமாரி பொழிந்தனர். 

No comments:

Post a Comment