Sunday, January 25, 2015

கண்ணன் கதைகள் (44) - கண்ணன் காட்டுத்தீயை உண்ணுதல் / பிருந்தாவனத்தின் பருவங்கள் / குழலோசை


கண்ணன் கதைகள் (44) - கண்ணன் காட்டுத்தீயை உண்ணுதல் / பிருந்தாவனத்தின் பருவங்கள் / குழலோசை, கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

பிரலம்பனை வதம் செய்தபின், ஆயர்களுடன் விளையாடிக்கொண்டு கண்ணன் மகிழ்ச்சியாய் இருந்தான். அப்போது, பசுக்கள் புல்லை மேய்ந்துகொண்டே 'ஐஷீகம்' என்னும் காட்டை அடைந்தன. வெப்பம் மிகுந்த காட்டில் கானல் நீரைத் தண்ணீர் என நினைத்த பசுக்கள் தாகத்தினால் தவித்தன. பசுக்களைத் தேடிக்கொண்டு வந்த சிறுவர்கள், வழிதப்பிய பசுக்களைப் பார்த்து, அவற்றை அழைத்துச் செல்ல அவைகளின் அருகே சென்றார்கள். அப்போது நாலாபுறமும் காட்டுத்தீ சூழ்ந்தது. அதனால் துன்பமடைந்த அவர்கள், காப்பாற்ற வேண்டும் என்று தீனமாய்க் கூக்குரலிட்டனர். காட்டுத்தீ வேகமாக சூழ்ந்தது. பசுக்களும், சிறுவர்களும் வெப்பம் தாங்க முடியாமல் கூச்சலிட்டனர். கண்ணன் அவர்களைக் காக்க எண்ணம் கொண்டான். கண்ணன் அவர்களிடம்," கவலைப்பட வேண்டாம், சிறிது நேரம் கண்ணை மூடிக்கொள்ளுங்கள்" என்று கூற அனைவரும் அப்படியே செய்தனர். அப்போது தனது யோகசக்தியால், கண்ணன் அத்தீயை உண்டான்.

பின்னர் அவர்களிடம் கண்ணைத் திறக்கச் சொன்னான். என்ன ஆச்சர்யம்! கண்ணைத் திறந்தபோது மீண்டும் 'பாண்டீரம்' என்னும் ஆலமரத்தடியில் இருந்தனர். 'தீ எங்கு சென்றது?' என்று அதிசயித்தனர். அங்கே காட்டுத் தீ இல்லை. அங்கு பூத்திருந்த பாதிரி முதலிய மலர்களால் மட்டும் வெய்யில் காலம் என்று அறியப்பட்டது. ஆனால் வெயிலின் தாபம் தெரியவில்லை. அந்த இடமே மிகவும் குளிர்ந்ததாக இருந்தது. கோபர்கள் அளவற்ற ஆனந்தத்துடன் கண்ணனைத் துதித்து, வீடு திரும்பினார்கள். இவ்வாறு பலவிதமான அதிசயங்களைச் செய்துகொண்டு, சிறுவர்களுடன் அக்காட்டில் திரிந்து விளையாடினான்.ஆயர் சிறுவர்கள் கோடைக்காலத்தை யமுனையாற்றங்கரையிலேயே கழித்தார்கள்.

கண்ணன் கதைகள் (44) - கண்ணன் காட்டுத்தீயை உண்ணுதல் / பிருந்தாவனத்தின் பருவங்கள் / குழலோசை, கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

கோடைக்காலம் முடிந்தது. கண்ணனின் நிறத்துக்கோப்பான மேகங்கள் வானில் நிறைந்தது. மின்னல்கள் பிரகாசித்தன. எல்லா மக்களுக்கும் மகிழ்ச்சியை அளிக்கும் மழைக்காலம் வந்தது. சிறுவர்கள் மழைக்காலத்தை கோவர்த்தன மலைக்குகைகளில் கழித்தார்கள். அழகிய மயில்களின் அகவல்கள் கேட்டன. மரமல்லிகையும், நீபபுஷ்பங்களும் பூச்சொரிந்தன. தெளிந்த நீருள்ள ஓடைகள், சரத்காலத்தை அறிவித்தன. பசுக்களை நல்ல பசுமையான புற்களை மேய்ந்து மகிழ்ந்தன.

காயாம்பூ போன்ற நிறமுள்ள கண்ணனின் திருமேனி அனைவரையும் ஆனந்திக்கச் செய்தது. அவனது அழகிய வடிவைக் கண்ட கோபிகைகள் மிகுந்த மோகத்தை அடைந்தார்கள். கண்ணன் மாடுகளை மேய்க்கச் சென்றபொழுது, வெகு தூரத்தில் இருந்து கேட்கும் தங்கள் குழலோசையைக் கேட்டு மகிழ்ந்தனர். கண்ணனுடைய விளையாட்டுக்களைப் பற்றிய கதைகளையே பேசி ஆனந்தித்தனர். புல்லாங்குழல் அனுபவித்த தங்கள் அதர அம்ருதத்தின் மிச்சத்தை ஒரு தடவையாவது அனுபவிப்போமா? என்று ஏங்கித் தவித்தனர். இவ்வாறு கோபிகைகளின் மனம் கலக்கமுற்றது. கண்ணனிடம் வைத்த அன்பால் அவர்கள் தினமும் செய்யும் காரியங்களையும் அறியாதவர்களாக ஆனார்கள்.

கானகம் சென்றவுடன், மரத்தடியில், கால்களை மாற்றி நின்று கண்ணன் புல்லாங்குழலை ஊதுவான். அந்தக் குழலின் இனிமையான ஓசை வானில் உள்ள அப்சரஸ் கூட்டங்களை மயங்கச் செய்தது. பசுக்கள், பறவைகள் முதலியன செயலற்று நின்றன. கற்களையும் உருகச் செய்தது. கோபிகைகள் தொலைவில் கேட்கும் வேணுநாதத்தில் மெய்மறந்தனர். மிருகங்களையும், பசுக்களையும், தங்கள் தொடர்பு ஏற்பட்ட கானகத்தையும் மிக்க பேறு பெற்றவை என்று கோபியர்கள் எண்ணினார்கள்.

No comments:

Post a Comment