Monday, January 26, 2015

கண்ணன் கதைகள் (45) - கோபிகைகளின் ஆடைகளை அபகரித்தல் / கோபிகா வஸ்த்ராபஹரணம்

கண்ணன் கதைகள் (45) - கோபிகைகளின் ஆடைகளை அபகரித்தல் / கோபிகா வஸ்த்ராபஹரணம்,கண்ணன் கதைகள், குருவாயூரப்பன் கதைகள்,

கண்ணனின் அழகிய வடிவைக் கண்ட கோபிகைகள் மிகுந்த மோகத்தை அடைந்த கோபிகைகளின் மனம் சஞ்சலமுற்றது. அவர்கள் கண்ணனுக்கு சேவை செய்ய விரும்பி, யமுனா நதிக்கரையில் கூடி, மணலால் பார்வதிதேவியைப்போன்ற பிம்பம் செய்து பூஜித்தனர். கோபிகைகள், கண்ணனின் திருநாமத்தையும், கதைகளையும் கூறிக்கொண்டே யமுனாநதிக்கு வந்தார்கள். பிறகு, நந்தகோபனின் மகன் கோபாலனே கணவனாய் வரவேண்டும் என்று பூஜித்து வேண்டினார்கள். இவ்வாறு ஒரு மாதம் விரதமிருந்தார்கள்.

கண்ணன் அவர்களிடம் கருணை கொண்டு, அவர்களை ஆசீர்வதிக்க யமுனைக் கரைக்குச் சென்றான். விரதம் முடிந்ததும், கோபிகைகள், தங்கள் ஆடைகளைக் களைந்து, கரையின்மேல் வைத்துவிட்டு, யமுனையில் விளையாடத் தொடங்கினார்கள். யமுனைக் கரைக்குச் சென்ற கண்ணன் அந்த கோபிகைகளின் ஆடைகளை எடுத்துக்கொண்டு அருகிலுள்ள மரத்தின் மீது ஏறினான்.

குளித்துவிட்டு வந்த கோபிகைகள், எதிரே கண்ணனைக் கண்டு, வெட்கத்துடன் தலைகுனிந்து நின்றார்கள். "பெண்களே! இங்கு வந்து உங்கள் ஆடைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று புன்சிரிப்புடன் கண்ணன் கூறினான். கோபிகைகள் வெட்கத்தினால் வெளியேவர முடியாமல் திகைத்தனர்.
‘செந்தாமரைக் கண்ணனே! தங்களுக்கு சேவை செய்ய வந்த எங்களை ஏன் கஷ்டப்படுத்துகிறீர்? எங்கள் ஆடைகளைக் கொடுக்கவேண்டும்’ என்று கோபிகைகள் வேண்டினார்கள். கண்ணனோ புன்சிரிப்பையே கோபிகைகளுக்குப் பதிலாகத் தந்தான்.

அவர்கள் கரையேறி, இரு கைகளையும் கூப்பி வணங்கினார்கள். தன்னை சரணடைந்ததால், கண்ணன் அவர்களுக்கு ஆடைகளை அளித்து, "நீங்கள் ஆடையில்லாமல் குளித்த பாபம் நீங்கவே இவ்வாறு செய்தேன்" என்று உபதேசமும் செய்தான். மேலும், "உங்கள் எண்ணத்தை அறிந்து கொண்டேன். நதியின் மணல்குன்றுகளில், நிலா வெளிச்சத்துடன் கூடிய இரவில் நீங்கள் வேண்டியது கிடைக்கும்" என்று கூறினான். தேனினும் இனிய அந்த சொற்களைக் கேட்ட கோபியர்கள், கண்ணனுடைய தாமரை முகத்தைத் திரும்பிப் பார்த்தபடியே மெதுவே வீடு சென்றார்கள். இவ்வாறு கருணையுடன் அனுக்ரஹம் செய்து கோபிகைகளுக்கு ஆனந்தத்தை அளித்தான்.

No comments:

Post a Comment