Thursday, August 3, 2017

திருப்புட்குழி - ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் திருக்கோயில் / கண்ணுக்கினியன கண்டோம் - 40

108 திவ்யதேசம், தொண்டைநாடு திவ்யதேசம், கண்ணுக்கினியன கண்டோம்

108 திவ்யதேசம், தொண்டைநாடு திவ்யதேசம், கண்ணுக்கினியன கண்டோம்
திருப்புட்குழி 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். தொண்டைநாடு திவ்யதேசங்களில் ஒன்றான இந்த க்ஷேத்ரம், காஞ்சியிலிருந்து சுமார் 11 கி.மீ. தூரத்தில் உள்ளது. 

மூலவர்: விஜயராகவப் பெருமாள்

தாயார்: மரகதவல்லித் தாயார், தனிக்கோயில் நாச்சியார்.
தீர்த்தம்: ஜடாயு புஷ்கரிணி
விமானம்: விஜயகோடி (வீரகோடி )விமானம்
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார் 2 பாசுரங்கள் - 1115, 2674

அலங்கெழு தடக்கை யாயன் வாயாம்பர் கழியுமா லென்னுள்ள மென்னும்
புலங்கெழு பொருநீர் புட்குழி பாடும் போதுமோ நீர்மலைக் கென்னும்
குலங்கெழு கொல்லி கோமள வல்லிக் கொடியிடை நெடுமழைக் கண்ணி
இலங்கெழில் தோளிக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே - திருமங்கையாழ்வார்

ஸ்தல வரலாறு:

ராமர் சீதையைத் தேடிச்செல்லும் வழியில் இங்கு தங்கியதாகவும், ஜடாயுவுக்கு மோக்ஷமளிக்க, பூமியைக் கீறி தீர்த்தத்தை உண்டாக்கி, ஜடாயுவுக்கு ஸம்ஸ்காரம் செய்ததால், திரு புள்குழி என்று பெயர் ஏற்பட்டதாக ஸ்தல வரலாறு. மூலவர் தன் தொடையின் மீது ஜடாயுவை வைத்துக்கொண்டு, ஸம்ஸ்காரம் செய்வதைப்போல் எழுந்தருளி சேவை சாதிக்கிறார். அந்த சிதையின் சூடு  தாங்க முடியாமல் ஸ்ரீதேவியும் பூதேவியும் இடம்வலம் மாறி எழுந்தருளியுள்ளனராம். ராமபிரானே இங்கு ஜடாயுவுக்கு அந்திம க்ரியை செய்த தலமானதால், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வரும் மக்கள் ஏராளம்.

பொதுவாக பெருமாள் கோவில்களில் தாயார் சன்னதி பெருமாளுக்கு வலதுபுறம் இருக்கும். ஆனால் இங்கு தாயார் சன்னதி பெருமாளுக்கு இடது புறமும், ஆண்டாள் சன்னதி பெருமாளுக்கு வலதுபுறமும் அமைந்துள்ளது மற்றுமோர் விசேஷம். தாயார் சன்னதியிலும், மற்ற இடங்களிலும் அழகாகக் கோலங்கள் வரையப்பட்டுள்ளது.  வசந்த மண்டபம் மிகத் தூய்மையாகப் பராமரிக்கப்பட்டிருக்கிறது.
108 திவ்யதேசம், தொண்டைநாடு திவ்யதேசம், கண்ணுக்கினியன கண்டோம்

108 திவ்யதேசம், தொண்டைநாடு திவ்யதேசம், கண்ணுக்கினியன கண்டோம்
ஸ்தல விசேஷம்:

ராமானுஜரின் குருவான யாதவப்ரகாசர், தனது சிஷ்யர்களுக்கும், ராமானுஜருக்கும் வேதாந்தங்களைக் கற்பித்த இடம்.

வறுத்த பயிறை முளைக்க வைக்கும் தாயார்:
குழந்தைப்பேறு வேண்டும் பெண்கள், பச்சைப்பயறை மடப்பள்ளியில் கொடுத்து வறுத்துத் தரச் சொல்லி கொடுப்பார்களாம். பின்னர், தாயார் சன்னதிக்குச் சென்று, பட்டர் அதில் தீர்த்தத்தினைத் தெளிப்பார். நனைத்த பயறை மடியில் கட்டிக்கொண்டு அங்கேயே தங்கி புஷ்கரிணி தீர்த்தத்தை நாள் முழுவதும் தெளித்துக் கொண்டே இருப்பார்களாம். மறுநாள் விடிந்ததும், தாயார் சன்னதிக்குச் சென்று அந்தப் பயறை சன்னதியில் சமர்ப்பிக்கிறார்கள். வறுத்த பயறு முளைத்திருந்தால் குழந்தைப்பேறு நிச்சயம் என்பது நம்பிக்கை. அதனால் மரகதவல்லி தாயார் ‘வறுத்த பயிறை முளைக்க வைக்கும் தாயார்’ என அழைக்கப்படுகிறார். குழந்தை பிறந்ததும், குழந்தையோடு வந்து தாயாரை சேவிப்பார்களாம்.

இத்தலத்தில் குதிரை வாகனம் ஒரு அதிசயமாகும். உண்மையான குதிரை போலவே அசையும் உறுப்புக்களைக் கொண்டது. பெருமாளுக்காகவே இதை ஓர் தச்சர் செய்ய, அரசன் அதே மாதிரி தனக்கும் ஒன்று செய்யச் சொல்ல, தச்சர் விஜயராகவனைத் தவிர வேறு யாருக்கும் வாகனம் செய்து கொடுப்பதில்லை என்ற உறுதியோடு உயிர் துறந்தாராம். அதனால் திருவிழாவில் எட்டாம் நாளன்று, குதிரை வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி, தச்சரின் பெயர் கொண்ட வீதிக்கு எழுந்தருளி, அவரது வாரிசுகள் பெருமாளுக்கு மரியாதை செய்கின்றனர்.

உற்சவங்கள்: பிரம்மோற்சவம், குதிரை வாகனம், தெப்போற்சவம், ஸ்ரீ ராம நவமி, வசந்த உற்சவம், வைகுண்ட ஏகாதசி.

கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 7 - 12, மாலை 4 - 7

வழி: சென்னை பெங்களூர் மார்க்கத்தில் சென்னையிலிருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில் உள்ளது. காஞ்சியிலிருந்து 11 கி.மீ. தூரத்தில் உள்ளது. பாலு செட்டியார் சத்திரம் என்ற ஊரிலிருந்து செல்லும் சென்னை - வேலூர் சாலையில் அமைந்துள்ளது. சென்னை, காஞ்சியிலிருந்து பேருந்து வசதிகள் உண்டு.

முகவரி:
ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் திருக்கோயில்

திருப்புட்குழி - 631 551
பாலு செட்டியார் சத்திரம் வழி
காஞ்சிபுரம் மாவட்டம் 



No comments:

Post a Comment