Tuesday, August 8, 2017

திருமழிசை ஸ்ரீ ஜெகன்னாத பெருமாள் திருக்கோயில் / கண்ணுக்கினியன கண்டோம் - 43

சென்னையை அடுத்து இருக்கும் சிறிய கிராமம் திருமழிசை. சென்னையிலிருந்து 25 கிமி தொலைவில் உள்ளது. திருமழிசையாழ்வாரின் அவதார ஸ்தலம். அதனால் ஊருக்கும் அதே பெயர். அபிமான ஸ்தலம்.

திருமழிசை ஸ்ரீ ஜெகன்னாத பெருமாள் கோயில்:
மூன்று ஜகன்னாத க்ஷேத்ரங்களில் இது 'மத்திய ஜகந்நாதம்' என்று சிறப்புடன் அழைக்கப்படுகிறது. வடக்கே உள்ள பூரி, உத்திர ஜகன்னாதம் என்றும் திருப்புல்லாணி தக்ஷிண ஜகன்னாதம் என்றும் சொல்வார்கள். பூரியில் நின்ற திருக்கோலத்திலும், திருப்புல்லாணியில் ஸயன திருக்கோலத்திலும், திருமழிசையில் வீற்றிருந்த திருக்கோலத்திலும் பெருமாள் சேவை சாதிக்கிறார். ஜகன்னாதப் பெருமாள் வீற்றிருந்த கோலத்தில் ருக்மணி ஸத்யபாமா ஸமேதராக சேவை சாதிக்கிறார். தாயாரின் திருநாமம் திருமங்கைவல்லித் தாயார். தனிக்கோயில் நாச்சியார்.

இந்த ஸ்தலத்தில்தான் திருமழிசையாழ்வார், திருமாலின் சக்ராயுதத்தின் அம்சமாக அவதரித்தார். திருமழிசையாழ்வாரின் அவதார ஸ்தலம் என்பதால் அவருக்கும் இங்கே தனி சன்னதி இருக்கிறது. இவர் சமணம், சாக்கியம், சைவம் முதலிய மதங்களைக் கற்று, சிவவாக்கியர் என்ற பெயரில் சைவத்தை முதலில் பின்பற்றி, பிறகு வைணவத்திற்கு வந்தார்.

'சாக்கியம் கற்றோம், சமணம் கற்றோம், சங்கரனார் ஆக்கிய ஆகமநூல்ஆராய்ந்தோம்; பாக்கியத்தால் வெங்கட்கரியனை சேர்ந்தோம்' என்று அவரே பாடியுள்ளார்.

இவரின் சொல்வன்மையைக் கண்ட சிவபெருமான், இவருக்கு 'பக்திசாரார்' எனப் பெயரிட்டாராம். திவ்யப்ரபந்தத்தில் நான்முகன் திருவந்தாதியும், திருச்சந்த விருத்தமும் திருமழிசையாழ்வார் பாடியவையே. 
ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், ஆண்டாள், பிராகார ஜகன்னாதர், அனுமார், தும்பிக்கை ஆழ்வார், வைஷ்ணவி தேவி, மணவாள மாமுனிகள் சன்னதிகளும் உள்ளது. கலைநயமிக்க ஒரு மண்டபமும் இருக்கிறது. ஜெகந்நாத விமானம். ப்ருகு தீர்த்தம் கோவிலுக்கு முன்னால் உள்ளது.
ஸ்தல புராணம்: ஒரு சமயம், பிருகு, வசிஷ்டர், பார்க்கவர், அத்ரி போன்ற ரிஷிகள் பூலோகத்தில் தவம் செய்ய சிறந்த இடம் எது என்று பிரம்மாவிடம் கேட்க, பிரம்மா, ஒரு தராசைக் கொண்டு வரச்சொல்லி, தராசின் ஒரு பக்கம் திருமழிசை ஸ்தலத்தையும், மற்றொரு தட்டில் உலகில் உள்ள மற்ற புண்ணிய ஸ்தலங்களையும் வைக்க, அப்பொழுது திருமழிசை இருந்த தட்டு கீழிறங்கியதாம். திருமழிசையின் பெருமையை உணர்ந்த முனிவர்கள் அங்கேயே தவம் செய்ய, அவர்கள் தவத்தில் மகிழ்ந்த மகாவிஷ்ணு இத்தலத்தில் ஜெகன்னாதப் பெருமாளாக திருமங்கைவல்லித் தாயாருடன் காட்சியளித்தார் என்கிறது புராணம். 

திருமழிசையிலேயே வீற்றிருந்த பெருமாள் கோயிலும், சிவாலயமான ஒத்தாண்டீஸ்வரர் கோயிலும் உள்ளது.

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் சுமார் 20 கி.மீ. தொலைவிலும், திருநின்றவூர் ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் கோயில் சுமார் 12 கி.மீ. தொலைவிலும் இருக்கிறது. அவற்றையும் ஒரே நாளில் தரிசிக்கலாம்.

வழி: திருமழிசை சென்னையிலிருந்து திருவள்ளூர் செல்லும் வழியில் இருக்கிறது. சென்னை-பூந்தமல்லி-திருவள்ளூர் மார்க்கம். சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் நெடுஞ்சாலையில் பூவிருந்தவல்லிக்கு அருகே 3 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. சென்னை கோயம்பேடு, தி.நகர், பூந்தமல்லி மற்றும் திருவள்ளூரிலிருந்து பேருந்து வசதிகள் இருக்கிறது.

உற்சவங்கள்: ஆனி பிரம்மோற்சவம், தை மாதம் மக நட்சத்திரத்தில் திருமழிசை ஆழ்வார் திரு அவதார உற்சவம், தெப்ப உற்சவம்

கோவில் திறந்திருக்கும் நேரம்: காலை 8 - 11 மணி , மாலை 6- 8.30 மணி

முகவரி:
அருள்மிகு ஜெகந்நாதப்பெருமாள் திருக்கோயில்,
திருமழிசை - 602 107
திருவள்ளூர் மாவட்டம்.

2 comments:

  1. நான் உங்கள் முழு நாராயணீயம் பாராயணத்தை கேட்க வேண்டும் எப்படி அது சாத்தியம்

    ReplyDelete