Saturday, May 31, 2014

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 92

ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 92, ஸ்ரீ நாராயணீயம் 92வது தசகம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ நாராயணீயம், ஸ்ரீமத் நாராயணீயம், நாராயணீயம், ஸ்ரீமன் நாராயணீயம், Narayaneeyam, Sree Narayaneeyam, Sriman narayaneeyam,Srimad Narayaneeyam

த³ஶகம் -92
கர்மம் கலந்த பக்தி 

वेदैस्सर्वाणि कर्माण्यफलपरतया वर्णितानीति बुध्वा
तानि त्वय्यर्पितान्येव हि समनुचरन् यानि नैष्कर्म्यमीश ।
मा भूद्वेदैर्निषिद्धे कुहचिदपि मन:कर्मवाचां प्रवृत्ति-
र्दुर्वर्जं चेदवाप्तं तदपि खलु भवत्यर्पये चित्प्रकाशे ॥१॥

வேதை₃ஸ்ஸர்வாணி கர்மாண்யப₂லபரதயா வர்ணிதாநீதி பு₃த்₄வா
தாநி த்வய்யர்பிதாந்யேவ ஹி ஸமநுசரந் யாநி நைஷ்கர்ம்யமீஶ |
மா பூ₄த்₃வேதை₃ர்நிஷித்₃தே₄ குஹசித₃பி மந:கர்மவாசாம் ப்ரவ்ருத்தி-
ர்து₃ர்வர்ஜம் சேத₃வாப்தம் தத₃பி க₂லு ப₄வத்யர்பயே சித்ப்ரகாஶே || 1||

1. செயல்களை, பற்றற்று, பலனில் விருப்பமின்றி செய்யவேண்டும் என்று வேதம் கூறுகிறது. அதனால் நான், பலனை எதிர்பார்க்காமல் வேதம் கூறிய செயல்களைச் செய்து, அவற்றை உம்மிடமே அர்ப்பணித்து ஞானத்தை அடையவேண்டும். வேதத்தால் புறக்கணிக்கப்பட்ட எந்த செயலிலும் என் மனம், வாக்கு செல்லாமல் இருக்க வேண்டும். அவ்வாறு விலக்கப்பட்ட ஏதாவது செயலை நான் செய்ய நேர்ந்தால், அதையும் உம்மிடமே சமர்ப்பித்து விடுவேன்.

यस्त्वन्य: कर्मयोगस्तव भजनमयस्तत्र चाभीष्टमूर्तिं
हृद्यां सत्त्वैकरूपां दृषदि हृदि मृदि क्वापि वा भावयित्वा ।
पुष्पैर्गन्धैर्निवेद्यैरपि च विरचितै: शक्तितो भक्तिपूतै-
र्नित्यं वर्यां सपर्यां विदधदयि विभो त्वत्प्रसादं भजेयम् ॥२॥

யஸ்த்வந்ய: கர்மயோக₃ஸ்தவ ப₄ஜநமயஸ்தத்ர சாபீ₄ஷ்டமூர்திம்
ஹ்ருத்₃யாம் ஸத்த்வைகரூபாம் த்₃ருஷதி₃ ஹ்ருதி₃ ம்ருதி₃ க்வாபி வா பா₄வயித்வா |
புஷ்பைர்க₃ந்தை₄ர்நிவேத்₃யைரபி ச விரசிதை: ஶக்திதோ ப₄க்திபூதை-
ர்நித்யம் வர்யாம் ஸபர்யாம் வித₃த₄த₃யி விபோ₄ த்வத்ப்ரஸாத₃ம் ப₄ஜேயம் || 2||

2. பிரபுவே! உம்மைத் தொழுவதும் ஒரு வகையான கர்மயோகம் ஆகும். அழகானதும், ஸத்வ வடிவானதும் ஆன ஒரு மூர்த்தியைக் கல்லிலோ, மண்ணிலோ, மனதிலோ தியானம் செய்து, சக்திக்குத் தகுந்தபடி பரிசுத்தமான சந்தனம் முதலிய வாசனைப் பொருட்களாலும், பூக்களாலும் தினமும் பூஜை செய்து, உமது அருளை அடைய வேண்டும்.

स्त्रीशूद्रास्त्वत्कथादिश्रवणविरहिता आसतां ते दयार्हा-
स्त्वत्पादासन्नयातान् द्विजकुलजनुषो हन्त शोचाम्यशान्तान् ।
वृत्त्यर्थं ते यजन्तो बहुकथितमपि त्वामनाकर्णयन्तो
दृप्ता विद्याभिजात्यै: किमु न विदधते तादृशं मा कृथा माम् ॥३॥

ஸ்த்ரீஶூத்₃ராஸ்த்வத்கதா₂தி₃ஶ்ரவணவிரஹிதா ஆஸதாம் தே த₃யார்ஹா-
ஸ்த்வத்பாதா₃ஸந்நயாதாந் த்₃விஜகுலஜநுஷோ ஹந்த ஶோசாம்யஶாந்தாந் |
வ்ருத்த்யர்த₂ம் தே யஜந்தோ ப₃ஹுகதி₂தமபி த்வாமநாகர்ணயந்தோ
த்₃ருப்தா வித்₃யாபி₄ஜாத்யை: கிமு ந வித₃த₄தே தாத்₃ருஶம் மா க்ருதா₂ மாம் || 3||

3. பெண்களும் மற்றும் சிலரும் அறியாமையினால் உமது கதைகளைக் கேட்காமல் இருக்கின்றார்கள். அவர்கள் இரக்கத்திற்குரியவர்கள். ஆனால், உயர்குலத்தில் பிறந்து உம்முடைய திருவடிகளை அடைந்தும் அமைதியற்றவர்களாய் இருப்பவர்களைக் குறித்து வருந்துகிறேன். பிழைப்பிற்காக யாகம் செய்து கொண்டு, பலமுறை உம்முடைய பெருமைகளை பற்றிக் கேட்டிருந்தும் உம்முடைய பெருமைகளில் நாட்டமில்லாமல், படிப்பால் கர்வம் கொண்டு இருப்பதால் அவர்கள் தவறுகள் செய்கின்றனர். தாங்கள், அவர்களைப்போல் என்னைச் செய்துவிடாமல் இருக்க வேண்டுகிறேன்.

पापोऽयं कृष्णरामेत्यभिलपति निजं गूहितुं दुश्चरित्रं
निर्लज्जस्यास्य वाचा बहुतरकथनीयानि मे विघ्नितानि ।
भ्राता मे वन्ध्यशीलो भजति किल सदा विष्णुमित्थं बुधांस्ते
निन्दन्त्युच्चैर्हसन्ति त्वयि निहितमतींस्तादृशं मा कृथा माम् ॥४॥

பாபோ(அ)யம் க்ருஷ்ணராமேத்யபி₄லபதி நிஜம் கூ₃ஹிதும் து₃ஶ்சரித்ரம்
நிர்லஜ்ஜஸ்யாஸ்ய வாசா ப₃ஹுதரகத₂நீயாநி மே விக்₄நிதாநி |
ப்₄ராதா மே வந்த்₄யஶீலோ ப₄ஜதி கில ஸதா₃ விஷ்ணுமித்த₂ம் பு₃தா₄ம்ஸ்தே
நிந்த₃ந்த்யுச்சைர்ஹஸந்தி த்வயி நிஹிதமதீம்ஸ்தாத்₃ருஶம் மா க்ருதா₂ மாம் || 4||

4. பக்தியற்ற சிலர் உம்முடைய பக்தர்களை நிந்திக்கின்றனர். “இவன் செய்த பாவங்களை மறைக்க ‘கிருஷ்ணா, ராமா’ என்று கூறுகிறான். வெட்கமற்ற இவன் பிதற்றல்களால் நான் பல விஷயங்களைச் சொல்ல முடியவில்லை. வீண் பொழுது போக்கும் என் சகோதரன் விஷ்ணுவை வழிபடுகிறான்” என்று உண்மையான பக்தர்களைப் பரிகாசம் செய்து சிரிக்கின்றனர். அவர்களைப்போல் என்னைச் செய்துவிடாமல் இருக்க வேண்டுகிறேன்.

श्वेतच्छायं कृते त्वां मुनिवरवपुषं प्रीणयन्ते तपोभि-
स्त्रेतायां स्रुक्स्रुवाद्यङ्कितमरुणतनुं यज्ञरूपं यजन्ते ।
सेवन्ते तन्त्रमार्गैर्विलसदरिगदं द्वापरे श्यामलाङ्गं
नीलं सङ्कीर्तनाद्यैरिह कलिसमये मानुषास्त्वां भजन्ते ॥५॥

ஶ்வேதச்சா₂யம் க்ருதே த்வாம் முநிவரவபுஷம் ப்ரீணயந்தே தபோபி₄-
ஸ்த்ரேதாயாம் ஸ்ருக்ஸ்ருவாத்₃யங்கிதமருணதநும் யஜ்ஞரூபம் யஜந்தே |
ஸேவந்தே தந்த்ரமார்கை₃ர்விலஸத₃ரிக₃த₃ம் த்₃வாபரே ஶ்யாமலாங்க₃ம்
நீலம் ஸங்கீர்தநாத்₃யைரிஹ கலிஸமயே மாநுஷாஸ்த்வாம் ப₄ஜந்தே || 5||

5. கிருத யுகத்தில், ஒளி பொருந்திய வெண்ணிறத்தில் உள்ள பிரும்மச்சாரியின் வடிவுடைய உம்மை, மக்கள் தவங்கள் செய்து மகிழ்விக்கின்றனர். திரேதா யுகத்தில், சிவப்பு நிறம் கொண்ட யக்ஞ புருஷனாகப் பூஜிக்கின்றனர். துவாபர யுகத்தில், சங்கு சக்கரம் தரித்த நீலமேக ஸ்யாமளனாக வணங்குகின்றனர். கலியுகத்திலோ நீலவண்ணனாக உம்மை நாமசங்கீர்த்தனத்தால் வழிபடுகின்றனர்.

सोऽयं कालेयकालो जयति मुररिपो यत्र सङ्कीर्तनाद्यै-
र्निर्यत्नैरेव मार्गैरखिलद न चिरात्त्वत्प्रसादं भजन्ते ।
जातास्त्रेताकृतादावपि हि किल कलौ सम्भवं कामयन्ते
दैवात्तत्रैव जातान् विषयविषरसैर्मा विभो वञ्चयास्मान् ॥६॥

ஸோ(அ)யம் காலேயகாலோ ஜயதி முரரிபோ யத்ர ஸங்கீர்தநாத்₃யை-
ர்நிர்யத்நைரேவ மார்கை₃ரகி₂லத₃ ந சிராத்த்வத்ப்ரஸாத₃ம் ப₄ஜந்தே |
ஜாதாஸ்த்ரேதாக்ருதாதா₃வபி ஹி கில கலௌ ஸம்ப₄வம் காமயந்தே
தை₃வாத்தத்ரைவ ஜாதாந் விஷயவிஷரஸைர்மா விபோ₄ வஞ்சயாஸ்மாந் || 6||

6. முரனை வென்ற முராரியே! இவ்வாறாகக் கலியுகம் மேன்மையுடன் விளங்குகிறது. கலியுகத்தில், சிரமமின்றி நாமசங்கீர்த்தனத்தால் உம்மைத் தொழுவதால், உம்முடைய அருளை மக்கள் விரைவிலேயே அடைகிறார்கள். அதனாலேயே, மற்ற யுகங்களில் பிறந்தவர்கள் கூட மீண்டும் கலியுகத்தில் பிறக்க விரும்புகிறார்கள். யாவற்றையும் அளிப்பவனே! இக்கலியில் புண்ணியவசத்தால் பிறந்த எங்களை, விஷத்தைப் போன்ற இந்திரிய சுகங்களைக் காட்டி ஏமாற்ற வேண்டாம்.

भक्तास्तावत्कलौ स्युर्द्रमिलभुवि ततो भूरिशस्तत्र चोच्चै:
कावेरीं ताम्रपर्णीमनु किल कृतमालां च पुण्यां प्रतीचीम् ।
हा मामप्येतदन्तर्भवमपि च विभो किञ्चिदञ्चद्रसं त्व-
य्याशापाशैर्निबध्य भ्रमय न भगवन् पूरय त्वन्निषेवाम् ॥७॥

ப₄க்தாஸ்தாவத்கலௌ ஸ்யுர்த்₃ரமிலபு₄வி ததோ பூ₄ரிஶஸ்தத்ர சோச்சை:
காவேரீம் தாம்ரபர்ணீமநு கில க்ருதமாலாம் ச புண்யாம் ப்ரதீசீம் |
ஹா மாமப்யேதத₃ந்தர்ப₄வமபி ச விபோ₄ கிஞ்சித₃ஞ்சத்₃ரஸம் த்வ-
ய்யாஶாபாஶைர்நிப₃த்₄ய ப்₄ரமய ந ப₄க₃வந் பூரய த்வந்நிஷேவாம் || 7||

7. இக்கலியில் உம்மிடம் பக்தி கொண்டவர்கள் பலர் உள்ளனர். திராவிட தேசத்தில் இன்னும் அதிகமாக உள்ளனர். காவிரி, தாமிரபரணி, வைகை போன்ற ஆற்றின் கரைகளிலும், மேற்கு நோக்கி ஓடும் நதிகளின் கரைகளிலும் மிகவும் அதிகமாக இருக்கின்றனர். நானும் இந்தப் பகுதியில் பிறந்தவன். உம்மிடம் சிறிதளவு பக்தி கொண்டிருக்கிறேன். ஹே கிருஷ்ணா! ஆசை என்னும் கயிற்றால் என்னைப் பிணைத்து என்னை ஏமாற்ற வேண்டாம். உம்மீது கொண்ட பக்தி முழுமையடையப் பிரார்த்திக்கிறேன்.

दृष्ट्वा धर्मद्रुहं तं कलिमपकरुणं प्राङ्महीक्षित् परीक्षित्
हन्तुं व्याकृष्टखड्गोऽपि न विनिहतवान् सारवेदी गुणांशात् ।
त्वत्सेवाद्याशु सिद्ध्येदसदिह न तथा त्वत्परे चैष भीरु-
र्यत्तु प्रागेव रोगादिभिरपहरते तत्र हा शिक्षयैनम् ॥८॥

த்₃ருஷ்ட்வா த₄ர்மத்₃ருஹம் தம் கலிமபகருணம் ப்ராங்மஹீக்ஷித் பரீக்ஷித்
ஹந்தும் வ்யாக்ருʼஷ்டக₂ட்₃கோ₃(அ)பி ந விநிஹதவாந் ஸாரவேதீ₃ கு₃ணாம்ஶாத் |
த்வத்ஸேவாத்₃யாஶு ஸித்₃த்₄யேத₃ஸதி₃ஹ ந ததா₂ த்வத்பரே சைஷ பீ₄ரு-
ர்யத்து ப்ராகே₃வ ரோகா₃தி₃பி₄ரபஹரதே தத்ர ஹா ஶிக்ஷயைநம் || 8||

8. முன்னொரு சமயம், பரீக்ஷித் என்ற அரசன், தர்மத்திற்குத் தீங்கு செய்த கலிபுருஷனைக் கொல்ல வாளை உருவினான். கலியிடம் நற்குணங்கள் இருந்ததால் அவனைக் கொல்லாமல் விட்டான். இக்கலியுகத்தில் உமக்குச் செய்யும் தொண்டுகள் மிக விரைவிலேயே பலனை அளிக்கும். தீய செயல்கள் பலன் கொடுப்பதில்லை. கலிபுருஷன் உம்முடைய பக்தர்களிடம் பயப்படுகிறான். அதனால், தங்களைத் தொழுவதற்கு முன்னரே, பக்தர்களுக்கு நோய் முதலியவற்றைக் கொடுத்து, பக்தியைத் தடை செய்கிறான். அதற்காக மட்டும் தாங்கள் அவனைத் தண்டிக்க வேண்டும்.

गङ्गा गीता च गायत्र्यपि च तुलसिका गोपिकाचन्दनं तत्
सालग्रामाभिपूजा परपुरुष तथैकादशी नामवर्णा: ।
एतान्यष्टाप्ययत्नान्यपि कलिसमये त्वत्प्रसादप्रवृद्ध्या
क्षिप्रं मुक्तिप्रदानीत्यभिदधु: ऋषयस्तेषु मां सज्जयेथा: ॥९॥

க₃ங்கா₃ கீ₃தா ச கா₃யத்ர்யபி ச துலஸிகா கோ₃பிகாசந்த₃நம் தத்
ஸாலக்₃ராமாபி₄பூஜா பரபுருஷ ததை₂காத₃ஶீ நாமவர்ணா: |
ஏதாந்யஷ்டாப்யயத்நாந்யபி கலிஸமயே த்வத்ப்ரஸாத₃ப்ரவ்ருத்₃த்₄யா
க்ஷிப்ரம் முக்திப்ரதா₃நீத்யபி₄த₃து₄: ருஷயஸ்தேஷு மாம் ஸஜ்ஜயேதா₂: || 9||

9. பரமனே! இந்தக் கலியுகத்தில் அதிக முயற்சியின்றி தங்களுடைய அருளைப் பெற்று முக்தி அளிக்கும் எட்டு வழிகளை முனிவர்கள் உபதேசித்துள்ளனர். அவை, கங்கை, கீதை, காயத்ரி, துளசி, கோபிசந்தனம், ஸாளக்ராம பூஜை, ஏகாதசி, உமது நாமமான அஷ்டாக்ஷரம் ஆகியவை. இந்த எட்டு விஷயங்களிலும் பற்றுள்ளவனாக என்னை ஆக்க வேண்டும்.

देवर्षीणां पितृणामपि न पुन: ऋणी किङ्करो वा स भूमन् ।
योऽसौ सर्वात्मना त्वां शरणमुपगतस्सर्वकृत्यानि हित्वा ।
तस्योत्पन्नं विकर्माप्यखिलमपनुदस्येव चित्तस्थितस्त्वं
तन्मे पापोत्थतापान् पवनपुरपते रुन्धि भक्तिं प्रणीया: ॥१०॥

தே₃வர்ஷீணாம் பித்ருணாமபி ந புந: ருணீ கிங்கரோ வா ஸ பூ₄மந் |
யோ(அ)ஸௌ ஸர்வாத்மநா த்வாம் ஶரணமுபக₃தஸ்ஸர்வக்ருத்யாநி ஹித்வா |
தஸ்யோத்பந்நம் விகர்மாப்யகி₂லமபநுத₃ஸ்யேவ சித்தஸ்தி₂தஸ்த்வம்
தந்மே பாபோத்த₂தாபாந் பவநபுரபதே ருந்தி₄ ப₄க்திம் ப்ரணீயா: || 10||

10. எங்கும் நிறைந்தவனே! எல்லாக் கர்மங்களையும் தொலைத்து உம்மிடம் சரணடைந்தவன், தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், பித்ருக்களுக்கும் கடன்படுவதோ, பணி செய்வதோ இல்லை. தாங்கள் அவனது மனதில் குடிகொண்டு, அவனது பாபங்களை முற்றிலுமாகப் போக்குகின்றீர். குருவாயூரப்பா! அதனால், என் பாபங்களினால் உண்டான எனது துன்பங்களைப் போக்கி, எனக்கு பக்தியை அளிக்க வேண்டும்.

No comments:

Post a Comment